யாயாவும் உன்னதே.. 11
யாயாவும் 11
புதிதாக ஒரு அழகு சாதன பொருளை அறிமுகப்படுத்துவது என்றால் அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.
ஏற்கனவே மார்க்கெட்டில் இருக்கும் அதே மூலக்கூறுகளை பயன்படுத்தாமல் புதிதாக யோசித்து தான் எப்பொழுதும் தனது ஆரா பிராண்டை அழுத்தமாக அனைவரும் மனதிலும் பதிய வைப்பான் ஜிஷ்ணு.
அது பல கட்ட சோதனைகளை கடந்து தரப் பரிசோதனை (குவாலிட்டி செக் ) எல்லாம் முடித்து தொழிற்சாலையில் உற்பத்திக்கு வரவே சில பல மாதங்கள் பிடிக்கும். ஏற்கனவே அவன் ஒரு பக்கம் அவற்றை செய்து கொண்டிருக்க.. இப்போது தான் அந்த ப்ராடெக்ட்டுக்கான வெப்சைட் டிசைனுக்காக ஆளைத் தேடி வெண்பாவை தேர்வு செய்தான்.
அவளுமே ஜிஷ்ணுவின் கற்பனைகளுக்கு அழகாக உரு கொடுத்து, ஒவ்வொன்றையும் நேர்த்தியாக செய்து கொண்டிருக்கும் பொழுது தான் மெல்லிய சலனம் ஜிஷ்ணுவுக்கு அவள் மேல்.. அதற்குக் காரணம் ஆரவ்வின் சாயல் என்றாலும் அது மட்டுமே காரணம் இல்லை.
எப்படி இந்த சாயல் ஒற்றுமை? என்ன யோசித்தும் இவள் என் நினைவுக்கு வரவே இல்லையே..? ஆனால் அவளின் நயனங்களின் பரிபாஷை.. இதழ்களில் மௌன சிதறல்கள்.. தலை சாய்த்து பார்க்கும் அந்த பாங்கு என்று அனைத்தும் ஏற்கனவே இவனுக்கு பழக்கப்பட்டது போலவே இருந்தது.
அதிலும் அவளை பார்க்கும் போதே ஏதோ ஒரு ஈர்ப்பு.. அந்த ஈர்ப்பின் பொருட்டு அவனின்றி வேறு யாரும் அவளை நெருங்கி விடாமல் அலுவலகத்தில் கூட அடை காத்திருந்தவன், இன்று கோபால் செய்ததில் ரௌத்திரத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறான்.
வெண்பாவிடம் சில கடைசி நிமிட மாறுதல்களை கூறி அதனை வெளிநாட்டில் லான்ச் செய்ய ஏதுவாக மாறுதல் வேண்டும் என்று கூறுவதற்காக.. அத்தனை முறை ஃபோன் அடித்தும் அவள் எடுக்கவில்லை..! சரி அவள் வீட்டுக்கே நேரில் சென்று விடுவோம் என்று தான் வந்தது.
எப்பொழுதுமே பவுன்சர்கள் சூழ உலா போக மாட்டான் ஜிஷ்ணு. இவனுக்கு பிரைவசி ரொம்ப முக்கியம்..! அஸ்வத் கூட செல்லும்போது முற்றிலுமாக தவிர்த்து விடுவான். அதைத் தாண்டி அபிசியல் ஆக இவன் செல்லும் வேலைகளில்.. உறவுகளுக்கு முன் தன் நிலையை நிலைநாட்ட.. அவர்களை தன்னை அண்ட விடாமல் காக்க.. மட்டுமே பவுன்சர்கள்..!
பெரும்பாலும் அவனின் அந்த தொழில் ஆளுமையை காட்ட பவுன்சர்களோடு வலம் வருவான் ஜிஷ்ணு..!
அன்று இரவு அதுபோல ஒரு தொழில்துறை பார்ட்டிக்கு செல்லும் முன் அவளிடம் அந்த மாறுதலை கூறிவிட்டு செல்லலாம் என்றே வந்தான்..! கூடவே பவுன்சர்கள்..!
இந்த அபார்ட்மெண்ட்டில் தான் வெண்பா இருக்கிறாள் என்று தெரியும். ஆனால் எந்த தளம்? எந்த வீடு ஒன்றும் தெரியாது.
“இத்தனை பெரிய அப்பார்ட்மெண்ட் எப்படி அவளை கண்டுபிடிக்க? அர்ஜென்டா நானும் போகணுமே. பார்ட்டி ஆரம்பிச்சிடுவாங்களே?” என்று கைக்கடிகாரத்தை பார்த்தபடி நின்றியிருந்தான்.
அப்படி அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் சுந்தரி அவனை கடந்து செல்ல.. அவளிடம் எதற்கும் விசாரிக்கலாம் என்று அவன் கேட்க..
“ஆரணி வெண்பா? ஆரவ் அம்மாவா? ஆமா.. நீங்க யாரு? எதுக்கு வெண்பாவ கேக்குறீங்க?” என்று அவள் திரும்பி வினா எழுப்ப..
அப்போ இவங்களுக்கு வெண்பாவை தெரிந்திருக்கிறது என்று சிரித்தவன் “நான் அவங்க பாஸ். வேலையில ஒரு கரெக்ஷன் சொல்லணும். போன் போட்டா அவங்க எடுக்கல..! அதுக்கு தான்..” என்றதும் அவனையும் அவன் காரையும் அதில் உள்ள பவுன்சர்களையும் அவள் சற்று பயத்தோடு பார்க்க..
“டோண்ட் பேனிக் சிஸ்டர். அவங்க எல்லாம் வர மாட்டாங்க. நான் மட்டும்தான்..” என்றவன், பவுன்சர்கள் “சார்..!” என்று இழுக்க..
“யூ கைஸ் ஸ்டே பேக்..!” என்றவன், சுந்தரியிடம் பேசிக் கொண்டே சென்றான்.
“என் எதிர்த்த வீடு தான் சார். வாங்க.. வாங்க..” என்று அவளை அழைத்து வந்தாள்.
ஆனால்.. அங்கே கண்ட காட்சி இருவரையும் அதிர வைத்தது. வெண்பா வீட்டு கதவை ஒருவன் அதுவும் நிர்வாணமாக நின்று உடைத்துக் கொண்டு இருக்க…
எப்படி இருக்குமாம் அவனுக்கு?
அதன் பிறகு நடந்தது எல்லாம் ஜிஷ்ணுவின் சதிராடல் தான்..!
அஸ்வத்துக்கு அழைத்து தொழில்துறை பார்ட்டியில் அவனை கலந்து கொள்ள சொல்லிவிட்டு இவளை அழைத்து வந்தவன் தங்க வைத்தது அவனது வீட்டில் தான்.
வரும்பொழுது மருத்துவரிடம் காண்பித்து விட்டு தான் அழைத்து வந்தான்.
ஆரவ்வோ ஜிஷ்ணுவை விட்டு இறங்கவே இல்லை. அத்தனை பயந்திருந்தான் பிள்ளை.
இரவெல்லாம் வெண்பாவின் அருகிலேயே தான் அமர்ந்திருந்தான் ஜிஷ்ணு. அவளின் அதிர்ச்சி தீர.. பயம் அகல நன்றாக தூங்கி எழ வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் தூக்க மாத்திரை கலந்த பாலை அவளுக்கு புகட்டி இருந்தான் ஜிஷ்ணு.
அதை குடிக்காமல் அவள் முரண்டு செய்ய.. ஆரவ்வை வைத்து தான் பேசிப்பேசி.. மெல்ல மெல்ல புகட்ட.. மருந்தின் வீரியத்தில் அவள் தூங்கினாள்.
அம்மாவையே சோகமாக பார்த்திருந்த ஆரவ்வுக்கு உணவு கொடுத்து அவள் அருகிலேயே தூங்க வைத்தான்.
இதெல்லாம் புதுவிது அனுபவமாக இருந்தது அவனுக்கு. ஒரு வித உணர்வுக் குவியல்களில் உலவிக் கொண்டிருந்தான் ஜிஷ்ணு..!
இந்த உணர்வுகள் அத்தனை பிடித்தது. இவை காலம் முழுவதும் வேண்டுமென மனம் ஏங்கியது.
அஸ்வத் கூட பார்ட்டி முடித்துவிட்டு வந்தவன் ஜிஷ்ணு அறையில் இருந்த வெண்பாவையும் ஆரவ்வையும் பார்த்து உள்ளுக்குள் அதிர்ந்தாலும் “என்ன அண்ணைய்யா.. என்ன ஆச்சு?” என்று கேட்க..
ஜிஷ்ணு அங்கு நடந்ததை ஒன்று விடாமல் அனைத்தும் கூறினான்.
“அவன சும்மாவா விட்டீங்க? அங்கேயே அடிச்சு நார் நார கிழிச்சு தொங்க போட்டு இருக்க வேண்டாமா? பொம்பள தனியா இருந்தா அவன் திமிரு தனத்தை காட்டுவானாமா? அவனை..!!” என்று அவனும் வரிந்து கட்டிக்கொண்டு சென்றான்.
அவனை முறைத்து பார்த்த ஜிஷ்ணுவோ “அடங்குடா அஸ்வத் பையா..! அப்பவே அவனை குப்ப லாரியில வாரிட்டு வர சொல்லி இருக்கேன். இந்நேரத்துக்கு நைய்ய புடைத்து அவனை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து இருப்பாங்க நம்ம ஆட்கள்..! இனிமே வெண்பாவுக்கு எந்த தொலையும் இருக்காது அவனால்” என்றான் ஜிஷ்ணு கர்வமாக..!
“அது அண்ணைய்யா…!” என்று அண்ணனை பெருமையாக பார்த்தான் அஸ்வத்.
“ஆனா இவங்க.. இங்க.. இப்படி.. ஏன்?” என்று ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் வெண்பாவை அவன் காட்ட… ஜிஷ்ணுவின் பார்வையோ வெண்பாவுக்கு அருகில் படுத்து ஒரு காலை வெண்பாவின் மீதும் போட்டுக்கொண்டு கைகளால் ஜிஷ்ணுவின் கையை இறுக பற்றி கொண்டு உறங்கும் ஆரவ்வில் தான் ஆழ்ந்து இருந்தது.
அஸ்வத்துக்கும் ஜிஷ்ணு என்ன நினைக்கிறான் என்று அவனை எண்ணங்கள் புரியத்தான் செய்தது.
“அண்ணையா இந்த வழக்கு.. இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கு..?” என்று ஆரவ்வை கண்களாக காட்டி மெல்லிய குரலில் அஸ்வத் கேட்க..
ஆம் என்று தலையாட்டியவன் “என்னால இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது ரா அஸ்வத். வெண்பா பத்தி எல்லா டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண பாரு.. இதுவும் மிஸ் ஆக கூடாது..! அவ படிச்ச எலிமிணட்டரி ஸ்கூல் இருந்து.. அவளோட எக்ஸ் ஹஸ்பண்ட் இருந்து. அவனைப் பத்தி டீடெயில்ஸ் எல்லாமே.. எல்லாமே.. என் கைக்கு வந்தாகணும் வித் இன் எ வீக்” என்றான் அழுத்தமாக.
“அண்ணைய்யா.. ஆல்ரெடி இவங்கள பத்தி விசாரிக்க சொல்லும் போது வேணாம்னு நீங்க தான் சொன்னீங்க.. இப்போ ஒன் வீக்ல கேட்டா.. எப்படி அண்ணையா முடியும்?” என்று விழி பிதுங்கினான் அஸ்வத்.
“ஏன்னா தம்பி பையா கிளி பறக்குறதுக்கு முன்னாடியே தகவல்களை எல்லாம் தெரிஞ்சு வச்சுகிறது நல்லதில்லையா? அப்புறம் அவள் பறந்து போனானு பாட்டா பாட முடியும்?” என்று அவன் நக்கலாக கூற..
சுத்தமாக குழப்பி போய் பாவமாக அண்ணைய்யாவை பார்த்தான் அஸ்வத்..
“மூணு நாள்ல நம்ம புது ப்ராடக்ட் லான்ச் ஏற்படாகியிருக்கு இல்லையா? அப்போ அந்த சாப்ட்வேர் எல்லாம் சால்வ் பண்ணிட்டு இந்த பச்சைக்கிளி தன் குஞ்சோட பறந்துரும்” என்றவன் வெண்பாவை தீர்க்கமாக பார்த்தான்.
“இல்ல.. அந்த வீடு அவங்களோட சொந்த வீடாச்சே.. அவங்க பயோடேட்டால இருக்கு.. எப்படி சொந்த வீட்ட விட்டுட்டு போவாங்க?”
“டேய் மடையா.. அம்மா என்கிற பிரம்மாஸ்திரம் எது வேணாலும் செய்யும்..!” என்று பல்லை கடித்தான் ஜிஷ்ணு.
“இப்ப புரிஞ்சிடுச்சு.. இப்ப புரிஞ்சிடுச்சு..!” என்ற தலையை தலையை ஆட்டினான் அஸ்வத்..!
“போய் தூங்கு முதல்ல..! நீ பார்ட்டில சாப்பிட்டது ஹெவி போல..” என்று அஸ்வத் சரக்கு அடித்ததை குறிப்பாக அவன் கூற, லேசாக அசட்டு சிரிப்போடு தலையை சொரிந்தவன் “லைட்டாதான் அண்ணைய்யா..!” என்றவன்,
“நீங்க எங்க தூங்குவீங்க?” என்று கேட்டான் அஸ்வத்.
வெண்பா ஜிஷ்ணுவின் அறையில் உறங்க.. கண்டிப்பாக அவன் அங்கே உறங்க மாட்டான் என்றே கேட்டான்.
தலையை சாய்த்து தன் கைகளை பற்றி இருக்கும் ஆரவ்வை கண்களால் காண்பித்து “இன்னைக்கு விடிய விடிய இங்கே தான்..!” என்றாள்.
இதை சற்றும் எதிர்பாராத அஸ்வத் “ஆனா வெண்பா.. அவங்க..!” என்று திணறினான்.
“இனி.. பழகிக் கொள்ளட்டும்..!” என்றவன் முகத்தில் அதே மந்திர புன்னகை..!
அவளை வீட்டுக்குள் அழைத்து வந்த நேரம் அவள் கண்களை கனிவுடன் பார்த்து “ஒன்னும் இல்ல வெண்பா.. நீ என்கிட்ட சேப்பா இருக்க..” என்று அவள் கன்னம் வருட, இதுவரை இருந்த அனைத்து அழுத்தமும் அவளுக்கு வெடித்துக் கொண்டு வர அவனின் மார்பில் விழுந்து கதறி அழுதாள் பாவை.
அவள் அழுகையின் காரணம் கோபாலின் செய்கை என்று உணர்ந்தவனுக்கு அதே தாண்டி பெண்ணின் மனதில் இருந்தவை தெரியவில்லை.. அவளின் அழுகை நொடிக்கு நொடி அதிகரிக்க.. அந்த கோபாலை எப்படி எப்படியெல்லாம் கொடுமை படுத்த வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கிவிட்டான் ஜிஷ்ணு. அவனின் தேற்றலில்
அதன்பின்னரே உறங்கினாள்..!
ஆரவ்வின் அருகில் அமர்ந்து இருவரையும் விழி தட்டாமல் பார்த்திருந்தான் ஜிஷ்ணு.
தன் கையை பாதுகாப்பாக பற்றி இருக்கும் அந்த பிஞ்சு கரத்தினை மறு கையால் வருடியவன், அந்த கையை மட்டுமல்ல அவனையும் தன் நெஞ்சு கூட்டில் பத்திரமாக வைத்து கொள்ள முடிவே எடுத்து விட்டான்.
லேசா கண்ணயர்ந்த ஜிஷ்ணுவின் செவிகளில் விசும்பல் புலம்பல் கேட்க.. மெல்ல விழித்து பார்க்க அங்கே அரற்றிக் கொண்டிருந்தாள் தூக்கத்திலேயே வெண்பா.
தன் கையில் இருந்து ஆரவ் விரல்களை பிரித்தெடுத்தவன் மெல்ல அவள் அருகில் சென்று
“வெண்பா..!” என்று அவளது தோளை தொட்ட நொடி..
“ஐயோ வேணாம்.. வேணாம்.. ஆரவ்வை விட்டுடு. அவன் பாவம் டா.. சின்ன புள்ள” என்று அழுது அரற்றியவளை கண்டு அதத்னை வேதனையாய் இருந்தது அவனுக்கு.
இன்னும் அந்த பாதிப்பில் இருந்து வெளி வராமல் மகனை நினைத்து தூக்கத்திலேயே கலங்குறாள் என்று புரிந்தவன், “ஆரவ்.. ஆரவ் என் கூட தான் இருக்கான். ஹி இஸ் சேஃப் நௌ வெண்பா” என்று ஆறுதல் மொழி ஜிஷ்ணு கூற..
அவனின் குரலை அந்நிலையிலும் உணர்ந்தவள், நிதர்சனம் உணரந்து அனைத்தையும் வார்த்தைகளால் வெளியிட இயலாமல் வெடித்து அழுதாள். ஜிஷ்ணுவுக்கு அவளின் இந்த அழுகையை காண சகிக்காது, அவள் தலையை இறுக பற்றி தன் மார்பில் அழுந்த பிடித்து.. மறுகையால் அவள் முதுகை நீவி விட்டவாறு “கூல்.. வெண்பா.. கூல். எந்த பயமும் இனி இல்லை..! நீயும் ஆரவ்வும் என் கூட தான் இருக்கீங்க. யாராலும் உங்களை நெருங்க முடியாது. என்னை தான்டி தான் எதுவும்.. எதுவுமே” என்று அத்தனை தீர்க்கமாக கூறிக் கொண்டே இருந்தான். ஆனால் அவளின் அழுகையோ நின்றபாடில்லை.
ஜிஷ்ணுவுக்கு என்ன ஆறுதல் மொழிகள் கூறி அவளை சரிப்படுத்த.. சமன்படுத்த என்று தெரியவில்லை. எவ்வாறு கூற வேண்டும் என்றும் தெரியவில்லை.. அவளின் இந்த அழுகையை காண சகிக்காதவன் அதை நிறுத்த எண்ணம் கொண்டு, தன் மார்பில் இருந்த அவள் முகத்தை பிரித்தெடுத்து அழுகையில் துடித்துக்கொண்டிருந்த அவளது இதழ்களை விழுங்கி, அவளுக்கு தன் ஆறுதலையும் பாதுகாப்பையும் தர விழைந்தான்.
இதுகாரும் இருந்த பயமும் அழுத்தமும் விலகி.. இவனின் ஆழ்ந்த முத்தம் அவளை கொஞ்சம் நிதானம் அடைய செய்தது. அவனும், அவன் இதழ்களை அவளின் இதழ்களிடம் இருந்து பிரிக்காமல் அதிலேயே லயித்து இருக்க.. அவளிடமிருந்து எதிர்வினை இல்லாத போக குனிந்து அவளை பார்க்க.. அவளோ மனதில் இருந்த பயம் எல்லாம் வடிந்துவிட தொய்ந்து உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.
மென் சிரிப்புடன் அவளை விடுவித்தவன் படுக்கையில் அவளை வாகாக படுக்க வைத்து.. அருகே கட்டிலில் சாய்ந்து அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் விழிகளும் மெல்ல மெல்ல ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றது.
“ஐயோ ஆரவ்வ.. விடு..விடு.. என் புள்ளைய விடுடா..” என்ற அலறலில் திடுக்கிட்டு விழித்தவன் அருகே பார்க்க படுக்கையில் தன் நிலையில் இல்லாமல் அங்கே இங்கே உருண்டு கொண்டே புரண்டுக்கொண்டே இருந்தாள் வெண்பா..!
அவளுக்கு கோபால் செய்த செயலின் அந்த தாக்கம் கனவிலும் வந்து இருக்கிறது என்பதை யூகித்தவன் அடுத்த நொடி அவள் படுக்கையிலிருந்து விழா வண்ணம் அவளை பிடித்து குலுக்கி “வெண்பா.. வெண்பா..” என்று உரக்க அழைத்தான்.
அவளோ கோபால் செய்கையால் மட்டுமல்ல அவளது கடந்த வாழ்க்கையினாலும் பாதிக்கப்பட்டு இருப்பது ஜிஷ்ணு அறியவில்லை. அவனோ அந்நேரத்திலும் வெண்பாவின் அழுகையை கண்டீ பொறுக்க முடியாமல் ஃபோன் எடுத்து கோபாலை இன்னும் நைய புடைக்க உத்தரவிட்டான் தன் ஆட்களிடம்.
அப்பொல்லா கனவின் தாக்கத்தில் இருந்தவளுக்கு ஜிஷ்ணுவின் குரல் கிஞ்சித்தும் காதில் விழவே இல்லை.. அந்நினைவுகளிலேயே உழன்றுக் கொண்டிருந்தாள். இவன் பிடித்ததும் இன்னும் திமிறி அவனிடமிருந்து விடுபட முயன்று தன் ஒட்டு மொத்த சக்தியையும் காட்ட ஆரம்பித்தாள்.
ஆண் தான்..! அவளை விட பலசாலி தான். ஆனால் இவளை எப்படி கையாள என்று புரியாமல் சிறிது நேரம் திகைத்து, பின் அவளை தன்னோடு இறுக்க அணைத்து, அவள் காதுகளில் மெல்ல மெல்ல “ஆரவ் சேப் ஆ இருக்கான்.. என் கூட தான் இருக்கான்” என்று திரும்பத் திரும்பக் கூற அது மெல்ல மெல்ல அவளின் மூளைக்கு சென்று அடைய.. கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்திற்கு வந்தவள் மீண்டும் உறக்கத்திற்கு சென்றாள்.
அவளையே கண்ணெடுக்காமல் சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான் ஜிஷ்ணு.
அவளின் மகன் மீதா பாசம் அவனை அதிசயிக்க வைத்தது. இத்தனை ரணத்திலும்.. ஆழ்ந்த மயக்கத்திலும் அவளது எண்ணங்கள் முழுவதும் தன் மகனைச் சுற்றியே.. அவனது பாதுகாப்பை பற்றியே.. சுழற்றி சுழன்றுக் கொண்டிருக்கிறதே என்று அவள் மீதான வியப்பு அதிகரித்தது..!
இப்படிப்பட்ட அன்னை தனக்கு வாய்க்கவில்லையே என்று சற்று பொறாமையாக கூட இருந்தது அருகில் உறங்கும் குட்டி குண்டான் மீது..!
மெல்ல அவன் சிகையை வருடி.. “யூ ஆர் சோ லக்கி சார்ம்..! இவ அம்மாவ கிடைச்சதுக்கு” என்று நெற்றியில் முத்தமிட்டான். தூக்கத்திலும் ஆரவ் ஈரமான இடத்தை துடைப்பதை கண்டு சிரிப்பு முகிழ.. இன்னும் அழுத்தமாக முத்தமிட்டான்.
இரு கை வளைவிலேயே இருவரையும் படுக்க வைத்துக் கொண்டான் ஜிஷ்ணு. இப்போதுதான் வாழ்க்கை முழுமை அடைந்தது போல ஒரு உணர்வு..!
இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க.. மூவராய் அவர்கள் இருக்கும் இந்த கணம் மிக பிடித்தது.
காலம் காலமாய் இப்படி குடும்பமாய் அவர்கள் வாழ வேண்டும் என்று அவா..!
மெல்ல வெண்பாவின் புறம் திரும்பியவன் “யாரு டி நீ? ஏன்டி இப்படி என்னை மாத்தின? குடும்பம் கல்யாணம் எல்லாம் வேணாம்னு ஒதுங்கி இருந்த என்னை இப்படி உன் புள்ளைக்கு இன்ஸ்டெண்ட் அப்பாவாய் மாத்தி வைச்சிருக்க.. இனி எப்படி டி நீங்க இரண்டு பேரும் இல்லாமல் இருக்க முடியும்? எப்படி டி நீங்க இல்லாம எனக்கு தூக்கம் வரும்?” என்று ஆண்டாண்டு காலமாய் அவனோடு அவள் வாழ்ந்தது போல.. அவளிடம் கேள்வி கேட்டான்.
“சொல்லு டி..?” என்று நெற்றி கன்னம் என்று மெதுவாக வருட.. அவளின் முகம் எந்த கவலைகளும் இன்றி நிர்மூலமாய் இருந்தது. ஜிஷ்ணுவும் மெல்ல மெல்ல கண் உறங்க.. அடுத்த அரைமணி நேரத்தில் மீண்டும் வெண்பா தூக்கத்திலேயே அரற்றிக் கொண்டே இருந்தாள் முணுமுணுப்பாக..
“என்ன உளறுறா?” என்று அவள் உதட்டு அருகில் காதை வைத்துக் கேட்டான் ஜிஷ்ணு.
“ஜிஷ்ணு.. ஆரவ் உங்க கூட இருக்கும் போது சேஃப்பா இருப்பான் எனக்கு தெரியும். ஆனா.. அவன.. அவன.. உங்க கூடவே வைச்சிக்குவீங்களா? எனக்கு தர மாட்டீங்களா?” என்று அழு குரலில் அவள் கேட்டதும் அவன் புரியாமல் அவளை பார்த்தவன் மீண்டும் உதட்டருகே காதை வைக்க.
“நோ ஜிஷ்.. நோ..!” என்றாள்.
“ஜிஷ்ஷூவா?” தன்னை அவள் இப்படி அழைத்துக் கொண்டு இருக்கிறாளா? என்று நினைத்தவனுக்கு பேருவுகை கொண்டது சட்டென காதல் புகுந்த உள்ளம். தென்றலாய் அவன் மனதை வருடி சென்றது அவளது வார்த்தைகள்..!
“ஆனா.. ஆனா.. ஆரவ் எனக்கு வேணுமே.. அவனில்லாமல் எப்படி இருப்பேன் நானு?” என்று அவள் உதட்டை பிதுக்கி தூக்கத்தில் அழுக..
“இல்ல டி இல்ல..! அவன் உனக்கே உனக்கு தான். உன் மகன் உனக்கு தான் சொந்தம்.. உன் இரத்தம் இல்லையா? அவனை நான் எப்படி பிரிப்பேன்..! எனக்கு நீங்க இரண்டு பேரும் தான் வேணும்..!” என்றான் அவனும் மென் குரலில்.. அதில் அவள் முகம் சிவக்க “ஜிஷ்..! என்னை.. என்னை.. புடிக்குமா?” என்று அவள் மிழற்ற..
“உன்னை தான் பிடிக்கும். உன்னை மட்டும் தான் பிடிக்கும்..” என்று அவள் மூக்கு பிடித்து ஆட்டினான் ஜிஷ்ணு.
“அப்ப ஆரவ்?” என்று அவள் முகம் விசும்ப கேட்க..
“உன்னால தான் எனக்கு ஆரவ் அறிமுகம். நீ தான் அவன எனக்கு கொடுத்த. அதனால.. உனக்கு தான் முதலிடம். அடுத்து தான் ஆரவ்..!” என்றான் தன் மனதினை அழகாய் கூறி..!
ஆனால்.. அடுத்து அவள் சொன்ன வாரத்தைகள் தென்றாலாய் இதுவரை வருடிய அவன் மனதில் புயலாய் புரட்டி எடுத்தது.
“ஆரவ்.. ஆரவ்.. எனக்கு மட்டுமல்ல புள்ள இல்ல.. ஜிஷ்.. ஜிஷ்.. உனக்கும்.. உனக்கும்..” என்றவள் உறங்கி போக..
அடுத்தடுத்து அவளை எப்படி எப்படியோ எழுப்பியும் எழவே இல்லை வெண்பா.
அவள் சொன்ன வார்த்தையில் அதிர்ந்து முகம் எல்லாம் வேர்த்து வியர்க்க.. அமர்ந்திருந்தவன், அர்த்தராத்திரியில் அஸ்வத்துக்கு அழைத்தான்.
“நீ என்ன செய்வியோ எது செய்வியோ தெரியாது அஸ்வத். எனக்கு த்ரீ டேஸ்ல வெண்பா பத்தி எல்லா டீடைல்ஸும் வேணும்” என்று உத்தரவிட்டான்.
“அண்ணைய்யா.. த்ரீ டேஸ்ல எப்படி முடியும்? தமிழ்நாட்டுக்கு டிராவலாகவே ஒரு நாளாகுமே..!” என்று அவன் விழி பிதுங்க..
“எப்படி போவியோ எனக்கு தெரியாது.! எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை..! எத்தனை ஆட்களை வேணாலும் ஹையர் பண்ணிக்கோ.. ப்ளைட்.. ஹெலிகாப்டர்.. கார்.. ட்ரெயின் எதுல வேணாலும் போங்க.. ஆனா எனக்கு த்ரீ டேஸ்ல இன் அண்ட் அவுட் வெண்பா பத்தி தெரியணும்” என்று உத்தரவாக..!
குழப்புவோம்ல..