யாயாவும் உன்னதே.. 5
யாயாவும் 5
தன் கையில் வைத்திருந்த கல்யாண புகைப்படத்தை வெறித்திருந்தாள் ஆரணி வெண்பா..!
அவளின் முகத்தில் கோபமும் ஆற்றாமையும் சேர்ந்தே பொங்கியது. அவள் அருகில் கல்யாண கோலத்தில் நின்றிருந்தவனுக்கு இவள் மீது துளி கூட விருப்பமில்லை என்பது அவன் முகத்தில் இருந்தே நன்றாக தெரிந்தது, இன்றைய வெண்பாவுக்கு..!
ஆனால்.. அன்றைய வெண்பாவோ வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணி ஏமாந்து போனவள்.. தன்னை போல அனைவரும் நல்லவர்கள் என்று நினைத்து அவர்கள் உண்மை முகம் கண்டு மிரண்டு போனவள்.
விரக்தியாக சிரித்துக் கொண்டாள் அந்த புகைப்படத்தைக் கண்டு ஆரணி வெண்பா..!
எல்லாம் ஒரு நாள் சரியாகும் என்று நினைத்து நினைத்தே.. அந்த ஒரு நாள் வாழ்வில் வரவே வராது என்று கண்டுகொண்டு மொத்தமாக அனைத்தையும் முடித்துக் கொண்டு வந்து விட்டாள் பெங்களூரை நோக்கி வெண்பா..!
பெங்களூருக்கு வந்து இதோ ஐந்து வருடங்கள் ஓடி விட்டது.. அவளும் இத்தனை ஆண்டுகளும் பிள்ளையோடு ஓடிக் கொண்டே தான் இருக்கிறாள் தனியாக..! தைரியமாக..!!
இந்த புகைப்படத்தை கூட என்றோ தூக்கி எறிந்து இருப்பாள். ஆனால் என்றாவது ஒருநாள் தேவைப்படும் என்று, விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்த நகலையும் பத்திரப்படுத்தி இருக்கிறாள்.
புகைப்படம் என்று அவர்கள் கல்யாணத்தின் சான்றையும் கல்யாண முறிவுக்கான சான்றையுமே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள் ஆரணி. ஆனால் அதனை இது நாள் கூட மகனிடம் காட்டியது கிடையாது..!
இவ்வளவு ஸ்மார்ட் ஆக யோசிக்கும் மகன் தந்தையை பற்றி கேட்காமல் இருப்பானா என்ன?
அதெல்லாம் அவன் கிண்டர் கார்டன் போன ஆரம்பத்திலேயே கேட்டு விட்டான்.
“மம்மா.. உனக்கும் அப்பாவுக்கும் டிஷ்யூம் டிஷ்யூமா மா? நீ மட்டும் தான் என் கூட இருக்க.. ஏன் அப்பா இல்லை? என் பிரண்ட் ஃபர்ரிக் ப்ரீத்திக்கு எல்லாம் அப்பா அம்மா ரெண்டு பேரும் இருக்காங்க?” என்று பிள்ளையின் அழகிய புரிதலை கண்டு அணைத்து உச்சி முகர்ந்தாள் ஆரணி வெண்பா..!
“ஆமாம் டா கண்ணா, உங்க அப்பாவுக்கு நானும் வேண்டாமாம் நீயும் வேண்டாமாம். நம்மள வேண்டாம் சொன்னவர் மட்டும் நமக்கு வேணுமாடா கண்ணா?” என்று கேட்டதும் அந்த வயதில் அந்த சின்ன வாண்டுக்கு என்ன புரிந்ததோ இல்லை என்ன ரோஷம் வந்ததோ
“நோ மா..! அவருக்கு நாம வேணாம்னா நமக்கும் அவர் வேணாம்..! எனக்கு மம்மா மட்டும் போதும்..!” என்று அழகாக கூறி மாலையென அன்னையின் கழுத்தை பிஞ்சு கரத்தால் கோர்த்து கன்னத்தில் முத்தமிட்ட மகனின் பாசத்தில் நெக்குருகி போனாள் வெண்பா.
இன்னும் இன்னும் எத்தனை ஓட்டம் வேண்டுமானாலும் மகனின் இந்த ஒற்றை முத்தத்திற்காக ஓடலாமே..!
ஆம்.. ஓடிக்கொண்டே தான் இருக்கிறாள்..! தன்னைத்தானே மேம்படுத்திக் கொண்டாள் அறிவிலும் தொழுநுட்பத்திலும்..!
அவள் படித்த ஒற்றை டிகிரி உதவாது என்று இத்தனை நாளில் கண்டுகொண்டாள். எப்படி டிசைனிங் செய்வது இன்னும் சில கம்ப்யூட்டர் சாப்ட்வேர் பற்றி எதெல்லாம் தெரிகிறதோ அத்தனையும் கற்றுக் கொண்டாள். பெண்களுக்கு நகைகள் எத்தனை உதவி என்று அவள் புரிந்த தருணம்..!
இதோ ஐந்து வருடம் முடிவில் ஈஎம்ஐயில் ஒற்றை படுக்கையறை கொண்ட பிளாட்டுக்கு சொந்தக்காரி ஆகி, மகனோடு தனி உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் ஜிஷ்ணுவின் வருகை..!
எத்தனையோ ஆண்கள் இவளின் இந்த தனித்த வனத்தின் கோலத்தில் ஈர்க்கப்பட்டு கட்டிக்கொள்ள கேட்டவர்களை விட ஒட்டிக்கொள்ள கேட்டவர்கள் தான் அதிகம்..!
ஒட்டிக்கொண்டால் எந்தவித கமிட்மெண்ட் இல்லை அல்லவா? இருக்கும் வரை இன்பமாக இருக்கலாமே என்று நினைப்பில் வேலை இடத்திலிருந்து அவள் தங்கியிருக்கும் பக்கத்து அப்பார்ட்மெண்டுக்காரன் வரை இன்னமும் நூல் விட்டு பார்ப்பவர்கள் விட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்..!
அப்படி எல்லாம் நீங்கள் விடும் நூலுக்கும்.. வடிக்கும் ஜொள்ளுக்கும்.. காட்டும் பணத்துக்கும்.. விழுந்து விட நான் அத்தனை ஸ்திரத்தன்மையற்றவள் இல்லை என்பது போல தன் மகனோடு சிங்க பெண்ணாகவே சிங்கிளாக அவர்களை எல்லாம் சமாளித்து வருகிறாள் வெண்பா.
பெற்றவர்கள் உடன்பிறந்தவர்கள் உதவி இல்லையா?
அவர்கள் அருகில் இல்லாமல் இருப்பதே பெரும் உதவிதான் என்று பெரும்பாலானவர்களின் கேட்டகரில் தான் இருக்கிறாள் வெண்பாவும்.
கையில் அதையெல்லாம் வைத்துக்கொண்டு அவள் தன் யோசனை மூழ்கி இருக்க..
“மம்மா நான் ரெடி.. இந்த டி-ஷர்ட் எப்படி இருக்கு?” என்று கிரே கலர் அவனுக்கு பிடித்த நரூட்டோ கார்ட்டூன் போட்டு இருந்த புல் ஸ்லீவ் டிஷர்ட் அணிந்து நின்ற மகனை கண்டவளுக்கு மற்றது அனைத்தும் மறந்து போக..
தன் கையில் இருந்தவற்றை எல்லாம் பீரோக்கு மேல் இருந்த ஒரு பெட்டியில் பத்திரப்படுத்திவிட்டு “இன்னும் 5 மினிட்ஸ் அம்மாவுக்கு கிளம்பி வந்துறேன்” என்று மகனுக்கு மேட்ச் ஆக அதே கலரில் அவளும் ஒரு டீசர்ட்டில் கிளம்பி வந்தாள்.
“மம்மா… ஆரவ் மேட்சிங்.. மேட்சிங்..!” என்று குதித்து கைத்தட்டி ஆர்ப்பரித்தான் ஆரவ்.
“ஒன்னு அம்மா சொல்லு.. இல்ல மம்மி சொல்லு? இரண்டும் இல்லாம இது என்னடா மம்மா..?” என்று எவ்வளவோ முறை ஆரவ்வை திருத்த பார்த்து தோற்றுவிட்டாள் ஆரணி வெண்பா.
அவனோ சற்றே உணர்ச்சிவசப்படும் போது அதாவது அழுகை நேரம் அம்மா தேவைப்படும் நேரம் மட்டும் அவன் வாயிலிருந்து அம்மா என்ற வார்த்தை வரும். மற்ற நேரத்தில் இந்த மம்மா தான்..!
கிண்டர் கார்டனில் படித்த போது கூட இருந்த பிள்ளைகள் பழக்கம் தொற்றிக் கொண்டது இவனிடம். இன்னும் விடவில்லை..!
“சரி வா..!” என்று மகனுக்கு தேவையானவற்றை தனது பேக்கில் எடுத்துக்கொண்டு மகனுடன் அவனுக்கு பிடித்த கார்ட்டூன் படம் முபாஷா பார்க்க கிளம்பிவிட்டாள் வெண்பா பிரபலமான ஒரு மாலுக்கு..!
சம்பாதிப்பதே மகனுக்காக..! அவனின் சந்தோஷத்திற்காக.. அவனின் எதிர்காலத்திற்காக.. அப்படி இருக்கும்போது அவன் சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றி வைப்பதில் என்ன தவறு?
அதனால மாதத்துக்கு ஒரு முறை அம்மாவும் பிள்ளையும் இப்படி கிளம்பி விடுவார்கள். எப்பொழுதும் சினிமா என்று இல்லை அவனுக்கு பிடித்த பார்க்.. விளையாட்டு திடல்.. எக்சிபிஷன்.. மால் அதில் இருக்கும் விளையாட்டு அரங்குகள் என்று..!
இவர்கள் சென்ற நேரம் ஏகப்பட்ட கூட்டம். இவளுக்கென்று வழங்கப்பட்ட இடமோ ஆண்கள் கூட்டம் ஓரத்தில் இருந்தது அங்கே பிள்ளையை வைத்துக்கொண்டு இவளுக்கு அமர விருப்பமே இல்லை..!
அங்கு இருக்கும் ஆளிடம் கூற “சாரி மேடம்.. இதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது. வேணுமென்றால் இப்போதைக்கு ஃப்ரீயா இருக்குற இடத்துல உட்காருங்க. அங்கே யாரும் வந்தா.. அவங்க ஓகேனா நீங்க ப்ளேஸ் எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கலாம்” என்றார்.
மகனின் ஆர்வத்தைக் கண்டு அவ்விடத்திலேயே அமர்ந்து விட்டாள் வெண்பா.
சிறிது நேரத்திலேயே “இட்ஸ் மை சீட்..!” என்ற காதருகே கேட்ட குரலில் திடுக்கிட்டு அவள் பார்க்க.. இலகுவான டீசர்டீல் நின்றிருந்தான் ஜிஷ்ணு.
“இல்ல.. நான்.. நாங்க.. பக்கத்துல இருக்க சீட்டு தான் புக் பண்ணி இருந்தோம். பட்.. அங்க ஜென்ட்ஸ் கேங்காக வந்திருக்காங்க. நான்.. வந்து.. தனியா வந்து இருக்கிறதுனால இங்கே உட்கார்ந்து கொள்ளவா? நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறிங்களா ப்ளீஸ்?” என்று ஜிஷ்ணுவை அங்கே கண்ட அதிர்ச்சி நீங்காமல் கேட்டாள் வெண்பா.
சத்தியமாக இங்கே வெண்பாவையும் அவள் மகனையும் எதிர்பார்க்கவே இல்லை ஜிஷ்ணு.. இனிய அதிர்ச்சிதான் அவனுக்கும்..!
சில சமயம் இப்படித்தான் கிறுக்குத்தனம் தோன்றும் ஜிஷ்ணுவுக்கு..! அஸ்வத்தை அழைத்துக் கொண்டு இப்படி அவனுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு திரைப்படத்தில் வந்து அமர்ந்து கொள்வான்.
இன்றும் டிக்கெட் புக் செய்துவிட்டு அஸ்வத்தை அழைக்க..
“ஐயோ அண்ணையா.. ஆளை விடுங்க..! சண்டே எனக்கே எனக்கான நாள். நான் புது காதலியை வலை போட்டு தேடிட்டு இருக்கேன்.. உங்க கூட மாலுக்கு வரேன் ஆனா முஃபாஷா பாக்குற அளவு எல்லாம் நான் சின்ன புள்ள கிடையாது ஆள விடுங்க” என்று நழுவி விட்டான்.
சரி யாராவது கேட்டால் டிக்கெட் கொடுத்து விடலாம் என்றபடி தான் உள்ளே நுழைந்து இருந்தான். இனிய அதிர்ச்சியாக வெண்பாவும் அவள் மகனும்..!
முகத்தில் தோன்றிய குறுகுறு புன்னகையை மீசைக்கடையில் ஒளித்துக் கொண்டு தாடியை தடவியபடி தோளை ஸ்டைலாக குலுக்கியவன் “ஓகே வெண்பா.. நான் பக்கத்து சீட்ல உட்கார்ந்துகிறேன்” என்று அவள் அருகில் அமர்ந்துக் கொண்டான்.
அவள் அருகில் குழந்தை அமர்ந்திருந்த இருக்கைக்கு அடுத்து அவன் அமர்ந்தேன். அவர்கள் இருவர் நடுவில் குழந்தை அமர்ந்து கொள்ள, வெண்பா எக்கி எக்கி பார்த்தாள்.
“வாட்? யாரும் வரணுமா இல்ல யாரையும் எதிர்பார்க்கிறீயா?” என்று அவனின் கூர் வார்த்தைகளில் அவள் சட்டென்று திரும்பி இல்லை என்று வேகமாக தலையாட்டியவள் “இல்ல உங்க பாடிகார்ட்..!” என்றாள் திக்கி திணறி..
“நான் வெளியூர் போனா தான் பாடி கார்ட்ஸ் எல்லாம் கூட்டிட்டு போவேன். பெங்களூரில் இல்லை..!” என்று அவன் தலை அசைக்க..
“இல்ல பவுன்சர் சொல்லல. உங்க கூடவே ஒருத்தர் இருப்பாரே.. ம்ம்ம்.. பேரு?” என்று அவள் யோசிக்க..
அஸ்வத்தை தான் கூறுகிறாள் என்பது புரிய அவனுக்கு சிரிப்பு வந்தது.
“அவனுக்கு முபாஷாவை விட முக்கியமான வேலை இருக்கு அதுக்கு போயிருக்கான்” என்றான் நமட்டு சிரிப்போடு.
படம் ஆரம்பிக்கும் முன் ஆரவ் எழுந்து நின்று ஆடிக் கொண்டிருந்தான். ஆரவ் கொஞ்சம் சூட்டுகையான குழந்தைதான். ஆனால் வெளியிடத்தில் அம்மாவின் பாசத்தின் பால் அவனை கட்டிப்போட்டு வைத்திருப்பாள் ஆரணி வெண்பா.
ஆனால்.. இம்மாதிரி வெளியே வந்தால் அவனை பெரிதாக கட்டுப்படுத்திட மாட்டாள். அவன் போக்குக்கு விளையாட விடுவாள். இப்பொழுதும் குழந்தைகளை கட்டிப்போட்டே வைத்திருக்க வேண்டுமா என்ன?
இன்றும் அதுபோல அவன் கைதட்டுவது எழுந்து நிற்பது.. சத்தமிடுவது.. என்று சேட்டைகள் செய்ய.. ஜிஷ்ணு என்ன சொல்வானோ என்று பயந்து அவனை அமைதி படுத்த முயன்றாள். ஆனால் முடியவில்லை.
குழந்தையை சமாதானப்படுத்த அவள் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தாள்.
படம் துவங்குவதற்கு வேறு சில படங்களின் டிரைலர்கள் விளம்பரங்கள் ஒளிபரப்ப தொடங்கின. அதைப் பார்த்த ஆரவ் முன்னில் இருக்கும் சீட் மறைப்பதாக கூறி கை வைக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் ஜிஷ்ணுவை சிரம படுத்துவதை கண்ட வெண்பா அவனிடம் சாரி கூறுவது போல் கண்ணிலே சைகை காட்டி “ப்ளீஸ்..” என்று உதட்டை குவித்து இழுக்க..
அந்த மெல்லிய இருட்டிலும் அவளில் செர்ரி நிற இதழ்கள் ஜிஷ்ணுவின் கண்களை கவர்ந்தது.
இமை தட்டாமல்.. விழிகள் ஆடாமல் அவளையே பார்த்திருந்தான் ஜிஷ்ணு..!
அவனது சப் கான்ஷியஸ் மைண்ட் அடித்து சொன்னது.. இவளை எனக்கு ஏற்கனவே அறிமுகம் இருக்கிறது என்று..!
அவளது இந்த சின்ன சின்ன கண் அசைவுகள் உதட்ட அசைவுகள் கண்டபோது மீண்டும் அதே உணர்வு..! இந்த பெண்ணை எங்கோ கண்டது போல் தோன்றிக் கொண்டே இருந்தது ஜிஷ்ணுவுக்கு.
“இட்ஸ் ஓகே வெண்பா.. இருக்கட்டும் குழந்தைங்கன்னா இப்படித்தான் இருப்பாங்க.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல..” என்றவனும் ஆரவ்வின் குறும்புத்தனதிலும் அவனை கண்டிக்காமல் அதிகாரமாக திட்டாமல் அமைதியாக எடுத்துக் கூறும் வெண்பாவின் தாய் அன்பிலும் ஈர்க்கப்பட்டு அவர்களையே பார்த்து இருந்தான் ஜிஷ்ணு.
ஏதோ தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஒளிபரப்பப்பட்ட அதே ட்ரெய்லர் தொடர்ந்து ஒளிபரப்ப தியேட்டரில் இருந்த ஆட்களிடம் இருந்து கூச்சல் சத்தம் விசில் என்று காதை நிறைத்தது கூச்சல் ஒலிகள்..!
அப்போது வந்த திரையரங்கு வேலையாட்கள் ஒளிபரப்பு செய்வதில் படம் திரையிடுவதில் சிறிது தொழில்நுட்பக் கோளாறு எனவே சிறிது தாமதமாக பட ஆரம்பிக்கப்படும் என்று கூறி மன்னிப்பு கேட்டனர்..!
அந்த சமயத்தில் ஆரவ் அதிகம் சேட்டை செய்தவன், “மம்மா.. முபாஷாவை போட சொல்லுங்க.. நான் சீக்கிரம் பார்க்கணும். நாளைக்கு போய் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் அத பத்தி சொல்லணும் போட சொல்லுங்க மம்மா..” என்று ஆர்ப்பாட்டம் பண்ணினான்.
ஜிஷ்ணு எழுந்து அவள் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டு குழந்தையை கார்னர் சீட்டிற்கு மாற்றி அமரச் செய்தவன், “இப்பதானே படம் டெலிகாஸ்ட் பண்ண கொஞ்சம் ப்ராப்ளமும் சொன்னாங்க. கண்டிப்பா போடுவாங்க..! நீ இப்ப கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாலும் ஃபிலிம் போட மாட்டாங்க..” என்ற ஜிஷ்ணுவின் பேச்சு அன்னையைப் பார்த்தான் மகன்.
அவளுக்கோ ஜிஷ்ணு அருகே அமர்ந்ததுமே உள்ளுக்குள் வெடவெடக்க ஆரம்பித்தது. எழுந்து ஒரு சீட் தள்ளி உட்காரலாம் என்று எண்ணியவளால் அதை செயலாற்ற முடியவில்லை. கைகள் கால்கள் எல்லாம் ஒரு வித நடுக்கத்திலேயே இருந்தது. ஜிஷ்ணுவின் அருகாமை அத்தனை பாதித்தது வெண்பாவை.
சட்டென்று அவளை திரும்பி பார்த்தான் ஜிஷ்ணு. அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் திடுமென தன்னை திரும்பி பார்ப்பான் என்று எதிர்பார்க்கவில்லை..!
அவனின் அதிக நெருக்கத்தில் அவள் இருக்க.. நெஞ்சுக்குள் ஏதோ குறுகுறுத்தது. வயிற்றுக்குள் இனம் புரியாத உணர்வு பிசைந்தது..!
பின்னால் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள் இவ்வுணர்வினை விரட்ட..
நெற்றி முடிச்சோடு சுழிய ஆரவ்விடம் தன் போனை கொடுத்து “இதுல கேம் இருக்கு பிலிம் ஆரம்பிக்கிற வரைக்கும் விளையாடு” என்றதும், அவனும் அம்மாவை பார்க்க..
“உங்க அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. நீ விளையாடு..!” என்று அவனிடம் ஃபோனை கொடுத்துவிட்டு இப்பொழுது சற்று நெருங்கி வெண்பாவின் அருகே வந்தவன்,
“எதுக்கு உன் கண்ணுல இப்படி ஒரு பயம் என்னை பார்த்து..!” என்று அவள் கண்களை கூர்ந்து பார்த்தான் அவனின் பிரத்தியேக ஆண் வாசமும்.. அவள் கன்னத்தருகே உரச துடித்து துடிக்கும் அவனது கற்றை மீசையும்.. சற்று முளைத்திருந்த
தாடி முடி கற்றைகளும்.. அவளுக்கு உள்ளுக்குள் பிரளயத்தையே உண்டாக்கிக் கொண்டிருந்ததை அவன் அறியவில்லை..!
தொடரும்..