1 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

1-புயலோடு பூவுக்கென்ன மோகம்



       அதிகாலை  வேளை புள்ளினங்கள் எல்லாம் பூபாளம் பாடி பூமியை விடியலுக்கு ஆயத்தம் செய்து கொண்டு இருந்தன. சூரியன் கிழக்கு திசையில்  மெல்ல மெல்ல  மேலே எழும்பிக் கொண்டு இருந்தார். ஆதித்தனாரின் செங்கதிர் பட்டு  மலர்கள் எல்லாம்  மலர்வதற்காக மலர்ந்தும் மலராத பாவனையில் காத்திருந்தன.



  சென்னையில் உள்ள மிகப்பெரிய மண்டபம் அது. மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே திருமணம் செய்யக்கூடிய வகையில் நவீன வசதிகள் கொண்ட முழுவதும் குளிருட்டப்பட்ட  திருமண மண்டபம்.



   மண்டபத்தின் முகப்பு பகுதியில் வாழைமரங்கள் இருபுறமும் கட்டி பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆர்க்கிட் மலர்களாலும் தென்னங்கீற்றாலும் அலங்கரிப்பட்ட அலங்கார வளைவு 



  அதன் கீழே அழகான ஆர்க்கிட் மலர்கள் கொண்டு மணமக்களின் பெயர்களை தாங்கி நின்றது அழகான பெயர் பலகை.



           வீராசாமி

              வெட்ஸ்

             நிகிதா



    மண்டபத்தில் பட்டு சரசரக்க வைர நகை ஜொலி ஜொலிக்க.. பெண்கள் ஒரு புறம் தங்கள் பெருமைகளை வாய் கொள்ளா சிரிப்புடன்  தம்பட்டம் அடித்து கொண்டு இருக்க… 

 

ஆண்களோ கோட் சூட் சகிதமாக… வைர மோதிரங்கள் பளபளக்க.. தங்கள் தொழில் முறை சார்ந்த பேச்சில் மூழ்கியிருக்க..



    இந்த பகட்டிற்கும் பதவிசுக்கும் சம்மந்தம் இல்லாமல் இதை கண்டு மிரண்டு ஒரு ஓரமாக அமர்ந்து தங்களை மறந்து சற்று விழி விரித்து  பார்த்து கொண்டு இருந்த மிகவும் எளிமையான எதார்த்தமான கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் ஒரு புறம் என களை கட்டியது அந்த மண்டபம்.

 

   அழகான வாசனை நிறைந்த மலர்கள் கோல்டன் நிறம் கொண்ட செயற்கை தூண்களில் கொடி போல படரவிட்டு இருக்க.. ப்ளாஸ் லைட்களை உள் வாங்கி ஒளி சிதறல்களாக சிதற வைக்கும் அழகான வடிவில் அமைக்கப்பட்ட சிறு சிறு கண்ணாடி சில்லுகளை தாங்கிய சரங்களை அங்காங்க தொங்க விடப்பட்டும்…மேடையின் நடுவே திருப்பதி வெங்கடாஜலபதியே நேரில் எழுந்தருளியது போல… தத்ரூமபாக கைத் தேர்ந்த கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டும் நேர்த்தியாக இருந்தது அந்த மணமேடை.

 

மேடையில் நின்று கொண்டு இருந்த  இரு குடும்பத்தாரின் முகங்களிலும் நிறைவான புன்னகை.. மனம் நிறைந்த மகிழ்ச்சி.. இரு குடும்பமும் ஒருக்கொருவர் சம்மந்தம் இல்லாத புது உறவுகள் அல்ல… 

 

இரத்த சொந்தங்கள் கொண்ட உறவுகள் தான். ஆனால் இரு குடும்பத்தின் செல்வ நிலை தான்  இவர்களை தள்ளி நிறுத்தி வைத்திருந்தது. இன்று இந்த திருமணம் மூலம் இணைந்த மகிழ்ச்சி எல்லார் மனங்களிலும்…

 

ஆனால் மனம் கொள்ளா காதலோடும்… கனவுகளோடும்… எண்ணற்ற எதிர்பார்ப்புகளோடு வாழ்வில் அடி எடுத்து வைக்க வேண்டிய இருவரின் பார்வையில் அனல் பறந்தது.இவர்களின் பார்வையில் தகித்த அனலில் இவர்கள் முன் இருந்த  ஓம குண்டத்தின் அக்னி  ஜ்வாலை கூட சற்று மிரண்டு அடக்கி போனது.

 

சொக்கலிங்கம் மங்களம் தம்பதியரின் மூத்தவள் விசாலா அய்யாவு மகன் வீராசாமி.

 

இளையவன் வெங்கட்  ரோகிணி மகள் நிகிதா. இவர்கள் இருவருக்கும் தான் இன்று திருமணம். இவர்களுக்கு ஒரு சதவீதம் கூட ஒப்புதல் இல்லை  தாத்தாவின் வலுகட்டாயத்தில் நடக்கும் திருமணம்.



  ஒருவரை ஒருவர் உருத்து விழித்துக் கொண்டு அமரந்திருந்தனர்.ஐயர் மந்திரம் சொல்ல அதை திருப்பி கூட சொல்லவில்லை. ஐயர் தாலி எடுத்து கொடுக்க… அதை வாங்காமல் வீராச்சாமி அவரை முறைக்க..



ஐயர் பாவம்… அவரும் தான் எத்தனை கல்யாணம் பண்ணி வைத்து இருக்கிறார்.இது போல மணமக்களை பார்த்தில்லை. 

 

தாலி தானடா எடுத்து கொடுத்தேன். அதுக்கு இவ்வளவு டெரரா பார்க்கனுமா.. என மனதில் நிந்தித்து கொண்டார்.

 

தாத்தா சொக்கலிங்கம் “வீரா தாலி கட்டு” என்றார் அழுத்தமான குரலில்…. ஏதும் செய்ய இயலாத நிலையில் தன்னை நிறுத்திய தன் குடும்பத்தாரை வெட்டும் பார்வை பார்த்தவன். நிகிதா காதில் “உன் திமிரை எல்லாம் அடக்கறன்டி” என கோபமாக சொல்லியவாறே தாலி கட்டினான்.

  

 

  போடா நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளா.. என பதிலுக்கு  இளக்காரமாக பார்த்தாள் நிகிதா.அதில் இன்னும் கடுப்பான வீரா..

 

“அக்னியை வலம் வாங்கோ” என்று ஐயர் சொல்ல.. அவள் கையை நொறுங்கும் அவளுக்கு இறுக்கி பிடிக்க.. வலி தாங்காமல் தன் கூரான நகத்தை வைத்து அவன் உள்ளங்கையில் அழுத்த…

 

சட்டென அவள் கையை விடுத்து வீரா முன்னே நடக்க… இவன் பின்னால் நான் நடப்பதா…அவனை முந்தி நிகிதா நடக்க பார்க்க…

 

அடுத்தும் சங்கும் மோதிரமும் எடுக்கும் போட்டியிலும் தண்ணிரீல் ஒருவர் கையை ஒருவர் கிள்ளி கொள்ள….இவர்கள் இருவரும் ஏட்டிக்கு போட்டியாகவே செய்தனர்.

 

நிகிதா காலை பிடித்து மெட்டி போட முடியாது என வீரா சொல்லி விட.. விசாலா தான்..  தான் போட்டு விடுவதாக கூறி போட்டுவிட்டார்.

 

சென்னையில் உள்ள நிகிதா வீட்டிற்கு முதலில் சென்றனர் மணமக்கள். ஆரத்தி எடுத்து அழைக்க…  பால் பழம் கொடுக்க..வீரா சாப்பிட்டு விட்டு நிகிதாவிடம் கொடுக்க..

 

“ச்சீசீ.. எச்சி.. நானு சாப்பிடமாட்டேன்” முகத்தை சுழித்து அருவருப்பாக சொல்ல…

 

வீரா அவளை தீப்பார்வை பார்க்க.. போடா என முணுமுணுத்து வேறுபுறம் முகத்தை திருப்பி கொண்டாள்.

 

அவள் செயலில் மங்களம் பாட்டி ரோகிணியை பார்க்க.. மாமியாரின் கண்டன பார்வையில் மிரண்டு ரோகிணி மகளிடம்

 

“நிக்கி வாங்கி சாப்பிடு பேபி” என கெஞ்சி சாப்பிட வைத்தார்.

 

அடுத்து காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமரையூரில் உள்ள வீராவின் வீட்டிற்கு சென்றனர். வீராவின் அக்கா பொன்னி ஆரத்தி எடுக்க… இருவரும் இடைவெளி விட்டு தள்ளியே நிற்க…அங்கு நிகிதா விளக்கு ஏற்றி பூஜை செய்ய… வீராவோ வெளியில் வந்து அமர்ந்து கொண்டான்.



அங்கும் பால் பழம் சாப்பிட தகராறு தான்.மதிய உணவை முடித்து கொண்டு மாலை சென்னைக்கு சென்றனர். 

 

இரவு.. தனிமை ..கொடுமை.. இவர்களோடு…

 

நிகிதாவின் அறை வாசனைமலர்களாலும் அந்த வாசனை போதவில்லை என வாசனை மெழுகுவர்த்திகளாலும் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

 

கட்டிலின் அருகில் சிறு மேஜை மேல் பழங்கள் இனிப்பு வகைகள் அழகான அலங்கார தட்டுகளில் இருநதது. வெள்ளி சொம்பில் பாலும் இருந்தது. ஆம் பால் சொம்பும்  இருந்தது.

 

முன்பே சொல்லிவிட்டாள் நிகிதா.”டிபிக்கல் பொண்ணுங்க மாதிரிலாம் நான் பர்ஸ்ட் நைட்டுக்கு பால் சொம்போட போகமாட்டேன் அவனோட என் ரூமை ஷேர் பண்ணிக்கறதே பெரிசு அதுவும் நீங்க எல்லாம் திட்டறதால ஓகேனு சொன்னேன்” என்றாள்.

 

அவளின் பேச்சில் ரோகிணி பதறி போய் மாமியாரையும் நாத்தனாரையும் பார்க்க.. மங்களம் பேத்தியை முறைத்துக் கொண்டு இருக்க.. விசாலாவோ அடம்பிடிக்கும் சிறு குழந்தையை பார்ப்பது போல தம்பி மகளை வாஞ்சையோடு பார்த்து கொண்டு இருந்தார்.

 

மங்களம்”அவனை மரியாதை இல்லாமல் பேசின பல்லப் பேத்துடுவேன் பார்த்துக்கோ.. உன்னவிட வயசுல மூத்தவன் புருஷன்னு மட்டு மரியாதை வேணாம்” என திட்ட..

 

விசாலா தான்” விடுங்கம்மா.. சின்னபுள்ள தான.. போக போக சரியாயிடும்”

 

“யாரு இவ சின்னபுள்ள.. இவ செஞ்ச காரியம் எல்லாம் சின்னபுள்ளைங்க செய்யறதா..”

 

உடனே நிகிதா முகம் சுண்டி போக அமைதியாக தலையை குனிந்து கொண்டாள். மாமியாரின் பேச்சில் மகளின் வாடிய முகம் கண்டு ரோகிணியின் தாய் மனம் வாடியது. 

 

பாட்டி,அத்தை, அம்மா என யார் பேச்சையும் கேட்கவில்லை. சொல்லி சொல்லி பார்த்துவிட்டு அடித்தாலும் பிடித்தாலும் ஒரே அறையில் இருந்தால் சரி என விட்டு  விட்டார்கள்.

 

இவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்து குடும்பமே ஐயோ என தலையில் அடித்து கொள்ளாத குறையாக  நொந்து கொண்டனர்.

 

 வீரா நிகிதாவின் அறையில் கட்டிலில் அமர்ந்திருந்தான். அறையை சுற்றிலும் பார்வையை சுழலவிட்டவனுக்கு எங்கு பார்த்தாலும் பணத்தின் செழுமையே தெரிந்தது. இகழ்ச்சியாக புன்னகைத்து கொண்டான்.

 

வெறுப்பாகவும் இருந்தது. எதை வேண்டாம் என நினைத்தானோ.. அதற்குள்ளேயே அனைவரும் தன்னை சிக்க வைத்துவிட்டனர் என 



நிகிதா வந்தாள் அசால்ட்டாக.. வீராவை பார்த்தாள் அலட்சியமாக…  அவனும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

 

நிகிதா பால் வண்ண நிறம். ஜீரோ சைஸ் உடம்பு. இயற்கையாகவே அழகு. பார்லர் உதவியால் பட்டென மென்மையாக இருந்தாள்.



வீராசாமி தமிழ் ஆண்களுக்கே உண்டான மாநிறம். அவன் தந்தையை போல.. அய்யாவு  பட்டுத்தறி அவர் தொழில். நல்ல உழைப்பாளி. அதனால் உரமேறிய ஓங்கு தாங்கான உடம்பு. தந்தையை கொண்டு இருப்பான் வீரா.

 

சுருங்கச் சொன்னால் நிகிதா ஆரிய வம்சம்.

வீராசாமி திராவிட வம்சம்.



அவனை கண்டு கொள்ளாமல் உடை மாற்றும் அறைக்கு சென்றவள் கட்டியிருந்த பட்டுபுடவையை கழட்டி எறிந்து விட்டு ஸ்லீவ்லெஸ் பனியனும் மினிசார்ட்ஸும் போட்டு கொண்டு வந்தாள்.



அவளின் உடையை கண்டு வீரா திகைத்தது ஒரு நொடி தான். அவனுக்கு இருந்த வெறுப்பிற்கு அவள் மேல் ஈர்ப்பு எல்லாம் வரவில்லை.

 

வந்தவளோ.. ஒரு தலையணை போர்வையை தூக்கி தரையில் எறிந்தாள்.



“ஏய் மேன் உன்னோட ரூமை ஷேர் பண்ணிக்கறதே பெரிசு.. பெட்லாம் ஷேர் பண்ணிக்க முடியாது. டிஸ்கஸ்டிங்.. போய் கீழே படு” என்றாள் எகத்தாளமாக..

 

அவள் பேச்சில் வீராவிற்கு சுறுசுறுவென கோபம் உச்சிக்கு ஏற..

 

“ஏய் யாரைப் பார்த்து டிஸ்கஸ்டிங் சொன்ன..மரியாதை இல்லாமல் அவன் இவன் பேசின பல்லப் பேத்துடுவேன் ஜாக்கிரதை”

 

“பல்லப் பேத்துடுவேன் ங்கறது என்ன உங்க பேமிலி டைலாக்கா.. அந்த ஓல்டு லேடியும் அப்படி தான் சொல்லுச்சு” என அவன் முன் விரல் நீட்டி பேச..

 

நீட்டிய விரலை மடக்கி அழுத்தி பிடித்தவாறு “அம்மாச்சியவா.. ஓல்டு லேடிங்கற..பெரியவங்கற மட்டு மரியாதை வேணாம்”

 

“ஐயோ விடு வலிக்குது.. இது இதான் இப்படி தான் ஓல்டியும் சொல்லுச்..” 

 

அவன் முறைப்பில் “இல்லல்ல பாட்டியும் சொன்னாங்க”

 

மடக்கிய விரலை விடுவித்து “போ.. போய் ஒழுங்காப் பேசாம படு ஏதாவது ஏடாகூடமா பேசின.. இப்ப விரல் தான்.. அப்புறம் கையைவே முறிச்சிருவேன் பார்த்துக்க..”

 

 மனதில் அவனை  ஆங்கில கெட்ட வார்த்தைகளால் அர்சித்தபடி தரையில் கால்களை உதைத்தவாறு சென்று படுத்து கொண்டாள்.

 

வீரா கீழே கிடந்த தலையணை போர்வையை எடுத்து அவள் மேலேயே விட்டெறிந்தான்.சென்று அவளருகே வேண்டும் என்றே  படுக்கை எம்பி குதிக்கமாறு வேகமாக படுத்தான்.



அவன் தலையணையை  விட்டெறிந்ததிலேயே எழுந்து அவனை அனலாக பார்த்தவள் அவன் தன்னருகே படுக்கவும்..

 

“ஏய் என் பெட்ல படுக்காத.. கீழ படு இல்லைனா சோபாவுல படு”

 

“மறுபடியும் மரியாதை இல்லாம பேசற..உன்னைய..” என அறைய கை ஓங்க..

 

பயத்தில் கண்களை இருக்க மூடி.. உடல் நடுங்க அமர்ந்து இருந்தவளை கண்டு.. ஓங்கிய கையை கீழே இறக்கி.. மெல்ல அவள் கன்னத்தில் தட்டி கொடுத்து 

 

“பேசாம தூங்கு பேபி”என சொல்லி விட்டு திரும்பி படுத்துக்  கொண்டான். அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து ஓரிரண்டு முறை தான் அவனை பார்த்திருக்கிறாள்.

 

அப்படி பார்த்த பொழுதில் இறுகிய முகத்துடன் சிரிக்கமாட்டானோ என நினைக்குமாறு தான் பார்த்திருக்கிறாள்.அவனிடம் இந்த மென்மையை அவள் எதிர்பார்க்கவில்லை.

 

திரும்பி படுத்திருந்தவனும் இவளையே நினைத்து கொண்டு இருந்தான். அவனுக்கு தெரியும் இந்த வீட்டில் அவளுக்கு எவ்வளவு செல்லம் என்று.. இந்த வீட்டின் இளவரசி.. 

 

இவள் தங்கை ஆராத்யாவை விட இவளுக்கு தான் எதிலும் முதலுரிமை முழு உரிமை.அவளை யாரும் அடித்ததில்லை அதனால் தான் நான் அடிக்க ஓங்கவும் பயந்துவிட்டாள் என..



இப்படியே ஒருவரை ஒருவர் நினைத்து கொண்டு ஆளுக்கொரு பக்கமாக திரும்பி படுத்து சிறிது நேரத்தில் உறங்கிவிட்டனர். பால் பழம் எல்லாம் தீண்டப்படாமல் அப்படியே கிடந்தது இவர்களை போலவே…




    இணையாத இரு துருவங்கள்

 

     இணைக்கும் முயற்சி

 

 இணையுமோ ஈர்க்குமோ….

 

    துணையோடு காதல் கொண்டு

 

   இணை பிரியாமல் வாழுமோ….

 

    துணையோடு வெறுப்பு பூண்டு

 

இணை பிரிந்து தன் திசை செல்லுமோ….