விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 5 விஷ்ணுப்ரியா

இழை-5

அவளது படிய வாரிய சிகையும், நீண்ட பின்னல் ஜடையும், கிழிந்த உடையும்.. அசல், ‘பட்டிக்காடு’ என்பதைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கலானது. அந்தத் தோற்றமே.. பார்த்த முதற்கொண்டு அவனுள் ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்தது, மெய்!! 
 
என்றுமே… நுனி நாவில் ஆங்கிலமும், மேலைத்தேய கலாச்சாரத்துக்கு சோரம் போகாத.. நவநாகரீக யுவதிகள் தான் அவனது தேர்வு!! 
 
சிற்சில சமயங்களில் கேளிக்கை விருந்துகளிலும் கூட.. அப்படியாப்பட்ட நவநாகரீக மங்கைகளைத் தான் இரு வார்த்தை சிரித்துப் பேசவே.. நாடும் அவன் மனம்!! 
 
ஆனால், இந்த பட்டிக்காட்டுப் பெண்.. அவன் விரும்பும் வகையறாவைச் சார்ந்த பெண்ணல்ல. அப்பேர்ப்பட்ட பெண்ணை எப்படி தாலி கட்டி மனையாளாக அவனால் ஏற்கவும் முடியும்? 
 
அதனால் தான், கோதண்டம்.. ‘உனக்கும், அவளுக்கும் என்ன உறவு?’ என்ற போது.. அதிரடியாக.. அவள் கழுத்தில் தாலி கட்ட இம்மியும் நாடவில்லை அவன். 
 
அதேசமயம், அவள் படும் துயரங்களைக் கண்கூடாகக் கண்டதும்.. கைக்கட்டி வேடிக்கைப் பார்த்து நிற்கவும் முடியவில்லை.மனம் நெருடியது.
 
முதல் பார்வையில் அவளைப் பிடித்துப் போனதா? இல்லை!! 
அவள் மீது சின்ன இனக்கவர்ச்சி ஏதாவது? அதுவும் இல்லை!! 
 
அவளுக்கு தாலி கட்டி இணையாளாக மாற்றிக் கொள்ளும் எண்ணம் ஏதாவது ஆரம்பத்திலிருந்து இருந்ததா? சேச்சே இல்லவேயில்லை. 
பிறகு எப்படி.. இத்தகைய முடிவைத் துணிந்து எடுத்தான் அவன்!! 
 
மகிழினியை பார்த்த முதற்பார்வையிலேயே பிடிக்கவில்லை தான்!! 
இருப்பினும் அம் மாதுவின் உயிரைக் காக்கும் சீரிய எண்ணம்.. அவனுள் முளைவிட்டிருந்தது. 
 
ஆகையினாலேயே, சிறுமலை கிராமத்தின் கானக எல்லையில் இருக்கும் காட்டம்மன் சந்நிதானத்தில்.. அவளுக்கு தாலி கட்டும் முடிவுக்கு விதி அவனைத் தள்ளியிருந்தது!! 
 
சிறுமலை கிராமத்தின்.. ஊர் மக்களுக்கு தகவலும்.. விடிந்ததும், விடியாததுமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க.. பெருங்கூட்டமும் கூடியிருந்தது, அங்கே!! 
 
அவன் முகத்தில் எந்த உயிர்க்களையும் இல்லாதிருக்க.. தாலிக்கயிறை நீட்டி.. அவளது கழுத்தில்.. மூன்று முடிச்சிட்டிருந்தான், சித்தார்த்தன். 
இதோ.. இக்கணம் முதல்.. செல்வி. மகிழினி.. திருமதி. மகிழினி சித்தார்த்தனாக பரிணாமம் கொண்டாள்!! 
 
தாலி கட்டும் போது அவளது கன்னம் உரசிய தன் புறங்கை மீது.. அனல்மின் தாக்கியது போல ஒரு வெறுப்புணர்வு இழையோடியது அவனுக்கு!! காட்டம்மன் எல்கையில் இருந்த குங்குமத்தை.. ஒற்றைப் பெருவிரலால் எடுத்து.. அவளது உச்சி வகிட்டில் வைத்த போது அவனுள் ஓடியது.. வெறுப்புணர்வு? ஆம்!! வெறுப்பே தான்.
 
அவளுக்கோ..எதிர்மாறாக,விழிகளும் இமை மூடி பனித்தது. ஒரு நடுக்கம் முதுகுத்தண்டில் ஓடியது. அவள் தலை குனிந்திருந்தாலும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதை அவனாலும் பார்க்க முடிந்தது.  
 
அவளுமே கூட இதை.. இந்தத் திருமணத்தை.. வலுக்கட்டாயமான வதுவை எதிர்பார்த்திருக்கவில்லை; தன்னைக் காக்க ஆண்டவனாய் வந்தவனின் வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்த அவளும் விரும்பவில்லை. 
 
ஆனாலும், அவளுக்கும் வேறு வழி என்பது ஏது? 
 
அவர்களிடம் சிக்குண்டு தீக்கிரையாவதை விட.. மன்னவனின் கையில் மாலையேற்பது.. அத்துணை ஒன்றும் நெருக்கடிக்குள்ளான நிலையாகத் தோன்றவில்லை. 
 
 அழுவதே அவள் வாழ்க்கை ஆனதே? இனியும் இந்த அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையில் வசந்தம் வீசுமா??ஒரு விரக்தியான சிரிப்பு அவளது வாயிலிருந்து, கண்ணீருடன் வெளியேறியது.  
 
ஆளுமையான தோற்றத்தில் இருந்தவனை கணவனாகப் பார்த்தாளோ? இல்லையோ?.. ‘இனி இவனுக்கே என் வாழ்க்கை அர்ப்பணம்’ என்பது போல நன்றிப் பெருக்கோடு.. விழிகளில் நீர் மல்கி வழிய. பார்த்திருந்தாள் அவள். 
 
அவளிடம், ‘இது காதலா?’ என்று கேட்டால் சொல்லத் தெரியவில்லை. தன்னை தாலி கட்டி உரிமை கொண்டாட விழைபவன்.. தன்னை உள்ளூற வெறுப்பதுவும் அவளுக்கு தெரியவில்லை. 
 
இருப்பினும்.. இதற்குப் பெயர் என்ன? ஒருவிதமான பக்தி?? பதி பக்தி?? 
 
 அவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற அல்லவா? அவனது வாழ்க்கையை அவனும் பணயமும் வைத்தான்?? 

இந்த ஆணாதிக்க சமுதாயம் அவளை அல்லவா வேசிப்பட்டம் கட்டியது, உயிரோடு தீயிட்டுக்கொளுத்தவும் முனைந்தது!! 
 
அவன் நிரபராதியாக இருக்கும் பட்சத்தில்.. ‘அவளுக்கு என்ன நேர்ந்தால் என்ன?’ என்று விட்டேற்றியாக.. அவளை, ‘அம்போ!’ என்று சித்தார்த்தன் விட்டுச் சென்றிருக்கலாமே? 
 
அவன் உத்தமன்;மன்னவன்;அவளை விட்டும் போகவில்லையே? அவளுயிர் காக்க அவள் கைத்தலம் பற்றி நின்றானே!! 
 
அவனது பெருந்தன்மையில் மடைதிறந்த வெள்ளம் போல கண்ணீர்ப் பெருக்கெடுத்து ஓட.. இருகரம் கூப்பி நின்றாள் இவள். 
 
இவனோ.. அவளது பட்டிக்காட்டு வதனத்தை ஏறிடவும் முடியாமல்.. கடுப்பு மூண்ட வதனத்துடன் முன்னோக்கி நடக்கப் போக.. அவன் போகும் வழியில்.. அவனைப் பின்தொடரச் சித்தமானாள் பாவை.
 
அவனை முன்னேறி நடக்க விடாமல் தடுத்த சித்தியோ, “நில்லு.. எங்கே கெளம்பிட்ட.. பேசினது போல பத்து லட்சத்தை எடுத்து வை.. இல்லேன்னா இவளை நீ ஆழைச்சுட்டு போக முடியாது!!” என்று ரவுடியாய் ரகளை செய்ய.. இதழ்கள் விரிந்தது ஏளனமாய் சித்தார்த்தனுக்கு.
 
“என்ன பணம்?” 
 
“ என்ன பணமா??அவளை கட்டிக்கிட்டு.. பத்து லட்சம் தர்றதா ஒத்துக்கிட்டயே.. அந்த பணம்!!” என்றாள் சித்தி எகத்தாளமாக. 
 
தன் கணவனின் முதல்தாரத்தின் புதல்வியை வைத்து, அவளின் திருமணத்தை வைத்து வியாபாரம் செய்ய விழையும்.. அந்தக் குரூரப் பெண்மணியின் மீது கட்டுக்கடங்காத ரௌத்திரம் பொங்கியது, சித்தார்த்தனுக்கு. 
 
இவனோ, “நான் எப்போ தர்றேன்னு சொன்னேன்.. தர்றேன்னா சொன்னேன்?.. கட்டிக்கறேன்னு மாத்திரம் தான் சொன்னேன்.. நான் சொன்னது போல செய்துட்டேன்.. இப்போ வழிய விடு” என்று கர்ஜிக்க.. விலாக்கள் ஏறியிறங்க சினந்தாள் பரிமளம். 
 
தன் சின்னன்னையை.. இத்தனை தைரியத்துடன் எதிர்த்துப் பேசும்.. மன்னவனையே விழிகள் அவள் விரியப் பார்த்திருக்க.. அவன் பார்வையோ சித்தியின் புறமாகவே இருந்தது. 
 
சிற்றன்னையோ.. இன்னும் அரக்கியாகிப் போனவளாக, “இல்ல விட மாட்டேன். பேசினபடி காச எடுத்து வைச்சிட்டுப் போ..இல்ல அவளை நீ அழைச்சுட்டுப் போக முடியாது” என்று கோபத்துடன் சொன்னவளோ.. முதலுக்கே மோசமாகி விடுமோ பயந்தாள் பரிமளம். 
 
சித்தார்த்தனோ.. தன் மனையாளின் முன்னங்கைப்பற்றியிருந்த கையின் அழுத்தம்.. இன்னும் இறுக உரிமையோடு அவளைப் பிடித்து. நின்றவனாக நிமிர்ந்தான். 
 
“அவள் என் மனைவி… இதோ நான் கட்டின தாலி.. இவ கழுத்துல தொங்குது.. அது இதோ அம்மன் சந்நிதியில் கூடி நிற்கற மக்களும் சாட்சி.. என் மனைவிய நான் அழைச்சுட்டுப் போறேன்..அதைத் தடுக்க நீ யாரு?”என்று வார்த்தைக்கு வார்த்தை அடிக்கொருதரம்.. ‘மனைவி மனைவி’ என்று அவளுக்கும் தனக்குமான உறவைச் சுட்டியது..பெண்ணவளின் மனதைச் சுட்டது. 

ஏனோ தனக்கொன்று ஒரு உறவு ..கணவனாக..அரணாக இருப்பதை எண்ணி.. நிம்மதி கொண்டது பேதை மனம். 
 
பரிமளத்திற்கோ.. புத்தி பேதலித்துப் போனதோ.. வருவதாக மனக்கோட்டை கட்டிய காசும் தப்பிப் போனதில். 
 
“இல்.. இல்ல.. நான் விட மாட்டேன்.. ஏய் இங்க வாடீ!” என்று அவளின் கைப்பற்றிப் பிடிக்கப் போக.. அதற்கு முன்.. அவளைத் தன்னோடு இழுத்து.. சேர்த்தணைத்தான் அவன். 
 
அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தேறுமோ என்றஞ்சியவளாக வெலவெலத்துப் போய் மகிழினி நிற்க.. உறுமினான் அவன். 

 ” இனி.. ஒரு அடி.. ஒரு அடி.. முன்னாடி எடுத்து வைச்சுப் பாரு.. நான் யாருன்னு காட்டறேன்.. முன்னாடி அவ மேல என்ன உரிமைன்னு நீ கேட்ட கேள்விக்கு பதில் என்கிட்ட இல்லை.. அதனால அமைதியா நின்னேன். ஆனா இப்போ இருக்கு..நான் அவ புருஷன்.. தொட்டுத் தாலி கட்டிய புருஷன்.. நான் யாருன்னு தெரியாம மோதுறீங்க.. ஒரு போன் கால் தான்.. உங்க அத்தனை பேரையும்.. இருந்த இடம் தெரியாம பண்ணிட்டு என்னால கெளம்ப முடியும்.. எதுக்கு பிரச்சினைன்னு அமைதியா இருக்கேன்..” என்று அதிராமல், சீறாமல்.. அவன் உகுத்த வார்த்தைகளின் அல்லு விட்டது எதிர்க் கும்பலுக்கு. 
 
கைவைத்த இடம் பெரிய கை என்றானதும், விடிந்ததும் ஊரும் கூடியதும் ஏதும் செய்ய முடியாத கையாலாகாத்தனத்தில் நின்றிருக்க.. அவனது உறுமும் குரல் கேட்டது, அவள் செவிகளில். 
 
“வா.. போகலாம்!!”
 
அவன் நாமம்? அவளுக்கு ம் தெரியாது. 
நல்லவனா.. கெட்டவனா? அதுவும் தெரியாது. 
குலம் கோத்திரம்? தெரியாது! 
 
இருப்பினும், அவனையன்றி இந்த நிமிஷம் யாரையும் நம்பத் தோன்றவில்லை அவளுக்கும். 
 
சித்தியும், கோதண்டமும் ‘வடை போச்சே!’ என்பது போல அவமானப்பட்ட முகத்துடன் நிற்க.. அவளது மென்மையான முன்னங்கையில் பதிந்தது அவன் கரம். 
 
அவனது பிடியில்.. முழுமையாக பாதுகாப்பை உணர்ந்தவளுக்கு.. தனிமையிலும் ஒரு நிழலாய் கணவன் தோன்றினான். 
 
இப்படி முன்பின் அறியாத ஆடவனை நம்பலாமா வேண்டாமா? என்ற ஆராய்ச்சி எல்லாம் அவளில் இல்லை. 
 
தன்னைக் காத்தவனுக்கே.. சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாளாக மாறி.. முழுநேர சேவகமும் பண்ண ஆசை பிறந்தது. 
 
இந்த ஜென்மத்தை.. மதுசூதனனுக்கு அர்ப்பணிக்கும் மீராவாக மாறவும் எண்ணம் துளிர்த்தது. 
 
அவள் பார்வை மொத்தமும் அவளிடம். அவனோ அவளைப் பார்க்காமல் காரின் கதவைத் திறந்து விட அமைதியாக காரில் அமர்ந்தாள். 
 
தன் காரில் கழற்றி வைத்த டீஷேர்ட்டை எடுத்தவன்.. “இதோ போட்டுக்கோ” என்று கொடுக்க, போட்டுக் கொண்டாள் அவள். 
 
அவனது பிரத்தியேக மணம் டீஷர்ட் பூராக விரவியிருக்க..அவனை இவளை அணைத்து நிற்பது போன்ற மாய விம்பமும் தோன்றியது. அந்த மாய அரவணைப்பு.. அவளின் நடுக்கத்தை சிறுகச் சிறுக நீக்கும் மருந்தாய் ஆனது.
 
இவனும், மறுபக்கம் சென்று அமர்ந்து இயந்திரத்தை இயக்க.. வாகனமும் புறப்பட்டது.  
 
பதட்டத்தில் விரல்களை அசைத்துக்கொண்டே அவளது பார்வையை மடியில் வைத்துக்கொள்ள.. கல்மண் தெரியாத வேகத்தில் எடுத்தான் அவன் வண்டியை. 
 
ஆனால் ‘இவனோடு பேச அவளுக்கும் தைரியம் இல்லை’ என்பதால் வழிநெடுக வாயை மூடிக்கொள்ள.. சென்னை வரை பயணித்து வந்தது பெற்றோல் வாசனை. அவள் கூடவே.
 
இழை-6

 பன்னிரண்டு மணி நேர பிரயாணத்திற்குப் பிறகு, சென்னையும் வந்து சேர்ந்தது. 
 
தேனி மாவட்டத்தில்.. சுற்றி வர.. மலைமுகடுகளையும், பச்சைப்பசேலென்ற தாவரப்பல்வகைமையும் கொண்ட.. குறிஞ்சி நில எழில் சொட்டும் இடத்திலேயே வாழ்ந்து பழக்கப்பட்டவளுக்கு சென்னை.. புதுமையையும், அதே சமயம் ஒருவிதமான அச்சத்தையும் பரிசளித்துப் போனது. 
 
வானளாவ உயர்ந்து, மேகத்தைத் தொடும் விஸ்தாரமான கட்டடங்களும், தலைக்கு மேலே வளைந்து நெளிந்து செல்லும் மேம்பாலங்களும்.. அவளுக்குள்.. அந்நியத்தன்மையையும் உருவாக்கியது. 
 
நடந்து போனவற்றின் தாக்கத்தினால் வழிநெடுக.. ஒரு பொட்டுக் கூட கண் மூடவில்லை அவள். முகத்தில் களைப்பும், விரக்தியும்.. ஒருவிதமான பேரதிர்ச்சியும் அவளில் நன்கே தெரிந்தது. 
 
நடந்து முடிந்த விஷயங்கள் ஒன்றும் அத்துணை இலேசுபாசானதும், இலகுவில் கடந்து விடக்கூடியதும் அல்லவே!!
 
 ஆகையால்,அவளது மாசுமருவற்ற சந்தன நிற வதனம் காட்டும் உணர்வுகளும் இயற்கையானதே;இயல்பானதே!! 
 
நெடுந்தூரப் பயணத்தின் பின்னரும் கூட.. சற்றும் நேர்ப்பார்வை மாறாமல்.. ஜம்மென்று உட்கார்ந்து.. காரை ஓட்டி வரும்.. தன் அவதார புருஷனான அவனையும் தான் ஒரு கணம்..தன்னையும் மறந்து ஏறிட்டுப் பார்த்திருந்தாள் மகிழினி. 
 
இவனுக்கு கொஞ்சம் கூட களைப்போ.. நடந்து முடிந்தவை பற்றிய விரக்தியோ.. ஒரு துளி கூட இல்லவேயில்லையா?? 
 
அவள் மனம் தன்னைத் தானே கேள்வியும் கேட்டுக் கொண்டாலும், அதைப்பற்றி வாய் விட்டுக் கேட்கத் தான் கூடி வரவில்லை. 
இயல்பான ஒரு தயக்கத்தோடு.. அப்படி வாய் விட்டு ஏதும் கேட்பின்.. ‘கோபப்படுவானோ?’ என்று நிரம்பவும் ஐயமும் கொண்டாள் பேதை. 
 
ஆகையால், அவள் வாயை அழுந்த மூடிக் கொண்டு பயணப்பட்டு வர.. அவளின் கன்னத்திலோ.. எதிர்க்காற்றில் உலர்ந்து உலர்ந்து சிறு கோடாகித் தெரிந்தது கண்ணீர்த்தடம். 
 
காரோ உரிய இடம் வந்ததும்.. தென்னை மரங்கள் அடர்ந்த.. நீண்ட போர்ட்டிக்கோ வழி நுழைந்து.. அழகான வீட்டின் முன் தரித்து நின்றது. 
 
அவன்.. காரின் கதவுகளைத் திறந்து.. அழுத்தமான எட்டுக்களுடன்.. கடகடவென இறங்கி முன்னே.. நடக்கலானான் உப்பரிகை நோக்கி நடக்கும் க்ஷத்திரிய அரசர்களுக்கு ஒப்ப கம்பீரத்துடன்.
 
இவளோ காரின் கதவுகளைத் திறக்கத் தெரியாமல்.. அவன் செய்ததைப் போலவே.. அதன் லாக்கினைத் தட்டுத் தடுமாறி திறந்தவள் தத்தித் தாவி இறங்கி.. அவன் பின்னோடு.. விரையலானாள். 
 
அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் அவளது இதயம், ‘தன் வேலையை நிறுத்தி விடுமோ?’ என்ற சந்தேகம் எழ ஆரம்பித்தது.  
 
வெண்ணிற டைல்ஸ் தரையின் பளபளப்பு மகிழினிக்குள் பதட்டமாகவும், பயமாகவும், பீதியாகவும் இருந்தது. இது என்ன இடம்? இது தான் அவன் வீடா? ஒன்றும் புரியவில்லையே.
 
 இது அவனுடைய வீடு என்றால் என்ன செய்வது? உள்ளே அவன் உறவுகள் இருந்தால் என்ன செய்வது? எப்படி நடந்துகொள்வது? அவளை உறவுகள் நடந்தது கேள்விப்பட்டு வரவேற்கக் கூடுமோ.. இன்றேல்.. எதிர்மறையாக விரட்டி விடக்கூடுமோ? 
 
 அவர்கள் அவளை விரட்டினால் எங்கே போவாள்? சென்னையில் அவளுக்கு யாரையும் தெரியாதே?.  

 எல்லா கேள்விகளும் அவளைத் திணறடிக்க அவள் முகமோ இரத்தப் பசையே அற்றது போல வெளிறிப் போனது. அவளது நெற்றியிலும் கைகளிலும் வியர்வை உருவானது.அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது.
 
இறங்கிக் கொண்டவள்.. அவள் வீட்டுப் படியேறாமல்.. வாசலிலேயே.. தான் கையோடு கொண்டு வந்த துணிமூட்டையை இறுக்கி அணைத்தபடியே நின்று விட்டிருந்தாள். 
 
மேற்கொண்டு ஓரெட்டு உள்ளே எடுத்து வைக்க முடியாதளவுக்கு.. உள்ளூற ஓர் தயக்கம் எழுந்து.. அவளைக் கறையானாக அரித்துக் கொண்டிருந்தது. 
 
பின்னே சன்னமாகக் கேட்டுக் கொண்டிருந்த அவளின் காலடியோசையும் தற்சமயம் கேட்காமல் போகவே, மெல்ல திரும்பிப் பார்த்தான் சித்தார்த்தன். 
 
அங்கே அவள்.. வீட்டையே அண்ணார்ந்து பார்த்தபடி அச்சத்தில் ஸ்தம்பித்து நின்றிருப்பதைக் கண்டவனோ.. எரிச்சலுடன், திரும்பினான். 
 
“ஏன் அங்கேயே நின்னுட்ட.. வா.. இது என் வீடு இல்லை. வா. நீ தாராளமா உள்ள வரலாம்..” என்று அகல விரித்த கைகளுடன்.. வருமாறு சைகை செய்தான் அவன்.  
 
ஆம், அவன் அவளை தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கவில்லை. அவனது வீட்டிலிருக்கும்.. மிகப்பெரும் கூட்டுக் குடும்ப பட்டாளத்தின் முன்.. ஒரு பட்டிக்காட்டுப் பெண்ணை.. தாலியும், கழுத்துமாக நிறுத்துவது சித்தார்த்தனுக்குப் பிடிக்கவில்லை. 
 
மேலும், இங்கு நடந்த நிகழ்வுகளை விளக்காமல்..மணக் கோலத்தில் தாய் முன் எப்படி நிற்பான்? 
 
 படிப்பற்ற.. பட்டிக்காட்டுப்பெண்.. தன் சட்டையில் படிந்த அகற்ற முடியாத கறையாகக் கொண்டவன்.. அவளை முதலில் தன் உறவினர்கள் முன் அறிமுகப்படுத்த நாடவேயில்லை. 
 
அதனாலேயே.. இங்கு அழைத்து வந்திருந்தவன் அறியவில்லை.. எதிர்காலம் அவளுக்கும், தனக்கும் பலதையும், பத்தையும் ஒளித்து வைத்திருக்கின்றது என்பதை. 
 
அது.. அவனது தோழன்.. வாசம் செய்யும் பேரழகான நடுக்கூடம்!! 
 
அப்போது தான் குளித்து விட்டு.. டவலுடன், “ ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல..” என்று பாட்டிப் பாடிய படி வந்தது ஒரு ஜந்து. 
 
அதன் பெயரும் கூட சந்துரு. 
 
சந்துருவோ தன் உற்ற தோழனுக்கு நிகழ்ந்த கதையை.. சென்னைக்கு வரும் வழியில்.. நாயகனும் செல்பேசி மூலமாக அழைப்பெடுத்துத் தெரிவித்திருக்க.. சிறுமலை கிராமத்தில் நிகழ்ந்த, ‘திடீர் திருமணம்’ பற்றி அறிந்தேயிருந்தான். 
 
ஆயினும்.. மணமான கையோடு தன் இல்லத்திற்கு அழைத்து வரக்கூடும் என்று எதிர்பார்த்திருக்காத சந்துரு.. அங்கே நடுக்கூடத்தில் புதுப்பெண்ணுடன் நின்றிருக்கும் சித்தார்த்தனைக் கண்டு.. மொத்தமும் ஜர்க்காகி நின்று விட்டிருந்தான். 
 
இலேசாக திறக்கப்பட்ட வாயுடன் நின்றிருந்த நண்பனைக் கண்டு ஏகத்துக்கும் கடுப்பாகிப்போனவனோ.. “வாயுல பெரிய சைஸூ ஈயே உள்ள போகப் போகுது.. டோர ஷட் பண்ணு மச்சி!!”என்று கலாய்த்து வாரி விட்டதன் பின்னர் தான்.. பட்டென்று வாயைமூடிக் கொண்டவனாக.. நிதர்சன உலகிற்கு வந்தான் சந்துரு. 
 
நண்பன் தன்னைக் கலாய்த்ததால்.. பதிலுக்குத் தானும் கலாய்க்கும் எண்ணத்துடன்.. “டேய் புது மாப்ள வாழ்த்துக்கள்” என்று கைக்குலுக்கப் போக.. குலுக்குவதற்கு நீட்டிய கையை அழுத்திப் பற்றி இழுத்தான் சித்தார்த்தன் பட்டென்று. 
 
அப்படி சந்துருவின் கையை இழுத்ததோடு நில்லாமல்.. சந்துருவின் முதுகுக்குப் பின்.. அந்த கையைச் சுற்றி வளைத்துப் பிடித்து, முறுக்கியவனாக.. இரண்டு போட்டான் சுள்ளென்று சந்துருவின் முதுகிலேயே. 
 
“ஆஆஆ.. வலிக்குதுடா..!! கபோதி!!” என்று சந்துரு சிலபல நல்ல வார்த்தைகளால் தோழனைத் திட்ட.. அப்போதும் சந்துருவின் கையை விடாமல்.. முறுக்கியவாறு.. கீழ்வருமாறு.. மொழிந்திருந்தான் சித்தார்த்தன். 
 
“ங்கொப்பன் மவனே.. நானே என்ன பண்றதுன்னு தெரியாம.. என் வீட்டுக்கு கூட இவளை அழைச்சுட்டுப் போகாம இங்க அழைச்சுட்டு வந்தா.. கலாய்க்கற.. இன்சல்ட் பண்ற?” என்று மீண்டும் ஒரு அடி போட.. அடித்து, கலாய்த்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு காட்டும் அவர்களின் நட்பை விழிகள் விரிய ஆச்சரியத்துடன் பார்த்திருந்தாள் அவள்., மகிழினி. 
 
நண்பர்களுக்குள் இத்தகைய.. சீண்டல்கள் இருக்கக்கூடுமா என்பது கூட அவளுக்கு.. பெரும் அதிர்ச்சியையும் கொடுத்தது. 
 
அக்கணம்.. தன் துணிப்பையை இன்னும் விடாமல் அழுத்திப் பிடித்துக் கொண்டு நிற்கும்.. பட்டிக்காட்டுப் பெண்ணின் மீது.. தனவந்த இளம் வாலிபனின் பார்வையும் அனிச்சையாய் வீழ்ந்தது. அவளில் நின்றும் இன்னும் பெற்றோல் மணம்.. குப்பென்று வீசிக் கொண்டிருப்பதுவும் புரிந்தது. 
 
அவளைக் கண்டதும் உள்ளே அகம் சுருங்கினாலும், துளியும் வதனத்தில் காட்டாமல்.. நோக்கியவனோ.. டெனிம் பாக்கெட்டில்.. இரு கைகளை இட்டவனாக.. இயன்றவரை சாதாரணமான தொனியிலேயே அளவளாவலானான். 
 
“ம்ம்ம்.. நீ பாத்ரூம் போய் ப்ரெஷப்பாகி வந்துரு.. பாத்ரூம்?? நேரா போயி. இடது பக்கம்.. ” என்று வழியைக் காட்டி அனுப்பி வைக்க.. அவளும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல இமைகளை மலங்க மலங்க விழித்தபடி.. “ம்ம்.. சரி” என்றவாறு நடக்கத் துணிந்தாள். 
 
அவள்.. நடுக்கூடத்தை விட்டு கண்மறையும் வரை.. வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவனோ.. அவள் தன் விழித்திரை விம்பத்தை விட்டும் அகன்றது மாத்திரம் தான் தாமதம், தன் உள்ளக் கிடக்கையில் உள்ள உள்மன ஆதங்கத்தையெல்லாம்.. நண்பனிடம் கொட்டவாரம்பித்தான் சித்தார்த். 
 
அதுவும்.. கிசுகிசுக்கும் தோரணையில் வெளிவந்தது சித்தார்த் கார்த்திக்கேயனின் குரல். 
 
“மச்சி எனக்கென்ன பண்றதுன்னு புரியல.. சரியான பட்டிக்காடு.. யூ 
க்நோவ்.. ஷீ இஸ் நாட் மை டைப்.. ஒரு உயிர காப்பாத்தியாகணும்ன்ற வலுக்கட்டாயம்.. வேற வழியில்லாம கட்டிக்கிட்டேன்.. தொல்லை.. சென்னை வரை வந்துருச்சு.. இப்போ எப்படி தொலைச்சு கட்டுறது தெரியலை! அவளைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கு!அவளும், அவ ஜடையும்.. டிஸ்கடிங்.. இர்ரிட்டேட்டிங்!!” என்றவன்.. ஒரு கையை இடுப்பிலும் , மறுகையினால் தலையையும் அழுந்தக் கோதிக் கொண்டான், ஆதங்கத்துடன். 
 
இவன்.. வாய் மொழிந்த வார்த்தைகள் யாவற்றையும்.. மகிழினியாளும் செவிமடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? 
 
இனியும் ஆக என்ன இருக்கிறது??? கடல் போல பரந்த இல்லத்தில் எந்தப் பக்கம் குளியலறை என்று மறந்து போயிருந்தாள்.. சித்தார்த்தனின் பட்டிக்காட்டு மகிழினி!! மீண்டும் .. வழியை தன் கேள்வனிடம் கேட்பதற்காக வந்தவளின் காதிலும் வீழ்ந்தது, தலைவன் அவன் உகுத்த சொற்கள்!! 

நடுக்கூடத்திற்கும், அதைத்தாண்டி சுவர் மறைவாக உள்ள காரிடாரின் சுவரின் அருகில் நின்றிருந்தவளின் விழிவெண்படலம் சிவந்து செம்மை கொள்ள.. நெஞ்சம் என்னும் தாழ்வாரத்தில் பல்கிப் பெருகி நின்றது.. ஆற்றாமை;மனத்துயர்!! 
 
அவன்.. கணை போல எய்த சொல்லஸ்திரங்கள்? ஹப்பப்பா?? 
 
“வேற வழியில்லாம கட்டிக்கிட்டேன்..”
 
“ தொல்லை.. சென்னை வரை வந்துருச்சு.”
 
“இப்போ எப்படி தொலைச்சு கட்டுறது தெரியலை!”
 
“அவளைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கு!அவளும், அவ ஜடையும்..”என்ற அவனது உருவக்கேலி வேறு.. அத்திப்பழத்தை பிய்த்துத் தின்ற நண்டுகளைப் போல.. அவள்மனத்தையும் கொறித்துத் தின்னும் போலிருந்தது. 
 
அவ்விடத்திலேயே.. பாதங்கள் வேரோட.. மூச்சு என்ன? பேச்சுக்கும் இடமின்றி.. சாபம் கொண்டஅகலிகைச் சிலையாய்.. உயிர்ப்பற்று சமைந்து போனாள் அவள்.
 
மனமெல்லாம் வலித்தது. தன்னைக் காக்க.. திருமண பந்தத்தை ஏற்றவனிடம்.. அன்பையும், பாசத்தையும் முழுமையாக எதிர்பார்ப்பது எத்துணைப் பெருந்தவறு?? 
 
அவன் குறிப்பிட்டதைப் போல.. தொல்லையாகி.. சுமையாகித் தான் இருக்க வேண்டுமா?? 
 
அவனையே தஞ்சமென நம்பி வந்த மஞ்ஞை.. இந்த ஜென்மத்தில் ஆபத்பாந்தவனாக மனம் வரித்துக் கொண்ட மதுசூதனனுக்கு, இடையூறாக இருக்க நாடவேயில்லை. 
 
எனில், சித்தார்த்தனின் பதின்ம வயது பட்டிக்காடும்.. என்ன முடிவு எடுக்கக் கூடும்? 
 
ஆயினும், சரிவர நாமம் கூட அறியாத பெண்ணோடு தொடர்ந்த பந்தம் ஆயுள்வரை நிலைக்குமா? பட்டிக்காட்டைப் பிடிக்குமா? 
 
அவள் மீது… அவளது புறத்தோற்றத்தைக் கண்டு இத்தனை வெறுப்பு கக்கி நிற்கும் மன்னவனும் விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் இருக்கும் அந்தச் சின்ன உணர்விழையை கண்டு கொள்வானா??
 

 
(இதோ அடுத்த இரண்டு அத்தியாயங்களுடன் வந்துட்டேன். 💕♥️❤️என்ன தங்கபுஷ்பங்களா.. 🙈🙈போன யூடிக்கு இரண்டே இரண்டு கமென்ட்.. 🤝💐💞🙈💕பார்த்துட்டு சோ சேட்.. உங்க வீட்டுப்பிள்ளைக்கு கவனிப்பு பத்தல பத்தல.. 😭😭அடுத்த யூடியும் இப்பவே போட்றேன். ஆனா நேக்கு கமென்ட் நிறைய வேண்டும்.. டும்!😁😁😁!)