விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 1 விஷ்ணுப்ரியா
விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ!

(காதல் இளவரசி) விஷ்ணுப்ரியா
நூலிழை-1

மேற்குத்தொடர்ச்சி மலைகளூடு ஐக்கியமாகி.. இரண்டறக் கலந்து வளம் சேர்த்துக் கொண்டிருக்கும் தேனி மாவட்டத்தின் சிற்றூர் அது!!
இருமருங்கிலும்.. குளிர்வலயக்காடுகளில் வளரும் ஃபைன் மரங்களும், இதர ஈரவலயத் தாவரங்களும் வானை நோக்கி நெடிதுயர்ந்து வளர்ந்திருக்கும் ஒரு கானகம் ஒன்று!!
கானகத்தின் ஒற்றையடிப்பாதையில் கூட.. மானுடர்கள் சென்று வரும் தடயமே அற்று.. பச்சைப் பசேல் என்று நானிலமெங்கும் புற்கள் வளர்ந்திருக்க.. பெய்யோ பெய் என்று அடித்தூற்றிப் பெய்து கொண்டிருந்தது பேய்மழை!!
கூடவே எங்கனும் அந்தகாரத்தின் வசம் ஆட்பட்டிருக்கலானது. ஆம், பெரும் கும்மிருட்டு.
அந்தக் காட்டுவழிப் பாதையின் நட்டநடு வெளியில்.. ‘இனியும் ஓரடி நகரமாட்டேன்’ என்று சண்டித்தனம் செய்து நின்றிருந்தது நவீனரக மெர்சிடிஸ் பென்ஸ் வகையறாவைச் சேர்ந்த கார்வண்டி.
அந்தக் காரின் மீது அத்துணை வெறுப்புக் கமழ்ந்திருந்தது ஒருவனுக்கு.

ஒற்றைக் கையினால் காரின் பானட்டினைத் தூக்கி நிறுத்தியபடி.. மற்றைய சுயாதீனமான கையினால்.. டார்ச் லைட்டினை உள்ளே செலுத்தியவாறு, என்ஜினுக்குள்.. தன் பார்வையைச் செலுத்தியபடி நின்றிருந்தான் அவன்!!
அவன்.. இப்புதினத்தின் மூலமாக உங்களை ஆகர்ஷிக்கப் போகும் நாயகன்!!
அவன், சித்தார்த் கார்த்திக்கேயன்.
அங்ஙனம் அவன் ஒற்றைக்கையால்.. பானட்டினைத் தூக்கி நின்ற போது.. அவனது வலிமையான புஜங்கள்.. இறுக்கம் கொண்டு முறுக்கித் தெரிந்ததே, கட்டியங் கூறிற்று.. அவன் சதாவும், ‘ஜிம்மில் ஜிம்முகிறவன்’ என்று.
‘வண்டியில ஏதோ கோளாறு!’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்ட சித்தார்த்.. பானட்டின் சிறுகம்பித்தாங்கிகள் கொண்டு.. அதை அந்தரத்திலேயே தூக்கி நிறுத்தி விட்டு.. ‘எஞ்சினின் எப்பாகத்தில் என்னவிதமான கோளாறு?’ என்று காணத் தலைப்படவும் செய்தான்.

அவன் முகத்தில் சிற்சில நீர்த்துளிகள் விழுந்து வருடிக் கொண்டிருக்க.. அவற்றை கணக்கில் கொள்ளும் நிலையில்.. அக்கணம் ஏனோ நாயகன் சித்தார்த் கார்த்திக்கேயன் இருக்கவில்லை.
யாருமில்லா வனாந்தரத்தில்.. அதுவும் நட்ட நடு இரவில்.. வண்டியில் மக்கர் பண்ணியிருப்பின்.. அவனும் தான் என் செய்யகூடும்!!
இரவும், மழையும் அவனுக்குள் இருந்த எரிச்சலையும், வெறுப்பையும் அதிகமாக்கிக் கொண்டே போனது.
அதற்கு இன்னும் கொஞ்சம் தூபம் போடும் வகையில்.. அலறியது அவனது நவீனரக தொடுதிரை வசதி கொண்ட செல்லிடத் தொலைபேசி.
அலைபேசியின் நாதத்தில் இன்னும் அலுத்துக் கொண்டான் அவன்.
“ம்ப்ச்சு.. இருக்கற பிரச்சினையில இது வேற!!” என்ற அங்கலாய்ப்புடன்.. தன் டெனிம் பாக்கெட்டில் கையிட்டு.. செல்லைத் துழாவி கையில் எடுத்து.. முகத்துக்கு நேராகக் கொண்டு வந்து அதில் பார்வையை ஓட்டலானான்.
பாரபட்சமே பாராமல்.. அவனது செல்லின் மீதிலும்.. ‘டொக் டொக்’ என்று விழுந்து முத்தமிட்டுப் போய்க் கொண்டிருந்தது மழை.
அங்கே செல்லில் ஒளிர்ந்த நாமத்தைக் கண்டதும்.. முன்பு சொன்னது போலவே அவனது சலிப்பு இன்னும் அதிகமானது.
“மப்ச்சு”என்று வெளிப்படையாகச் சலித்தவாறு.. அழைப்பை ஏற்காமல் துண்டித்த போது.. ‘விட மாட்டேன்’ என்பது போல ஓயாமல் அடித்தது செல்.
அலைபேசிக்குள் அழைப்பெடுத்துக் கொண்டிருக்கும் அரக்கி.. சித்தார்த் அழைப்பை ஏற்கும் வரை ஓயப்போவதில்லை என்பது புரிந்து தானிருந்தது அவனுக்கும்.
ஆகையால், எஞ்சினின் கோளாறை நிவர்த்தி செய்யவிழையும் செய்கையை கைவிட்டு விட்டு.. இழுத்துப் பிடித்த பொறுமையோடு அழைப்பை ஏற்றான் அவன்.
“ஹலோ!!” என்ற சித்தார்த் கார்த்திக்கேயனின் குரலில்.. அத்துணை அழுத்தம் மிகையாக.. விரவியிருந்தது.
மறுமுனையில்.. இவன் படும் இன்னல்களை அறியாது.. வலிய வரவழைக்கப்பட்ட தேன் குழைத்தாற் போன்ற குரல் கேட்டது.
அது. அந்த ஸ்திரீ குரலுக்குச் சொந்தக்காரி, சித்தார்த்தின் அத்தைப் பெண், ‘ரேகா!’.
எடுத்ததும் இழைந்து குழைந்தது ரேகாவின் குரல்.
“என்ன சித்து..?? என்ன இன்னும் ஆளை காணல.. நான் உனக்காக ஆசையா காத்துட்டிருந்தா.. என் ஃபோன் அட்டன்ட் பண்ண கூட மாட்டேன்றீங்களே?”என்று பெரிதாக நொடித்துக் கொள்ள.. இவன் தான் தன்தோள்புஜங்கள் இரண்டும் ஏறியிறங்க.. பெருமூச்சோடு.. நின்றான்.
அவளோடு பேசவும் சிறிது பொறுமை அதிகமாகவே தேவைப்பட்டது அவனுக்கு. தன்னைத் தானே சமரசப்படுத்திக் கொள்ளவே இந்த நிதானப் பெருமூச்சு.
“ரேகா.. நான் இப்போ கொட்டுற மழையில நின்னுட்டிருக்கேன்.. என்னால உன்கூட கொஞ்சி குலாவிட்டிருக்கற டைம் இல்ல.. போனை வை..!!”
இவனும் உச்சபட்ச எரிச்சலை மென்று விழுங்கிக் கொண்டு.. அழுத்தமான குரலிம் சொல்லி விட்டு வைக்கப் போக.. அவசரம் அவசரமாகப் பதற்றம் நிலவும் தொனியில் கேட்டது மறுமுனையில் இருப்பவளின் கூற்றுக்கள்.
“சித்து.. சித்து.. சித்து.. ப்ளீஸ் ப்ளீஸ் வைச்சிடாத.. ஐ ஆம் சாரி.. எனக்கு அங்க மழைன்னு தெரியாது!!ப்ளீஸ் வைச்சுடாத”
அத்தைப் பெண்ணின் குரல் கேட்டதும்.. அழைப்பைத் துண்டிக்காமல் தாமதித்தவன்.. வேறு வழியின்றி மீண்டும் காதில் செல்லை வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டான்.
இருப்பினும் நவநாகரிக, மேலைத்தேய கலாச்சாரம் மீது பெருமோகம் கொண்ட ரேகாவை தன் பங்குக்கு ஓரவஞ்சனையே காட்டாமல் திட்டவும் மறக்கவில்லை அவன்.

“லிஸின் ரேகா.. ப்யூட்டி பார்லர்.. கிளப்னு மட்டும் சுத்திட்டிருந்தா பத்தாது.. கொஞ்சம் நாட்டு நடப்பும் தெரிந்து வைச்சுக்கணும்.. அப்பப்ப நியூஸ் பார்க்கணும்.. ஜென்ரல்நாலேஜ வளர்த்துக்கணும்.” என்று தன் நாட்டுநடப்பு அறியாத முறைப்பெண்ணைத் திட்டியவனின் கூர்நாசித் துவாரங்கள் இரண்டும் விடைத்தடங்கிக் கொண்டிருந்தது. அதீதபட்ச கோபத்தினால்.
தன் வருங்கால மணாளனான அத்தான் திட்டுவதைக் கேட்டு.. மூக்குக்கும் மேலே போனது கோபம்.
“அப்போ.. எனக்கு ஜென்ரல்நாலேஜ் கொஞ்சம் கூட இல்லேன்றீயா?” என்று பதிலுக்கு அவள் கத்தினாள்.
திருமணம் முடிக்காமலேயே அவளுடனான உரையாடல்களும், சம்பாஷணைகளும்.. அவனுள் சீற்றத்தைத் துளிர்க்கச் செய்யும் போது.. மொத்த வாழ்வும் எப்படித் தான் கழியப் போகின்றது?? முழு வாழ்வும் ஊடலில் கரைந்து விடுமோ? மனதோடு சின்ன வெறுமையும் கூட எட்டிப் பார்த்தது, சித்தார்த்தனிற்கு.
ஆகையினால், இன்னும் கொஞ்சம் கடுப்பானவனோ.. “எனக்கு இப்ப கொஞ்சம் ரிப்பேரிங் வர்க் இருக்கு.. இப்போ எதுக்கு கால் பண்ண அத சொல்லு?”என்று இவன் நேரடியாகவே விஷயத்துக்கு வர.. அவளும் மீண்டும் மீண்டும் பேசி தன் மாமனை மூட்-ஆப் பண்ண நாடாமல்.. நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.
“நாளைக்கு நம்ம எங்கேஜ்மண்ட் முடிந்து.. ஒன் மந்த் அன்னிவர்சரி சித்து.. நாளைக்கு காலையில சென்னையில இருப்பேல்ல..இப்பவே மணி மிட்நைட் ஆச்சு. வந்திருவேல்ல சித்து?” என்று இழைந்த குரலில் கேட்க.. இவனது கடுப்பு தான் இன்னும் அதிகமானது.
உண்மையில், ரேகா-சித்தார்த் நிச்சயம் முடிந்து.. ஒரு மாதம் நாளையோடு நிறைவுறப்போகிறது.இதற்கெல்லாம் அன்னிவர்சரி கொண்டாட நாடும் அவளது ஆடம்பர மோகத்தின் மீது.. கோபத்தீ கனன்றது அவனுக்கு.
எத்தனையோ தொழில் சாம்ராஜ்யங்களை, தன் ஒற்றை சுட்டுவிரல் அசைவினால் ஆட்டுவிக்கும், கட்டியாளும் தி கிரேட் சித்தார்த் கார்த்திக்கேயனின் ஒரே பலவீனம்?? அவனது தாயார்.
அவருக்காக.. அவரின் சந்தோஷத்துக்காக என்று மாத்திரம்.. ஏற்றுக்கொள்ள விழையும் ரேகாவுடனான வாழ்வில்.. மனதோடு இற்றை வரை.. நெருடல் இல்லாமலில்லை.பிடித்தமும் இருந்ததில்லை.
இருந்தும் திருமணத்தின் பின்.. அத்தை மகள் ரேகா மனைவி என்னும் ஸ்தானம் அடைந்ததும்.. இயல்பாய்.. இயற்கையாக அவள் மீது பிடித்தம் தோன்றலாம் அல்லவா?? பல நேரங்களில் மேற்கண்டவாறு உரைத்துத் தான்.. நெருடும் மனத்தினை சித்தார்த் கார்த்திக்கேயனும் தேற்றிக் கொள்வதே!!
தன் திருமணத்தின் பின்னரான ஜீவிதத்தைப் பற்றிய சிந்தையில் இருந்தவனை.. நடப்புக்கு மீட்டிக் கொண்டு வரும் வகையில், தொடர்ந்து கேட்டது அவள் குரல்.
“ஹலோ சித்து.. இருக்கீயா?”
“ம்ம்”
இந்த ஒற்றை ‘இம்’மில் தான் எத்தனை எரிச்சலையும் , சீற்றத்தையும் இவனால் அடக்கித் தணிந்து நிற்கவும் முடிகின்றது?
ரேகாவோ..தன் அஸ்திரமான குழையும் குரலையே கையில் எடுத்திருந்தாள்.
“சித்து.. நீ. தான் சூப்பர் ரேஸரில்ல.. கார் ஓட்டுவது பற்றி உனக்கு கத்துத் தரணுமா என்ன? அதனால.. எப்படியாவது.. வேகமா ஓட்டிட்டு வந்துரு சித்து.. என் ப்ரெண்ட்ஸோடு எங்கேஜ்மன்ட் அன்னிவர்சரி பார்ட்டி வேற அரேஞ்ச் பண்ணிட்டேன்.. எல்லாருக்கும் நீ வர்றதா வேற சொல்லிட்டேன்.. இதுக்கப்றமும் நீ வரலேன்னா.. எனக்கு தான் அவமானமா போயிரும்.. வந்துரு என்ன?”
ரேகா.. நிச்சயதார்த்தம் நிகழ்ந்த முப்பதாவது நாளை.. அதாவது ஒரு திங்கள் கால வரையறையை.. அன்னிவர்சரி என்று கொண்டாட விழைவதே.. இன்பத்தை நல்கவில்லை சித்தார்த்தனுக்கு. அதிலும், அவனைக் கேளாமல்.. அவன் அனுமதியின்றி.. அவனோடு ஒரு விருந்தை ஏற்பாடு செய்திருப்பதில்.. குபுகுபுவென பற்றியது எரிமலை!!
முன்பிருந்ததிலும் பார்க்க.. அவள் மீதினில் எரிந்து விழுந்திருந்தான் அவன்!!
“யாரைக் கேட்டு..இந்த பார்ட்டி அரேஞ்ச் பண்ண ரேகாஆஆ?” என்று மழைக்கும் மேலாக.. தன்னந்தனியான கானகத்தில் அவன் போட்ட காட்டுக்கத்தல்.. தேனி தாண்டி.. சென்னை வரை கேட்டிருக்கும்!!
மறுமுனையில் இருந்தவளுக்கும் தன் மாமனின் கத்தலில்.. ஒருமுறை தூக்கிவாரிப் போட்டு அடங்கியது இதயம். காது வேறு ‘ங்ங்கொய்ய்’ என்றாக செல்லை காதை விட்டும் அரைகாத தூரம்.. பெயர்த்து எடுக்கும்படியான சூழ்நிலையும் உருவானது ஆங்கே.
இவள் சுட்டுவிரலை காதுக்குள் விட்டு குடைந்தவாறு மீண்டும் செல்லை காதுக்குள் வைத்த நொடி.. கேட்டது அவன் தாறுமாறாகத் திட்டிக் கொண்டிருக்கும் மொழிகள்.
“உனக்கு அறிவ்.. வில்ல?? இங்கே மழை பெய்துட்டிருக்கு.. என் வண்டி வேற மக்கராகி நின்னுருச்சு. நான் நட்ட நடு காட்டுல.. விளக்கு கூட இல்லாத இடத்துல நின்னுட்டிருக்கேன்.. மனித நடமாட்டம் கூட இல்லை.. இப்படியான சூழ்நிலையில் நான் பாதுகாப்பா திரும்பி வருவேனான்றதே சந்தேகம் தான். இப்ப போய் பார்ட்டி பற்றி பேசிட்டிருக்க? காரை சரி பண்ணிட்டு தான்..என்னால மத்ததை பத்தி யோசிக்க முடியும் ரேகா..,”என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினான் அவன்.

ஆனால், ஒன்று மட்டும் திண்ணம். பெய்து கொண்டிருக்கும் மழை இப்போது நிற்கப் போவதில்லை என்பதுவும்.. இது கனமழையாக உருவெடுத்து.. பெய்யப் போகிறது என்பதையும் அவனால் முன்கூட்டியே ஊகிக்க முடிந்தது.
வரும் வழியில் ஏதும் மரங்கள் முறிந்து விழுந்து.. சாலைகள் அடைக்கப்படும் ஆபத்து கூட நேரிடலாம் என்று தோன்ற.. சீக்கிரம் இங்கிருந்து வண்டியை கிளப்பிக் கொண்டு செல்ல வேண்டும் என்றே இவன் மனமும் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது.
எனவே ரேகாவுடன் மென்மேலும் வம்பளத்துக் கொண்டிருக்க விரும்பாமல்.. தன் வேலையிலேயே மும்முரமாக இருக்க நாடினான் அவன். அதிலும்.. ரேகா அவனை கேட்காமல்.. அவனது அனுமதியின்றியே விருந்துக்கு அழைப்பு விடுத்திருப்பது கோபத்தை உண்டுபண்ணியிருந்தது அவனுக்கு.
“ நான் இங்கே இருந்து கெளம்பி.. சென்னை வந்தா பேசிக்கலாம்..ஃபோன வை”என்று விட்டு அழைப்பைத் துண்டிக்கப் போக, அவனை தடுத்து நிறுத்தும் பொருட்டுக் கேட்டது.. ரேகாவின் குரல்.
“சி..சித் சித்து!!”
அவளது கத்தல்கள் யாவும் காற்றோடு காற்றாகக் கரைந்து.. வீணாகித் தான் போனது. இவனோ.. அவள் கத்திக் கொண்டிருந்த தருணத்திலேயே.. அவளை அலட்சியம் செய்தவளாக அழைப்பைத் துண்டித்து விட்டிருந்தான் இவன்.
இவனோ திக்குத் தெரியாத காட்டில் படும் சிரமங்களை எடுத்தியம்பிய போதும், அதைப்பற்றி சிந்தியாமல்.. அவனது சிரமம் புரியாமல் ஒரு மாத அன்னிவர்சரி கொண்டா விழையும்.. அவளது இடாம்பீகமான.. ஏகபோக வாழ்க்கையில், மனம் பொறுமியது.
உண்மையில், ரேகா.. அவன் விரும்பும் வகையில்.. மனம் ஒருமித்து குடும்ப வாழ்க்கை வாழ ஏற்ற பெண் தானா?? சிறிய ஐயமும் மிகைத்தது அவனுக்குள். அவனுள் எழுந்த சிந்தையை குழைக்கும் வண்ணம்.. இடித்தது பெரும் இடி.
செல்லை அணைத்து பாக்கெட்டில் போட்டு விட்டு.. மீண்டும் பானட்டிற்குள் குனிந்து தீவிரமாக வேலைப் பார்க்க முனைந்தான் திமிர்ப் பிடித்தவன்.
இது தான் சித்து. அத்தைப் பெண்.. அத்துணை வழிய வந்து அழைத்த போதிலும் யாருக்காகவும்.. எதற்காகவும் வளையாமல்.. சிறிதும் விட்டுக் கொடுக்கும் குணம் இல்லாத அரக்கன் சித்தார்த்.
தாய் மட்டும்.. வற்புறுத்தியிராவிட்டால்.. இந்தத் ‘ தொல்லை ரேகா’வுடன் திருமண நிச்சயம் ஆகியிருக்குமா என்று கேட்டால்? சர்வநிச்சயமாக சந்தேகமே!!
சில நேரங்களில் அவளுடைய நடத்தை அவனை விரக்தியடையச் செய்தாலும்.. தாய் மீதான அன்பின் நிமித்தமே அவனும் அமைதியாய் சகித்துக் கொள்வதே!!
பெருமூச்சு விட்டு.. ரேகாவின் நினைவுகளில் நின்றும் வெளிவந்து தோளை குலுக்கிக் கொண்டவன்.. எஞ்சினுக்குள் கையிட்டு.. எதையோ திருகி.. தட்டி.. சொற்ப நாழிகைக்குள்.. சின்ன மாற்றமொன்றை செய்திருப்பான்.
‘அந்த மாற்றம் வண்டியை இயக்கும்’ என்ற நம்பிக்கையுடன் தரதரவென ஓடிச்சென்று அமர்ந்து.. காரை ஸ்டார்ட் செய்து பார்க்க.. அவன் நம்பிக்கை துளியும் வீண் போகவில்லை. ஆம், அதுவும் இயங்கியது.
மீண்டும் வந்து பானட்டை மூடி விட்டுத் திரும்பி.. காரின் கதவைத் திறந்து உள்ளே ஏற முற்பட்ட போது தான்.. அவன் வாணாளில் எதிர்பார்த்திராத சிற்சிலவையும் நடந்தேறச் சித்தமானது.
இழை-2

அடர்ந்த காட்டுப் பகுதியில்.. அவன்.. அவ்விடத்தை விட்டும் தன் காரினை கிளப்ப ஆயத்தமாகி.. காரின் கதவினைப் பற்றியபடி உள்ளே ஏறச் சித்தமான நொடி அது!!
எதிர்பாராத சமயத்தில், அடர்ந்த கானக தாவரங்களுக்கிடையில்.. ஆங்காங்கே டார்ச்லைட்களின் ஒளிகள் சிந்தப்படும் தடயங்கள் புலனாகத் தொடங்க, எங்கனும் பாதத் தடங்களுக்கான அரவமும் கேட்கத் தொடங்கியது.
காரின் கதவினையே பற்றிப் பிடித்தபடி அவன் விழிகளின் மத்தியில் புருவமுடிச்சு விழ.. அரவத்தின் ருசு அறியாமல்.. கூர்ப்பார்வையுடன் நிமிர்ந்து நின்றிருப்பான்.
அக்கணம்.. சப்தம் வந்த திசையில் நின்றும், மங்கி குல்லா அணிந்திருந்த நான்கைந்து தடியர்கள்.. யாரையோ சல்லடை போட்டுத் தேடாத குறையாக தேடி வந்து கொண்டிருப்பதுவும் புரிந்தது.
அவர்கள் கையில் கம்பு, தடி, அரிவாள் போன்ற ஆளைத் தாக்கும் ஆயுதங்களும், இன்னொரு கையில்..இருட்டினைக் கிழித்துத் தேடத் துணைபுரியும் டார்ச்லைட்களும் அடைக்கலமாகியிருப்பதை.. அவதானிக்கத் தவறேவேயில்லை சித்தார்த்தன்.
அவர்தம் விழிகள்.. அங்குமிங்கும் ஓய்வேயில்லாது அலைபாய்ந்தபடி இருப்பது கண்டவன்.. அந்தக் கும்பல் நட்டநடுநிசியில் வேஷ்டி கட்டி ஒருவன்.. தலைவனாக இருப்பதுவும் புரிந்தது.

அதில் நடுநாயகமாக இருந்தவனோ, பெருக்குரலில் அவர்களுக்கு பற்பல கட்டளைகளை இட்டு ஏவிக் கொண்டிருந்தான்.
“ஒரு இடம் விடாம தேடுங்கடாஆஆ.. இங்க தான் அவ இருக்கணும்!”என்றவனின் ‘ஆணை’யை ஏற்ற.. மற்றைய ‘ஆனை’களும் நிலம் அதிர.. பள்ளம் இறங்கி வந்து.. தடதடவென விரைந்து தேடத் துவங்கினர்.
அந்த மேடான வெட்டவெளியை விட்டும்.. பள்ளத்தோடு சென்றிருக்கும் சகதிநிறைந்த பாதையில் தரித்து நிறுத்தப்பட்டிருக்கும் காராளானான சித்தார்த்தனை நோக்கி.. ஓடி வந்த ஒரு உருவம்.. நம் நாயகனைக் காரில் ஏறவிடாமல்.. பிடித்து நகர்த்தியது.
சித்தார்த் தன் தோள்தொட்ட அந்நியனை.. கொலை காண்டுடன் திரும்பிப் பார்த்த வேளை.. அங்கே.. வெள்ளை வேட்டி சட்டையில்.. கழுத்தில் புலிநகச் சங்கிலி தொங்க.. உள்ளூர் மைனரைப் போல நின்றிருந்தான் ஒருவன்.
சித்தார்த்.. கோபத்துடன் கொட்டும் மழையில் அவர்களைப் பார்த்து.. “யார் நீங்க?”என்று கேட்க அதை சட்டை செய்யவில்லை வில்லன்.
“ம் சீக்கிரம்.. காருள்ள தேடுங்கடா.. ஒருவேள அவ.. உள்ள தான் பதுங்கியிருக்கலாம்” என்று அவர்களின் தலைவனிடமிருந்து அடுத்த ஆணை வர.. வேட்டியை மடித்துக் கொண்டு அவனது காருக்குள் சகதி படிந்த பாதங்களோடு ஏறினான் ஒரு அடியாள்.
ஓருவன் தன் வாகனத்தை அழுக்காக்குவது பொறுக்க மாட்டாது.. சீற்றத்தோடு சீற முனைந்தான் சித்தார்த்தன்.
“ஹூ தி ஹெல் ஆர் யூ.. இப்ப எதுக்கு என் காருக்குள் அத்துமீறி நுழையுறீங்க?” என்று இவன்.. ஓரடி எடுத்து வைத்தவனின் கையைப் பற்றிக் கொண்டு சிம்ம கர்ஜனை போட, அந்த ஒற்றைப் பிடியில்.. குண்டனும் நகர முடியாமல் நின்றான்.
அவனது வலுவை அறிந்த எதிராளியும், நாயகனுடன் பேச்சுக் கொடுத்தான் சற்றே சுமுகமாக.
“ஒரு பொண்ண தேடிட்டிருக்கோம் தம்பி.. இந்தப் பக்கம் தான் வந்திருக்கணும்.. அப்டி வந்திருந்தா உங்க காருக்குள்ள நுழைய வாய்ப்பிருக்குல்ல? அதான் தேடலாம்னு பார்க்கச் சொன்னேன்..!!”என்று சொல்லி விட்டு.. தன் ஏவலாளியிடம் எரிச்சல் மண்டிய குரலில் ஏவவும் செய்தான்.
“என்னடா மசமசன்னு நின்னிட்டிருக்கீங்க.. உள்ளே புகுந்து தேடுங்கடா!!” என்று எதிராளிக் கும்பலின் தலைவன் சொல்ல.. அவர்களின் ஒருவனோ.. நாயகனின் நுழைந்து எல்லாவிடமும் தேடினான்.
அவர்கள் இரவெல்லாம் தூக்கம் துறந்து தேடும் பெண்ணோ அங்கே இல்லை என்றானதும்..காரை விட்டும் வெளியே வந்த அடியாளின் கை.. ‘இல்லை’ என்பது போல காற்றில் ஆடியது.
“ஐயா இங்க இல்லங்க ஐயா.. !!”என்று அவன் தலையை ஆட்டிச் சொல்ல.. எதிராளியோ உறுமும் தொனியில், தன் முஷ்டி மடக்கி.. மற்றைய உள்ளங்கைக்குக் குத்திக் கொண்டான் கோபத்துடன்.
“அப்படி எவ்வளவு தூரம் தான் போயிருக்கப் போறா?? விடியுறதுக்குள்ள அவளை கண்டுபிடிக்கறேன்!!” என்று தனக்குத் தானே உரத்த குரலில் கறுவிக் கொண்டவன்..மீண்டும் தன் ஏவலாளிகளை நோக்கி கட்டளைகளைப் பிறப்பிக்கத் தொடங்கினான்.
“டேய் எல்லாரும் வாங்கடா. அவ இந்த காட்டுக்குள்ளே தான் இருக்கணும். விடியுறதுக்குள்ள அவள பிடிக்சிரணும்”என்ற எதிராளியும்.. தன் சகாக்களைத் திரட்டிக் கொண்டு.. அவ்விடத்தை விட்டும் மின்னல் மின்னி மறையும் கணத்தில் சென்று மறையலாயினர்.
அவர்கள் வந்து செல்லும் வரை.. கடினப்பட்டு அடக்கப்பட்ட சீற்றத்தோடு மூச்சு வாங்க நின்றிருந்த கட்டிளங்காளைக்கு அவர்கள் நகர்ந்த பின்னும்.. சீற்றம் தணிய.. இன்னும் அதிக நேரம் தேவைப்பட்டது.
கூடவே உள்ளூற பற்பல கேள்விகளும் இதயம் என்னும் உச்சியிலிருந்து காட்டாறாய் உதித்து ஓடியது.
யாரவர்கள்??
எதற்காக நட்டநடுநிசியில் ஒரு மங்கையைத் துழாவித் திரிகின்றனர்??
இந்தக் குண்டர்களிடம் சிக்கிய பெண்ணும் யாரோ..??
தன்னிலை மறக்கச் செய்யும்.. முகமறியா ‘அவள்’ பற்றிய சிந்தனையில் நின்றும் வெளிவந்தவன்.. தன் தலையை ஒரு தரம் குலுக்கிக் கொண்டான்.
இங்கோ, அவனுக்கு.. சென்னை சென்று சேர வேண்டிய மிகப்பெரும் வேலையொன்று பாக்கியிருந்தது. அதுவே பிரதானமாகத் தெரிந்தது.
ஆகவே, மேற்கொண்டு பேசாமல்.. வண்டியை எடுத்தவன்..காரின் உள்ளே ஏறி அமர்ந்தான்.
‘எவ்வளவு முடியுமோ எவ்வளவு துரித கதியில் சென்னை போயாகணும்’ என்று நினைத்துக்கொண்டு.. வண்டியை ஓட்ட ஆரம்பித்தான், சித்தார்த்தன்.
காரும்.. அந்த காட்டின் பாதை வழியே திரும்பி நகர்ந்து கொண்டிருந்தது. தூண் விளக்கு கூட இல்லாதளவுக்கு, எங்கும் இருட்டாக இருக்க.. காரிலிருந்து வரும் ஒளியே, சாலையில் ஈயப்பட்டுக் கொண்டிருந்தது.
காரின் ஏசியை இயக்க வேண்டிய தேவையே இன்றி.. அத்தனை அதீதமான கூதல்காற்று.. மேனிதீண்டிப் போய்க் கொண்டிருந்தது.
அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகும்.. மழை ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்க.. அந்தோ துரதிரஷ்டமே.. அவனுக்கும்.. ‘இனிமேல்.. மேற்கொண்டு பயணிக்கவே முடியாது’ என்ற நிலையும் வந்தது.
ஆம், பாதையோரத்தில் தளைத்தோங்கி வளர்ந்திருந்த மராமரமொன்று அப்படியே சரிந்து வீழ்ந்திருக்கலானது.

சொற்ப மணித்தியாலங்களுக்கு முன்பு நடந்த அசம்பாவிதத்தில் எந்தவிதமான உயிர்ச்சேதங்களும் இல்லை தான். இருப்பினும், அந்த வழியாகப் பயணப்பட்டு வரும் எந்தவிதமான வாகனங்களும் .. நகர முடியாத சூழ்நிலையே!
இவனும்.. சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தி விட்டு.. ‘வைப்பர்கள்’ தடதடக்கும் கண்ணாடி வழியே பார்த்த போது.. இதற்குப் பிறகும், ‘பயணிக்க முடியாது’ என்று உண்மை நிதர்சனம் புரிந்தது.
இயற்கையும் இவன் சென்னை சென்று சேர்வதற்கு எதிராக சதி பண்ணியதோ??
சும்மாவே.. பாதிவழியில் வண்டி நின்ற கடுப்பு, கூடவே, ரேகா அழைப்பு எடுத்த கோபம், வழியில் எதிர்ப்பட்ட கும்பல் வேறு அத்துமீறி காரினுள் நுழைந்த கோபம்.. ஆகியவற்றோடு.. இந்தக் கோபமும் உப்பு, மிளகு, காரம் சேர்க்க.. அவன் முகம் குளிரிலும்.. ஜிவ்வென்று சிவந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அது கோபச் சிவப்பு!!
கோபத்தின் உச்சம் தாளாமல்..முஷ்டி மடக்கி ஸ்டியரிங்கிற்கே குத்திக் கொண்டான் சித்தார்த்.
“ஓ.. ஷிட்.. ஷிட்.. !” என்று கத்திக்கொண்டே இவன் ஸ்டீயரிங்கில் அடித்துக் கொண்டவன்.. சொற்ப நாழிகைகள் இதழ்களை அழுந்த மூடி நின்று.. தன்னைத் தானே நிலைப்படுத்திக் கொள்ளவும் துணிந்தான்.
நம் நாயகனுக்கு, ‘ஆங்கர் மேனேஜ்மன்ட்’ என்பது நிரம்பவும் தேவையே!!
அடுத்து, ஈரத்துளிகள் வழிந்திருந்த சிகையையும் அலைக்கழிப்புடன்.. பின்னோக்கி அழுந்தக் கோதிக் கொண்டான்.

மரத்திற்கு மறுபுறம்.. அதிகாரிகள் அந்த மரத்தைச் சூழ நின்ற படி.. ஊழியர்களை பணிக்கு அமர்த்தி.. சாலையிலிருந்து அதை அப்புறப்படுத்திக் கொண்டிருப்பதை அவதானித்த சித்தார்த்தன்.. எதைப் பற்றியும் சட்டை செய்யாமல்.. பட்டென்று காரை விட்டு வெளியேறி, ஒரு அதிகாரியிடம் போனான்.
தன்னை நோக்கி.. உச்சாதி பாதம் வரை.. ‘பெரிய இடத்துப் பையன்’ என்ற தோரணையுடன்.. ஒரு வாலிபன் வருவது கண்ட காவற்றுறை அதிகாரியும்.. சித்தார்த்தனின் புறமாகத் திரும்பினான்.
இவனோ.. தன் எரிச்சலை கனகச்சிதமாக மறைத்துக் கொண்டு, “இது எப்ப சரியாகும்?”என்று கேட்க.. அவரின் பதிலும் தாமதமின்றியே வந்தது.
“இன்னிக்கு முடியாதுன்னு தான் நினைக்கறேன்.. நிச்சயமா சொல்ல முடியாது.. சரியாக நாளை மதியம் ஆகலாம்.. இன்னிக்கே போயாகணும்னா.. இருக்கறது ஒரே வழி.. அதுவும் காட்டுவழி தான் இருக்கு.. சுத்திப் போகலாம்!” என்று அதிகாரியும் சொல்ல.. அவனது புருவமத்தியில் அவற்றைக் கேட்டு முடிச்சும் விழுந்தது.
இயற்கையாக நடந்த அனர்த்தத்திற்கு.. காவற்றுறை அதிகாரி மீது.. சினத்தைக் கொட்டுவது உத்தமம் அல்ல அல்லவா?
ஆகவே, பெருமூச்செறிந்தவனாக.. மூவெட்டில் மீண்டும் காரின் அருகே வந்து நின்றவன்.. இடுப்பில் இரு கை வைத்து நின்றவனாக.. காரின் டயருக்கு.. காலால் உதைத்தான்; உதைத்தான்; உதைத்துக் கொண்டேயிருந்தான். ஆத்திரம் தீருமட்டும்!! .
வீணே தன் கோபத்தை.. கார் டயர் மீது காட்டுவதால் ஆய பயனென்ன? இங்கு நின்று காலந்தாழ்த்தியிருப்பதுவும் அபத்தமே!!
பேசாமல் மீண்டும் வண்டியில் ஏறிக் கொண்டவன்.. யூ டர்ன் போட்டு திருப்பிக் கொண்டு.. வண்டியை விடலானான். அவன் காட்டுவழிப் பாதையூடாகவாவது சென்னை செல்வது என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
பாதி தூரம் வரை வந்ததும் தான்.. செல்லும் வழி யாரிடமும் கேளாமல் வந்த மடத்தனமும் புரிந்தது சித்தார்த்தனுக்கு.
உதவி கேட்கும் வகையில் யாரும் இலரோ? என்று விழிகளை தேட விட்ட போது.. பார்வைக்கு கிடைத்தான் ஒரு வழிப்போக்கன். தெய்வாதீனமே!!

முழுதும் ரெயின் கோர்ட் அணிந்திருந்த.. அந்த ஆடவனின் அருகில் சென்று வண்டியை நிறுத்தி.. கார்க்கண்ணாடியைத் தாழ்த்தி.. ஆடவரை ஏறிட்ட போது.. அவர் ஒரு வயது முதிர்ந்தவர் என்பது புரிந்தது.
“பெரியவரே!!”
“என்ன தம்பி?” என்ற முதிர்ந்தவரும் திரும்பி அவனைப் பார்க்கலானாள்.
“ இங்கேயிருந்து எப்படி காட்டுவழி மூலமா.. மெயின் ரோடுக்கு போறது?”
அவர் சிரித்துக்கொண்டே இடது புறம் பரந்து விரிந்திருந்த காட்டை நோக்கி காட்டினார்.
“ அதோ.. அந்த வழி தான் தம்பி.. அப்டியே போனீங்கனா.. இன்னும் இரண்டு மணித்தியாலத்துல மெயின் ரோடுக்கு போயிரலாம்” என்று கைக்காட்ட.. அவனும் இவர் கைக்காட்டிய திசை வழி காட்டினான்.
காட்டிற்கு இடையே ஒரு சிறிய பாதையைக் கண்டவனுக்கு.. ‘இரண்டு மணித்தியாலமா?’ என்று இடித்தது.
“சரிங்கய்யா.. நன்றி” என்று சொல்லி விட்டு.. வண்டியை அந்தப் பாதையில் செலுத்த.. சகதி நிறைந்த மண்பாதை வழி.. வண்டியை மேலேற்றினான்.
இதோ திரும்ப கானகத்தின் பாதை வழி தொடர்ந்தது பயணம்!!
சுமார் ஒன்றரை மணிநேரம் ஓட்டிக்கொண்டிருந்தும்.. இன்னும் பிரதான சாலை வந்தபாடில்லை.
மழை கொஞ்சம் ஓய்ந்திருந்த போதும் ஒரு மனிதனையும் பார்க்க முடியவில்லை, இந்த காட்டையும் இருளையும் விட்டு வெளியேற வழியும் தெரியவில்லை.
இப்போது.. செல்லில் மணியைப் பார்த்த போது விடிகாலை மூன்றரை மணியைக் காண்பிக்க.. இலேசாக பொழுது புலரவும் ஆரம்பித்திருந்தது.
சூழலில்..சூழ்ந்திருந்த மரங்களின் திரட்சியே கானகத்தின் ஆழத்தைச் சொல்ல.. அது எல்லாவற்றையும் இன்னும் கடினமாக்குவது போலிருந்தது.
இத்தனை மேடுபள்ளம் இருந்த கானகத்தில் அநாயசமாக வண்டியை ஓட்டி வந்திருக்கும் சித்தார்த்தன்.. வீரனே.
விரக்தியுடன் தொடர்ந்து அவன் ஓட்டிக் கொண்டிருந்த போது நின்றிருந்த தூரல் மழையும் மீண்டும். பலத்த காற்றுடன் பெய்யத் தொடங்கியது.
இந்த புயல், இரவு மற்றும் இந்த கனமழை மூன்றும்.. அவனை அங்கிருந்து நகர விடாமல் செய்ய.. நட்ட நடுக்கானகத்தில் அவனும் தரித்து நிற்க இடம் பார்த்தான்.
ஆங்கே தூரத்தே.. மின்னல் மின்னி மறைய.. ஒரு ஓலைக் குடிசை இருப்பதைக் கண்டவனுக்கு.. ஆபத்துக்குப் பாவமில்லை. சென்று உதவி கேட்பது தான் உத்தமம் என்ற எண்ணம் மிகைத்தது.
காரை நிறுத்திவிட்டு .. காருக்குள் அமர்ந்திருந்தவாறே.. தன் அலைபேசியை எடுத்து தன் உற்ற நண்பன், சந்துருவிற்கு அழைக்க முயற்சிக்கலானான்.
அழைப்பு போய்க் கொண்டிருந்தாலும் யாரும் எடுக்கத் தான் நாதியில்லை.
“டேய் சந்த்ரு.. நீ வேற ஏன் அவசரம் புரியாம.. எட்றா எட்றா.. பிக் அப் பிக் அப்..” என்று முணுமுணுக்க, எதிர்பார்த்தபடி சந்துருவோ அழைப்பை ஏற்கவில்லை.
சனிக்கிழமை இரவு என்பதனால் மூக்கு முட்டக் குடித்து விட்டு.. மல்லாக்கப் படுத்து மட்டையாகியிருப்பான் என்று தான் எண்ணவும் தோன்றியது.
“ஷிட்.. ஃப…..” என்று சிலபல கெட்ட வார்த்தைகள் போட்டு அர்ச்சித்தவன்.. யாரிடத்தும்.. எவரிடத்தும் உதவி கேட்க விருப்பப்படாதவன் தான்.
மழை ஓய்ந்திருக்க.. புழுக்கம் அதிகமாகவே டீஷேர்ட்டைக் கழற்றி காரிலேயே போட்டு விட்டு வெற்றுமார்பனாக ஒரு சில கணங்கள் நின்றான்.
உதவி கேட்பதா??
இருந்தாலும், இன்று வேறுவழியில்லை என்று தோன்ற.. காரை ஓரமாகத் தரித்து நிறுத்தி விட்டு.. நகர்ந்தான்.. இறங்கி. அந்த ஓலையிலான குடிசையை நோக்கி.
சகதியில் அழுந்திய பாதங்களை அழுத்திப் புதைத்துக் கொண்டு, கொஞ்சம் விரைவாக.. சென்று குடிசையைத் தட்டினான்.
“ஹலோ.. யாராவது இருக்கீங்களா?”
உள்ளே அனைத்தும் இருட்டாக இருக்கவே, ‘யாராவது அங்கே இருக்கக்கூடுமோ?’ என்ற சந்தேகத்துடன்.. அவன் இவ்வாறு கேட்டிருந்தான்.
அவனால் எதையும் பார்க்க முடியவில்லை. தனது அலைபேசியை எடுத்து டார்ச்சினை எரிய விட்டவன் மீண்டும் கதவைத் தட்ட முயன்றான்.
இழை-3

அதே சமயம்,
அந்த குடிசை முழுதும் இருளின் வசம் ஆட்பட்டிருக்க.. அங்கே மூச்சுக்கும் கூட பிராணவாயு அற்று திணறியவளாக.. ஒரு மூலையில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தாள் ஒரு பெண்!!
முழங்காலை மடித்து.. அதைக் கைகளால் கட்டிக் கொண்டு.. மூச்சு விடும் அரவமும் வெளியில் கேட்டு விடக்கூடாது என்று கர்ம சிரத்தையுடன் அமர்ந்திருந்த பேதை.. அணிந்திருந்த தாவணி கூட ஆங்காங்கே கிழிந்து.. நைந்து தொங்கிக் கொண்டிருந்தது.
மிக நீண்ட நேரம் ஓடி வந்த பொழுதினில்.. கானகத்தில் கால் இடறி விழுந்திருப்பாள் போலும்.
அவளது பூந்தேகத்தில் எல்லாம் சகதி ஒட்டியிருக்க.. கீழிதழோ.. வெடித்து.. நீலம் பூத்து..உதிரமும்இலேசாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
அவளது கண்களில் நின்றும் ஓயாமல் விழிநீர் வழிந்து கொண்டிருக்க.. இதழ்களோ.. சன்னமாக, “கடவுளே கடவுளே.. கடவுளே.. காப்பாத்து.. கா.. ஆகாப்க். பாத்து” என்று திக்கித் திணறிய குரலில் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

அந்தக் கயவர்களிடமிருந்து தன் கற்பைக் காத்துக் கொள்ள.. உயிரை கல்மண் தெரியாத வேகத்தில் கையில் பிடித்துக் கொண்டு.. ஓடி வந்திருந்தவளின் தாவணியும் காட்டு மரத்தில் சிக்கியிருந்தது.
அவசரத்தில் இவள் நிதானமின்றி இழுக்க.. அவள் தாவணியும்.. ‘சொர்ர்ர்’ என்று கிழிந்திருந்தது.
ஆகவே முந்தானை ஏதுமின்றி.. வெறும் ப்ளவுஸ் மற்றும் பாவாடையில்.. கொஞ்சம் எக்குத்தப்பான கோலத்தில் தான்.. உள்ளே அமர்ந்திருந்தாள் அவள்.
சுவற்றின் மீது முதுகை சாய்த்துக்கொண்டு அவள் கண்களை மூடிக்கொள்ள.. தன் முன்னழகுகளை மறைத்துக் கொள்ளும்.. மானம் காக்கும் கேடயமாக ஆகிப் போனது.. அவள் வீட்டை விட்டு ஓடி வரும் போது, கையோடு எடுத்து வந்திருந்த துணிப்பை.
பத்தொன்பது வயது பருவ மங்கை அவள்!! பெயர் மகிழினி.
மகிழினியும் தான் வீட்டை விட்டும் ஓடி வந்து விட்டாளா??
என்ன?? அங்ஙனம் அவளும் ஓடி வரும் வகையில் என்ன நேர்ந்தது?
தாய் இறந்த பின்.. தந்தை இரண்டாவதாக மணமுடித்துக் கொண்ட சிற்றன்னையோ.. பூதனை என்னும் அரக்கியாகவே இருக்க.. சிறு பெண் அவளாலும் என் செய்ய முடியும்?
சிற்றன்னையின் கொடுமைகளை நாளாந்தம் தாங்கித் தாங்கிப் பழக்கப்பட்டவளுக்கும் ஒரு கட்டத்தின் மேல் தாங்க முடியாதவாறு ஆகிப் போனது சிற்றன்னை செய்த செயல்!!
அவ்வூரில் கந்து வட்டி தொழில் புரியும்.. கோதண்டம் என்னும் அக்கிரமக்காரனுக்கு.. பணத்திற்கு பதில்.. இவளையும் கட்டிக் கொடுக்க முன்வர.. அதற்கு மேலும்.. பொறுக்க மாட்டாமல் போனது.
அக்கிரமக்காரனோ.. இவளை முப்பது வருடங்கள் அதிகம் கொண்டிருக்க.. அவனுக்கு ஏற்கனவே இரண்டு மனைவியர்கள் வேறு.
சித்தியும்.. அவனோடு திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கவே, இரவோடு இரவாக.. காற்றோடு காற்றாக.. வீட்டை விட்டும் தப்பி வர முயன்றவள் மாட்டிக் கொண்டாள் பாதி வழியில்.
மீண்டும் கயவர்களின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு ஒளிந்து கொள்ள வழி பார்த்து.. திக்குத் தெரியாத வனாந்தரத்தில்.. அவள் ஓடிக் கொண்டிருந்த கணம்.. இந்த குடிலும் தட்டுப்படவே, வந்து மூச்சுப்பேச்சு எழுப்பாமல்.. கமுக்கமாக ஒளிந்து கொண்டாள் அபலைப்பெண்.
விழிகளை மூடிக் கொண்டவளின் மூடிய இருண்ட திரைக்குள்.. எட்டு வயதில் தன்னை விட்டும் உயிர் நீத்த தாயின் முகம் லட்சுமி கடாட்சத்துடன் வந்து போக, இதயம் ஏங்கியது அவர் தம் அரவணைப்புக்காக.
“அ.. ம்மா!!” என்று கேவிக் கொண்டவளின் இதயம் தண்டவாள இரயிலைப் போலத்தடதடத்துக் கொண்டிருந்தது.
வெளியில் பெய்து கொண்டிருந்த கனமழையும், பேரோசையுடன் இடித்த இடியும், கண்ணைப் பறிக்கச் செய்யும் மின்னலும்.. மென்னிழையாளின் இதயத்தினை.. அதீதமாகத் திடுக்கிடச் செய்தன.
எந்நேரமும்.. அந்தக் கந்து வட்டிக்கும்பல் குடிசைக்குள் நுழைந்து தன்னை இழுத்துச் செல்லலாம் என்றானதும்.. அவளது ஹிருதயத்தின் படபடப்பு அதிகமாக.. அவளைப் பிடித்துக் கொண்டது கிலி!!
தன் நெஞ்சோடு அடக்கி வைத்திருந்த துணிப்பையை கெட்டியாக பிடித்துக்கொண்டு.. “கடவுளே கடவுளே.. அவனுங்க கண்ணுல நான் மாட்டிற கூடாது கூடாது கூடாது” என்று திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்துக் கொண்டிருந்தவள் இருள் மயத்தில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விடியும் வரை காத்திருக்கவும் தலைப்பட்டான்.

அப்படி அவள் குறுக்கி அமர்ந்திருந்த போதினில்.. கண்ணைக் கூசச் செய்யும் வகையில் வாகனத்தின் பீம் லைட் ஒளி.. குடிசைக்குள் விழுந்திருந்தது.
வந்தவன் தலைவன் என்பதறியாத மாதுவோ.. இதோ கயவர்கள் தான் அவளது இருப்பிடம் அடைந்ததாக எண்ணி இதயம் தூக்கிவாரிப் போட நடுநடுங்கிப் போனாள்.
எச்சில் கூட்டி மிடறு விழுங்கிக் கொண்டவளுக்கு.. சுவரோடு சுவராக இன்னும் ஒடுங்கிப் போனவளின் தேகத்தினுள்.. பயம் ஊர்ந்து அவளை சிலிர்க்க வைத்தது.
அவர்கள் அவள் இங்கே ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்தால்?? நிச்சயமாக இவள் அந்த கிழட்டுக் கோதண்டத்தை திருமணம் செய்து கொள்ள அல்லவா நேரிடும்??
அவள் அப்படித்தான் எண்ணிக்கொண்டாள். அந்த எண்ணமே அவளை நடுநடுங்க வைத்தது. அவள் இன்னும் தனக்குள் முடங்கிப் போய் அமர்ந்திருந்த தருணம் அது.
சில நிமிடங்கள் கழிந்த பின்னும், யாரும் வீட்டிற்குள் வராததால், அவள் ஜன்னலை நோக்கி நடந்தாள்.
வாகனத்தில் நின்றும் குடிசைக்குள் ஈயப்பட்ட ஒளியில்.. அவளது விழிகள் வேகவேகமாக சுழன்றது. ‘தன்னைத் தற்காத்துக் கொள்ள ஏதேனும் பொருட்கள் கிடைக்காதா?’ என்ற நப்பாசையுடன் தேடியது.
அது நிரம்பவும் பழங்காலத்துப் பொருட்கள் கொண்ட குடிசையாக இருக்க.. நெல்லுக் குத்தும் உலக்கையும் இருக்க.. மனதினுள் துணிவு பூண்டவளாக.. அந்த உலக்கையைக் கையில் எடுத்துக் கொண்டவளாக நிமிர்ந்தாள்.
அங்கே குடிசைக்கு வெளியே.. காரின் வெளிச்சம் அணைக்கப்பட..அதனைத் தொடர்ந்து.. காரினுள் இருந்து..அழுத்தமான காலடிகளுடன்.. ஒரு ஆஜானுபாகுவான உருவம் இறங்கி வரும் தடயமும் கூட கேட்டது.
வருபவன் கோதண்டத்தின் ஆளாக இருக்கக்கூடும் என்று தப்புக்கணக்குப் போட்டுக் கொண்டவளோ.. அந்த ஆஜானுபாகுவான இராக்ஷசன் கதவைத் திறந்ததும்.. அவன் உச்சந்தலையில் உலக்கையைப் போட்டு விடும் எண்ணத்துடன்.. கதவுக்கு அருகண்மையில் தயாராகி நின்றாள் அவள்.
உள்ளே தன்னைத் தாக்க.. ஒருத்தி தயாராகி நிற்பது அறியாமல்.. ஒற்றைக் கையில் டார்ச் லைட்டுடன் வந்து.. கதவைத் திறந்திருப்பான் நம் நாயகன் சித்தார்த் கார்த்திக்கேயனும்.

அவன் கதவைத் திறந்ததும் தான் தாமதம்.. இவளும்.. கோபாவேசத்துடன்.. உலக்கையை இரு கையால் உயர்த்திப் பிடித்துத் தூக்கிக் கொண்டு, “ஏய்ய்ய்!!” என்று தாக்கத் தயாரான நொடி அது!!
சித்தார்த்தும் சப்தம் வந்த திசையின் புறமாக டார்ச் லைட்டினை அடிக்க.. அது தெய்வாதீனமாகத் தாக்கியது அவளின் கண்களை நேரடியாக. அதில், அவளால் சரிவரப் பார்க்க முடியாமல் போக.. கண்களும் கூசச் சித்தமானது.
அக்கணம்..இவளின் பாதங்களும் களிமண் பூசி மெழுகப்பட்ட தரையில் வழுக்கவே.. கையில் ஏந்திப் பிடித்திருந்த உலக்கையும் விழுந்ததும் தொப்பென்று தரையில்.
இவளும் கை, கால்களை ஆட்டிக் கொண்டு தரையில் சமநிலைத் தடுமாறி விழ எத்தனிக்க.. அவள் தரையில் விழுந்து விடாத வண்ணம்.. அவளது வெற்றிடையூடுக் கையிட்டுத் தாங்கிப் பிடித்துக் கொண்டது.. கார்த்திக்கேயனின் வலிமையான கரங்கள்.

மழையில் நனைந்த ஜில்லென்ற அவனது கரங்கள்.. அவளது உஷ்ணத்தில் கதகதத்த இடையில் அழுத்திப் பதிந்து.. தூக்கி இழுத்தது. அப்படி அவன் இழுத்த தினுசில்.. பதின்ம வயது மங்கையின் அழகிய இளம் கொங்கைகள் ‘பச்சக்’ என்று வந்து மோதுண்டது அவனது நிர்வஸ்திர மார்பினில்!!
அக்கணம்..அவன் கையிலிருந்த டார்ச்சும் உருண்டோட.. மூர்ச்சையானது. குடிசையில் எங்கும் இருட்டு!!

சித்தார்த் கார்த்திக்கேயன்.. எக்குத்தப்பான கோணத்தில்..அரைநிர் வஸ்திர நிலையில்.. ஸ்பரிசித்த முதல் மங்கை? அப்பெண்!!
திடீரென மின்னல் மின்னி அடங்க.. அதில் தான்.. அம் மங்கையின் வதனத்தைப் பார்த்தவனுக்கு, அவள் முகத்தில் ஒருவித பயம் தெரிந்தது.
அவள் கண்கள் விரிந்து வேற்றுகிரகவாசியைப் பார்த்தது போல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கும் கூட இது கோதண்டத்தின் ஆள் அல்ல.யாரோ வேற்றாடவன் என்பது புரிந்தது.
இவனும் மின்னலின் வெளிச்சத்தில் தான் உணர்வு நிலைத் தெளிந்தவனாக.. அவளைப் பற்றியிருக்கும் கையை விட்டான் அவன்.
அவளோ.. அவன் சட்டென கையை விடவும்.. இன்னும் சமநிலை அடையாமல் நின்றவள்.. மீண்டும் விழ எத்தனிக்க.. சிறு பெண் அல்லவா. அச்சத்தில்.. சித்தார்த்தனின் கழுத்திலேயே.. கைகளை மாலை போல கட்டிக் கொண்டாள்.

அவளும் எதிர்பாராமல்.. கழுத்தில் கையிட்டு இழுக்கவும்.. இவனும்.. அவளோடு தடுமாறி.. அவனது பஞ்சன்ன மேனியில்.. அப்படியே தடுமாறி அழுத்தி விழுந்திருந்தான்.
அவள்.. அவனுக்குக் கீழே!! தரையில்.
அவனது வன்தேகத்தின் வன்மையைத் தாளாமல்.. மருள மருள மான்குட்டிப் போல விழித்தபடி, நின்றிருக்க.. அவனது கழுத்தைக் கட்டிக் கொண்ட தோரணை மாத்திரம் சிறிதும் மாறவில்லை.அவனை விட்டும் விலகவில்லை.
வெற்று மார்பனாக அவன்!! தாவணி முந்தானை இன்றி.. அவனின் கீழே அரசல்புரசலாக உரசிக் கொண்டு.. கிட்டத்தட்ட முயங்கும் கோலத்தில் அவள்!!
அக்கணம்.. இருவருமே எதிர்பாராத கணம்.. பலதும் பத்தும் அங்கு நிகழ்ந்தேற.. அந்த சங்கமப்புள்ளி எத்தனை ஆபத்தான நொடிகளைக் கொண்டது என்று யாருமே அறிந்திருக்கவில்லை.
சித்தார்த்தன், “ஹேய் பொண்ணே..என் கழுத்தை விடு.. நான் எந்திரிக்கணும்!!” என்று சொல்லிக் கொண்டிருந்த கணம்.. சடாரெனத் திறக்கப்பட்டது குடிசையின் கதவு!!
அதன் வழி.. புலர்காலைப் பொழுதினை இளநீல நிறமான கதிரவனின் ஒளி.. ஈயப்பட்டது குடிசைக்குள்!!
அங்கே வெள்ளை வேட்டி சகிதம்.. கழுத்தில் புலிநகச் சங்கிலியோடு நின்றிருந்தான் கோதண்டம்!!
கூடவே.. அவனது அடியாட்களும்!!
அங்கேயே நாசித்துவாரங்கள் இரண்டும் விடைத்தடங்க.. கோபத்துடன்..பற்களை நறுநறுவெனக் கடித்தபடி நின்றிருந்தாள் அவளது குரூரச் சித்தியும்!!
கோதண்டத்தோடு இணைந்து தேடாமல்.. பிரிந்து தேடிக் களைத்து.. கோதண்டத்தோடு ஒன்றாக வந்திணைந்திருந்தாள், சிற்றன்னை பரிமளமும்!!

விழிகளாலேயே.. சுட்டெரிக்கும் சிற்றன்னையின் முன்னிலையில், வேற்றாடவனுடன், அந்நியனுடன்.. அவள் நின்றிருக்கும் கோலம்??
ஏதும் நடக்கவில்லை என்றாலும் நம்பத் தான் இயலுமா?
அவள் திகிலுடன் சித்தியைப் பார்த்த வண்ணம்.. “சி.. சித்தி!” என்றவளாக.. சித்தார்த்தனிலிருந்து எழ.. அவளின் பார்வை.. ஸ்மரணை அற்றுப் போனது. அவளது இதயமும் துடிப்பதை நிறுத்திப் போனது.
இனி என்னென்ன நிகழ்ந்திடுமோ?

(இதோ புதுக்கதையின் முதல் மூன்று அத்தியாயங்களுடன் வந்துட்டேன். ♥️💖💞நாயகன் சித்தார்த்’தாக – மகேஷ் பாபு, நாயகி மகிழினியாக.. கிருத்தி ஷெட்டி!! 💞💖😘😘♥️❤️கூகுள்ள.. இராத்திரி இருட்டுல இருக்கறது போல நாயகன், நாயகி படங்கள் தேடினேன் கிடைக்கலை. 🙈🙈🏃🏃எல்லாம் பட்டப்பகல் வெளிச்சத்தில் தான் வருது. ப்ளீஸ் எனக்காக அட்ஜஸ்ட் கரோ..💞💖😘😘💕💐 எப்டியிருக்கு முதல் யூடிக்கள்.. கமென்ட் ப்ளீச்.. தங்கபுஷ்பங்களா♥️🤝💞💐💖💕😘)