யாயாவும் உன்னதே.. 1

யாயாவும் உன்னதே..!

 

ஜியா ஜானவி..

 

1

 

“ஆரவ்.. நில்லு.. ஓடாதே..! தங்கம் இல்ல.. அம்மா சொன்னா கேட்கணும்..” என்ற இளம் பெண்ணின் அன்பு கலந்த கட்டளை குரல் கேட்க..

 

“மாட்டேனே.. கேட்க மாட்டேனே..” என்று குறும்போடு கூடிய சிறு பாலகனின் இனிய குரலும் இணைந்தே கேட்க.. 

 

“செல்லம்.. அம்மா சொன்னா கேட்கணும். ஆரவ் குட் பாய் இல்ல? மம்மாஸ் பாய் இல்லையா?” என்ற அந்த இளம் தாயின் இனிமையான அணுமுறையில் அடத்தை விட்ட அந்த பாலகனும் “எஸ்.. எஸ்..! ஐ அம் குட் பாய் அண்ட் மம்மா’ஸ் பாய்” என்று கன்றுக் குட்டி போல துள்ளி வந்து தாயின் மடியில் அமர்ந்து கொண்டான்.

 

தன்‌ கையில் இருந்த மேகஸினில் மூழ்கி இருந்த நம் நாயகனோ மெல்ல தலையை நிமிர்த்தி அவர்களை காண முயன்றான்.

அவர்களின் சம்பாஷனை செவியில் விழுந்தாலும் அவர்களோ அவனின் கண்பார்வையின் வட்டத்தில் விழவேயில்லை.

 

“யாரா இருக்கும்? அவங்க குரல் கேட்டே பாக்கணும்னு தோணுதே..!” அலைபாய்ந்த அவனது தீர்க்கமான விழிகளின் தேடலில் அந்த இளம் தாயும் அவளின் பாச பாலகனும் விழவே இல்லை.

 

“ம்ப்ச்.. பட் ஷி இஸ் குட் மதர்” என்றவனின் நினைவுகளில் சில வேண்டத்தகாத நிகழ்வுகள் உலா போக…

 

“நோ.‌. நோ‌‌.. ஜிஷ்ணு. யு ஆர் ப்ரேவ் பாய்..” என்று சிறுவயது முதல் அவனுக்கு அவனே சொல்லிக் கொள்ளும் அந்த வார்த்தைகள் நினைவுக்கு வர.. உதடுகளில் முகிழ்த்த சிறு புன்னகையோடு கையில் கட்டி இருந்து ரோலக்ஸ் வாட்ச் பார்த்தான்.

 

அவன் ஜிஷ்ணு உபேந்திரா பசவராஜூ..!

 

அவன் இருந்ததோ பெங்களுர் ஏர்போர்ட்..!

 

ஹைதராபாத் செல்ல வேண்டி அவன் அமர்ந்திருக்க, அவன் செல்லவிருக்கும் பிளைட்க்கான அனௌன்ஸ்மென்ட் வந்ததும் ட்ராலியை இழுத்துக்கொண்டு வெகு ஸ்டைலாக அதே நேரம் வேக நடையுடன் சென்று கொண்டிருந்தான்‌ ஜிஷ்ணு.

 

அங்கிருந்து பெரும்பாலான பெண்களின் கண்கள் மட்டும் அல்ல ஆண்களின் கண்களும் ஈ என அவனைத் தான் மொய்த்தது..!

 

அவன் முகம் அந்த அளவு பிரபலமானது..! காரணம் பல இளம் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களின் முகம் வசீகரத்தை.. அழகை அரவணைக்கும் அழகு சாதன பொருட்களின் அரசன் அவன்..!

 

“ஆரா..” என்பது அவனது பிராண்ட். அதை உருவாக்க அவன் பட்ட சிரமங்களும் வலிகளும் தடைகளும் மிக மிக அதிகமே..!

 

அப்போது அவனது பிஏ அஸ்வத்திடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

 

“எஸ் அஸ்வத்..!” என்று ஃபோனை அட்டென்ட் செய்த விதமே பார்ப்பவரை ‘வாவ்’ என்று போட வைக்கும்.

 

ஆள் வசீகரன் மட்டுமல்ல குரலும் கம்பீரம் தான். இருவரின் சம்பாஷனை முழுவதும் தெலுங்கில் தான்.

 

 “அண்ணைய்யா.. கிளம்பிட்டீங்களா ஒரு முக்கியமான விஷயம் உங்ககிட்ட சொல்லணும்” என்றவனது குரலில் சிறு பதட்டம்.

 

அவனது பிஏ என்றாலும் சொந்தங்களின் சிக்கலான உறவு முறையில் அஸ்வத் அவனுக்கு தம்பி முறை. பெரும்பாலும் அவனை அண்ணையா என்று தான் விளிப்பான். ஏதேனும் வெளியிடங்கள் மற்றும் இவர்கள் கலந்து கொள்ளும் கான்ஃபரன்ஸ் மீட்டிங்கில் மட்டுமே அவனை மற்றவர் முன்னிலையில் சார் என்று அழைப்பான். 

 

“செப்பு ரா.. எதுக்கு இவ்வளவு பில்டப் கொடுத்துக்கிட்டு இருக்க நீ” என்றபடி தன் வாட்சை மறுபடியும் ஒரு முறை பார்த்துக் கொண்டான்‌ ஜிஷ்ணு‌. அவனுக்கு பின்னாடி அவனது பவுன்சர்கள் அவனது ஒவ்வொரு நடைக்கும் ஏற்ப அவனை பாதுகாத்தபடி வந்தனர்.

 

“அண்ணையா.. இப்ப நீங்க அங்க கண்டிப்பா போய்‌ தான் ஆகணுமா? என்று கேட்டவனின் குரலில் அத்தனை வருத்தங்கள். 

 

ஒரு பெருமூச்சு விட்டவன் “கண்டிப்பா..! நான் இல்லாமல் எப்படி?” என்றவனின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்தன.

 

“ஆனா.. அங்க ஏதாவது உங்களை ட்ராப் பண்ணினா?” என்று கேட்டவனுக்கு சிரிப்பே பதிலாக வந்தது‌ ஜிஷ்ணுவிடமிருந்து‌.

 

“அண்ணைய்யா..” என்று அஸ்வத் கெஞ்ச..

 

“எவ்ளோ நாளைக்கு தான் என்னை வைத்து அவங்க கேம் விளையாடுவாங்க. ஃபார் அ செஞ்ச் ‌‌திஸ் டைம் ஐ த கேம் செஞ்சர். ஈஸாரி நேனு வாரிதோ ஆடதனு (நான் அவங்கள வைச்சு விளையாட போறேன்)..! லெட் யூ சீ..!” என்றப்படி ஃபோனை‌ கட் செய்தான் ஜிஷ்ணு.

 

செக்கிங்காக அவன் சென்று திசையின் எதிர் திசையில் தான் சென்றார்கள் அந்த இளம் தாயும் அவளது பாலகனும். விதி அவர்களை இப்பொழுது பார்க்க கூட விடவில்லை. 

 

ஒரு வேளை அவர்கள் பார்க்கும் நேரமும்.. தருணமும்.. இதுவல்லவோ..!

 

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம். விமான நிலையத்தில் செக்கிங் விட்டு வெளியே வந்த ஜிஷ்ணு கண்களை மூடி மூச்சை நன்றாக இழுத்து தன் நுரையீரலில் நன்றாக நிறைத்தவன், நிதானமாக மூச்சை வெளியிட்டு மெல்ல கண்களை திறந்தான்.

 

எவ்வளவுதான் பல ஊர்கள்.. பல நாடுகள்.. ஏன் கண்டங்கள் கூட சுற்றி வந்தாலும்.. உலகத்தில் மிக அற்புதமான இடங்களில் வாழ்ந்து வந்தாலும்.. தாய்மண் என்பது தனி தானே!!

 

ஜிஷ்ணுவுக்கும் அப்படித்தான் இந்தியா மட்டுமல்ல பல வெளிநாடுகள் கூட அவன் சுற்றிக் கொண்டே தான் இருக்கிறான் பூமியை போல.. நிற்காது..!

 

ஆனாலும் ஹைதராபாத்தில் கால் எடுத்து வைத்தாலே.. அது ஒரு தனி சொந்தம்..! ஒரு தனி சுகம்..! தாய் மண் அல்லவா??

 

அது தாய் மண்ணை பிரிந்து இருப்பவர்கள் மட்டுமே உணரக்கூடிய ஒரு அற்புத உணர்வு..!

மீண்டும் தாய்மடி புகுந்த நிம்மதி..! ஏன் மீண்டும் நம் தாய் கருவறையில் சுகமாக உயிர் வாழும் பாதுகாப்பு..!

 

தாய் மண்ணை மட்டுமல்ல தாயையும் கூட பிரிந்து தான் இருக்கிறான்.. தாய் மண்ணை பிரிந்த போது இருந்த அந்த வலியும் பின்னர் வந்து சேரும் போது ஏற்படும் அந்த இன்பமும் ஏனோ தாயிடம் இருந்ததில்லை ஜிஷ்ணுவுக்கு..!

 

ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி விமான நிலையத்திலிருந்து வெளிவந்த ஜிஷ்ணு அவனது கார் வந்திருக்க.. அதில் ஏறி அமர்ந்தான். பின்னால் வந்த தார் ஜீப்பில் அவனது பவன்சர்கள்.

 

ஜிஷ்ணுவின் சொந்த ஊர் கிருஷ்ணா நதி கரையில் அமைந்த ஸ்ரீசைலம்..!

 

திருப்பருப்பதம் என்பது அதன் பண்டைய பெயர். ஸ்ரீசைலத்தின் மல்லிகார்ச்சுனேசுவரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

 

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற தலமாகும். 

 

இத்தலம் ஆந்திர மாநிலத்தின் நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ள, இது கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது. 

 

அருள்மிகு மல்லிகார்ஜுன சுவாமிக்காக அமைக்கப்பட்டது. இத்தலத்தில் நந்தி தேவர் தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றல் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்..!

 

உலகின் பல்வேறு இடங்களில் இருந்து எல்லாம் ஸ்ரீ சைலத்தில் வீற்றிருக்கும் மல்லிகார்ஜுனரை காண பக்த கோடிகளும் சுற்றுலா பயணிகளும் வந்த வண்ணம் இருக்க.. இவனோ அதை எல்லாம் ஒரு வினோதமாய் பார்த்துக் கொண்டே பயணித்துக் கொண்டிருந்தான். 

 

ஜிஷ்ணுவுக்கு தெய்வ பக்தி இல்லை என்றெல்லாம் கூற முடியாது. ஒரு காலத்தில் இதே ஸ்ரீசைலத்தில் அருள் பாலிக்கும் மல்லிகார்ஜுனவை மனம் உருகி வணங்கிய காலங்களும் உண்டு..! இன்று அதே மல்லிகார்ஜுனாவை எட்டி நின்று ஒருவித விருத்தி புன்னகையோடு பார்ப்பவனும் அவனேதான்..!

 

“நீ என்னை தேடி வரும் காலம் வெகு விரைவில் மகனே..!” என்று அவரும் அதே மென்புன்னகையோடு அவனை தான் பார்த்திருந்தார்..!

 

மல்லிகார்ஜுனனில் வரும் அர்ஜுனனின் பெயரை தான் ஜிஷ்ணு என்று இவனுக்கு ஆசையாக வைத்தார். அவரது தாத்தா சீனிவாச உபேந்திர பசவராஜூ.‌.!

 

பாசம்… ம்ஹீம்.. எல்லாம் வேசம்..!!

 

ஒருவனுக்கு உறவுகளுக்கு இடையே பாசமும் அன்பும் வேண்டுமென்றால் அவனிடம் பேரும் புகழும் இருக்க வேண்டும்.

 

அந்த பேர் புகழ் பணம் வசதி மட்டுமே அவனின் நிலையை அங்கே நிலை நிறுத்துக்கின்றன..!

 

உண்மையான அன்புக்கும் பாசத்துக்கும் இங்கே மதிப்பில்லை..!

 

“நல்லா இருக்கிறாயா?” என்று ஃபோன் செய்து பேசினால்..

 

“ஆமா.. இவன் ஒரு வேலை இல்லாதவன் சும்மா சும்மா போனை போட்டு நல்லா இருக்கியா.. நச்சரிக்கிறான்” என்பார்கள்.

 

இதே எப்போதாவது ஒருமுறை விலை உயர்ந்த ஒரு பரிசு பொருளை கொடுத்து பேருக்கு நாலு வார்த்தையை பேசினால் “இன்னும் அவன் என்னை மறக்கவில்லை.. பாரு எவ்வளவு உயர்ந்த பரிசை தருகிறான்.!” என்று மகிழ்ச்சியோடு கூறும் உறவுகளை இங்கே அதிகம்..!

 

பரிசுக்கும் பொருளுக்கும் இருக்கும் மதிப்பு, உண்மையான பாசத்துக்கு இங்கே கிடையாது. அதை உணர்பவர்களும் கிடையாது..! ஒரு வேளை அவர்கள் உணரும் நேரம் அந்த பாசமும் இருப்பதில்லை..!

 

மனதில் இவ்வாறான எண்ணங்கள் அலை மோத தலையை உலுக்கிக் கொண்டவன், “நோ.. ஜிஷ்ணு..! டோண்ட் லெட் திஸ் மேட்டர் ஓவர்வெல் மீ..!” என்று தனக்கு தானே கூறிக்கொண்டவன் இப்போது காரில் நன்றாக நிமிர்ந்து அமர்ந்து கொண்டான். 

 

சற்று நேரத்தில் அந்தப் பெரிய அரண்மனை போன்ற வீட்டின் முன் அவனது கார் வழுக்கிக்கொண்டு வந்து நின்றது.

 

அவன் கார் பின்னால் வந்த தார் ஜீப்பில் இருந்து இறங்கிய இரண்டு பவுன்சர்கள் அவனுக்கு பாதுகாப்பாக நின்று கொள்ள.. ஒரு மிடுக்கான ஆளுமையோடு அந்த வீட்டினை நிமிர்ந்து பார்த்தவனது முகம் இப்போது சற்றே கர்வத்தை தக்க வைத்துக் கொள்ள.. கம்பீரமாக அவ்வீட்டுக்குள் நடந்து சென்றான் ஜிஷ்ணு உபேந்திரா பசவராஜூ..!

 

மொத்த குடும்பமும் அங்கேதான் குழுமி இருந்தது..!!

 

ரேபான் கூலருக்கு பின்னில் அவர்களை பார்த்தபடி உள்ளே நுழைந்தவனை தான் அத்தனை கண்களும் வியப்புடனும் ஒருவித மெச்சுதலோடும் பார்த்தன..

 

ஆனால் அவனோ அவர்களெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்காது, அங்கே அமர்ந்திருந்த அவனது தாத்தா சீனிவாச உபேந்திரா பசவராஜூ அருகே சென்று வழக்கம் போல அவரது காலை தொட்டு கும்பிட்டு நிமிர்ந்தவன், அவரை சுற்றி நின்றிருந்த அவனது அப்பா பெரியப்பா சித்தப்பாவுக்கு ஒரு தலையசைப்பைக் கொடுத்துவிட்டு அவனும் அவர்களோடு கையை முன்னால் கட்டிக்கொண்டு நின்றிருந்தான். 

 

அதுவரை அவனுக்காக காத்திருந்த தாத்தா அவன் வந்த பிறகே அங்கிருந்த புரோகிதர்களுக்கு கையை காட்ட அவர்கள் ஆரம்பித்தனர்.

 

அன்று அவனது பாட்டி தீபமாலாவுக்கு ஐந்தாவது நினைவு தினம்.

 

போட்டோவில் சிரித்த முகத்தோடு அந்த காலத்து வைஜயந்தி மாலா போல அழகாய் இருந்த பாட்டியை வைத்த கண் வாங்காமல் பார்த்து இருந்தான் ஜிஷ்ணு. 

 

அப்பொழுது மெதுவாக அவனது அருகில் வந்த அவனது சித்தப்பா மகன் ராகவ் “அண்ணையா.. லாஸ்ட் டைம் ஒரு மாடல் ஓட ரேம்ப் வாக் போயிருந்தீங்க இல்ல.. அந்த மாடலோட நம்பர் கிடைக்குமா?” என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தான். 

 

எதுக்கு அவன் அந்த மாடலோட நம்பரை கேட்கிறான் என்று அறியாதவனா அவன்.

 

‘பேர் என்னவோ எனக்கு காதல் மன்னன் அர்ஜுனனின் பெயர் ஆனால் அது உனக்கு வைத்தால் தானடா பொருத்தமாக இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டவன் 

 

“சித்தப்பா கிட்ட கொடுக்கிறேன். நீ வாங்கிக்கோ” என்றதும் வாயை மூடி வேண்டாம் என்பது போல ஜிஷ்ணுவை விட்டு இரண்டு அடி தள்ளி நின்று கொண்டான்.

 

“வெளியில் தான் டா ராமன்.. நீ எல்லாம்..” அதற்கு மேல் அவன் எண்ணத்தில் தோன்றிய கெட்ட வார்த்தைகளை உதிர்க்காமல் வாயை இழுத்து மூடிக்கொண்டவன் அமைதியாக நின்றிருந்தான். சற்று நேரத்தில் பூஜை எல்லாம் முடிந்து அனைவரும் அந்த பெரிய ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தனர்.

 

அக்குடும்பத்தின் தலைவர் சீனிவாச உபேந்திரா பசவராஜூ. அவருக்கு மூன்று மகன்கள் மூத்தவர் பாலமுரளி மனைவி சரிதா. அவர்களுக்கு சின்மயி என்ற மகளும். அஸ்வின் என்ற மகனும். இருவருமே திருமணம் ஆனவர்கள்.

 

இரண்டாவத்து பாலாதித்யா அவரது மனைவி பைரவி. அவர்களது மகன்தான் விஷ்ணு. 

 

மூன்றாவது மகன் பார்கவா அவரது மனைவி அமிர்தகலா இவர்களுக்கு ராகவ் ராகவி என்ற இரட்டையர்கள். ராகவிக்கு அஜயோடு ஒரு வருடத்திற்கு முன் தான் திருமணம் நடைபெற்றது. 

 

அம்மா அப்பாவிடம் பாசமாக எல்லாம் பேசவில்லை.‌ தன் ஃபோனில் அமைதியாக அமர்ந்து தன்னுடைய வேலையை அவன் பார்த்துக் கொண்டிருக்க.. அவன் அருகில் அமர்ந்த அஸ்வின் அவனை கண்டுகொள்ளாமல் அவர்களது பாரம்பரிய தொழில் பற்றி அந்த பக்கம் அமர்ந்திருந்த சித்தப்பா பார்க்கவாவோடு பேசிக் கொண்டிருந்தான். 

 

ஜிஷ்ணு அருகே வந்தாள் சின்மயி. இருவருக்கும் மூன்று மாதங்களே வித்தியாசம்.

 

“போன முறை உன்னோட பியூட்டி ப்ராடக்ட்ஸ் என்னோட பிரண்டுக்கு அனுப்பி வைத்திருந்தேன் ஜிஷ்ணு. ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னா..” என்று பிட்டை போட்ட பெரியப்பா மகளை பார்த்தவனுக்கு அவள் எதற்கு அடிபோடுகிறாள் என்று புரிந்தது.

 

அவன் தன்னுடைய பவுன்சரை ஒருவரை பார்க்க.. அவனும் தலையாட்டி கையில் ரெண்டு கிட் பேக்கோட வந்தான். ஒன்று சின்மயிடம் கொடுத்தவன் மற்றொன்றை அவன் சித்தப்பா மகள் ராகவியிடம் கொடுக்க இருவரும் வாயெல்லாம் பல்லாக வாங்கிக் கொண்டனர். 

 

ஏனென்றால் அதனோட மதிப்பு வெகு வெகு அதிகம். அதில் உள்ள மேக்கப் பொருட்களை ஒரு மாதத்திற்கு அவர்கள் வாங்கினாலே சில லட்சங்கள் ஆகும். ஜிஷ்ணு கொடுத்தது ஆறு மாதங்களுக்கான கிட் பேக்கை..! பின்னே அவர்கள் சிரித்த சிரிப்பில் தொண்டை வழி பூலோகமே தெரிந்திருக்குமே..!

 

“ஏன்‌ ரா ஜிஷ்ணு.. உன் தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் மட்டும் தானா? எங்களுக்கெல்லாம் ஒன்னும் இல்லையா?” என்று அவனது சித்தி அமிர்தகலா சிரிப்போடு கேட்டார்.

 

இதே வாய் தான் அன்று “இவன் எல்லாம் எங்க உருப்பட போகிறான்? இவனுக்கு செய்றது எல்லாம் காசுக்கு பிடித்த தண்டம்” என்று திட்டியது நினைவில் வந்து போக…

 

“மாசம் மாசம் என் ஹைதராபாத் பிரான்ச்க்கு வந்து உங்களுக்கு தேவையான திங்ஸ் எல்லாம் வாங்கிட்டு போறீங்களே.. அது பத்தலையா சித்தி?” என்று கேட்டான் ஒருவித நக்கலாக..

 

“அது வந்து.. அது.. ஜிஷ்ணு.. யாருக்காக செய்ற? எல்லாம் உன் சித்திக்கு தானே?” என்று சிரித்து மழுப்பினார் அமிர்தகலா.

 

அப்பொழுது பைரவியோ “அப்போ அதெல்லாம் நீ என் பையன் கிட்ட இருந்து சும்மாதான் வாங்கிட்டு வரியா? என்னமோ காசு கொடுத்து வாங்கிட்டு வர மாதிரி அவ்வளவு பில்டப் பண்ணுன?” என்று தன் மகன் என்று அவர் அழுத்தி சொன்னதை ஒரு வித அசூசையோடு பார்த்தான் ஜிஷ்ணு.

 

இதற்குப் பின் அம்மா ஆடும் நாடகம் அவனுக்கு தெரியாதா என்ன? தன் பிள்ளை கோடி கோடியாக சம்பாதிப்பதை இவர்கள் லட்சங்கள் ஆக மாத மாதம் வாங்கி செல்கிறார்கள்.. இதனால் எவ்வளவு நஷ்டம்? என்று ஒரு ஆட்டம் போடுவார்.

 

அதற்கு பின் குடும்பமே அவனது பழைய காலத்தை பற்றி பேசும்.. 

 

“நோ.. வே.‌. அதையெல்லாம் பொறுமையாக கேட்க என்னால் ஆகாது”

 

அதற்கு மேல் அங்கே தங்க முடியாமல் “ஓகே தாத்தையா நான் கிளம்புறேன்” என்று கிளம்பியவனை அதிர்ச்சியோடு பார்த்த சீனிவாச உபேந்திரா 

 

“நான் இன்னைக்கு உன்னை கண்டிப்பா வர சொன்னதே உன் கல்யாணத்தை பத்தி பேச தான்” என்றார்.

 

“ஆமா ஜிஷ்ணு.. என் நாத்தனார் கூட உன் ஜாதகம் பக்கவா பொருந்தி இருக்கு” என்றாள் சின்மயி சந்தோஷமாக.. 

 

அவள் கல்யாணத்தின் போது “சும்மா சும்மா என் பக்கத்துல வந்து நிக்காத ஜிஷ்ணு.. என் புருஷன் வீட்டு பக்கம் பொண்ணுங்க எல்லாம் இருக்காங்க” என்று அவனை அடித்து விரட்டாத குறையாக விரட்டியது இதே சின்மயி தான்.

 

“நோ.. நோ.. என்னோட மச்சினிச்சிய ஜிஷ்ணுவுக்கு பேசலாம்னு நான் முடிவுல இருக்கேன்” என்றான் அஸ்வின் மனைவியின் கண் பாஷையை படித்து.

 

“இன்னைக்கு என் மச்சினிச்சி அவ பிரண்ட்ஸோட வந்திருக்கா.. நீ கொஞ்ச நாள் அவுட் ஹவுஸ்ல போய் தங்கிக்கிறியா?” என்று கேட்டதும் இதே அஸ்வினும் அவனது மனைவியும் தான்.

 

“ஏன் ஊர்ல வேற பொண்ணுங்களே என் பையனுக்கு கிடைக்காதா? உங்க பக்கம் ஒன்னும் இல்லாத குடும்பத்தில் இருந்து தான் என் பையனுக்கு நான் பொண்ணு எடுக்கணுமா? என் பையனுக்கு நான் எப்பேர்பட்ட பொண்ண பார்த்து வச்சிருக்கேன் தெரியுமா?” என்று பைரவி அவர்களை பார்த்து மிடுக்காக கூற..

 

அதுவரை உள்ளிருந்து அழுத்தங்கள் எல்லாம் சேர்ந்து வெடித்து சிதற…

 

“எதுக்கு பாட்டிக்கு பக்கத்துல என்னையும் போட்டோவா மாட்டி வைக்க வா?” என்றான் ஆத்திரத்தோடு..!

 

“ஜிஷ்ணு..!” என்று பாலாதித்யா அதிர்ந்து கத்த..

 

“பேசாதீங்க..! யாரும் பேசாதீங்க..! என்னையும் பேச வைக்காதீங்க..! என் வாழ்க்கையை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும். தாத்தையா.. உங்க குடும்ப கௌரவத்தை காப்பாற்ற.. உங்களுக்கு கீழ் படிந்து நடக்கத் தான் இத்தனை பேர பிள்ளைங்க இருக்காங்களே.. அவங்கள மட்டும் நீங்க பாத்துக்கிட்டா போதும். அவங்களுக்கு தேவையானதை செஞ்சி கொடுத்தால் மட்டும் போதும்..! நான் சுயம்பு..! என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்..!” என்று கம்பீரமாக உரைத்தவன், ஒரு நிமிடம் கூட தாமதிக்காது வேகவேகமாக வீட்டை விட்டு வெளியேறினான். 

 

வழியில் அவ்வீட்டின் ஹாலில் மாட்டப்பட்டிருந்த குடும்ப புகைப்படத்தினை பார்த்தவன் கண்

கள் லேசாக கலங்க மீண்டும் தன் ரேபனை மாட்டிக் கொண்டு வேக நடையோடு வீட்டை விட்டு வெளியே வந்தான்.

 

அதுவரை முட்டி இருந்த மூச்சு எல்லாம் சீரானது போல உணர்ந்தான். 

 

தொடரும்..