இத இதமாய் கொன்றாயடி

 

1 -இத இதமாய் கொன்றாயடி

 

 

 

    பொன்னேரி கிராமம் எங்கும் பார்க்கவே பச்சப்பசேல் என்று பயிர்கள் பசுமையாக காட்சியளித்தது. அந்த ஊரில் பெரியகட்டு வீடு ஒன்று உண்டு என்றால் அது அவன் வீடு தான். அவன் பெயர் பூந்தமிழ்ச்செல்வன். அவனுக்கு ஒரு அம்மா மட்டும் தான். அவன் பின்னால் பெண்களே சுற்றும் பேரழகன் தான். பூந்தமிழ்ச்செல்வன் மட்டும் என்ன ஶ்ரீராமனோ கிடையாது. பெண்கள் பின்னால் சுற்றும் கண்ணப்பிரான் தான். 

 

“ம்மா… நா வயலுக்கு போய்ட்டு வரேன்…” சட்டை கைப்பகுதியை மடித்துவிட்டாறு கூறினான். 

 

அவன் அம்மா வசந்தா “செத்த இருய்யா… வாரேன்” அவசரமாக கைகளை முந்தானையில் துடைத்துவாறு டேபிளில் வைத்திருந்த ஒரு லோட்டாவை எடுத்துக் கொண்டு வந்தாள். லோட்டா நிறைய தண்ணீர் இருந்தது. அதை தன் மகனில் கையில் கொடுத்து,”உங்கிட்ட எத்தன தபாவ சொல்றது… எங்கையால தண்ணி வாங்கி குடிக்காம வெளிய கிளம்பாதே…” எப்பவும் இந்த ஒரு விஷயத்தில் கண்டிப்புடன் நடந்துக் கொள்வார்.

 

“சரிமா… நா மறந்துட்டேன்… இதுக்கெல்லாம் கோவிச்சுகதா…” அம்மாவின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினான். இப்படி சொன்னால் போதும் ஒரு நிமிடம் தன் கணவரை நினைத்துக் கண் கலங்குவார். அடுத்த நிமிடம் தன்னைத் தேற்றிக் கொண்டு,”நா ஒரு கிறுக்கி… புள்ள வெளிய கிளம்பும் போது கண்டதையும் நனைச்சு கண் கலங்குறே… நீ போய்ட்டு வா ராசா…” சேலைத் தலைப்பில் கண்களைத் துடைத்தவாறு கூறினார்.

 

“முடிந்து போனதை நனைச்சு கவலப்படாதே… நீ தைகிரிமா இரு…” என்று சொல்லும் போதே குரல் உடைந்து கண்ணீர் வரப் பார்த்தது. “ம்ம்…” என்று கரகரத்தக் குரலைச் சரிப் பண்ணிக் கொண்டு,”போயிட்டு வரேன்மா… நீ பார்த்து பத்திரமா இருந்துக்கோ…” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

 

அந்த ஊரில் இவனை வெறுக்கும் ஒருத்தி உண்டு என்றால் அது மகிழ்விழி. சிறுபெண்ணாக இருக்கும் போது அவனைப் பிடித்தது. பருவம் ஏய்தியப் பொழுது பெண்களின் பின்னால் சுற்றும் அவனை வெறுக்க ஆரம்பித்தாள். வெறுப்பு என்றால் அவள் போகிற பாதையில் அவன் எதிர்ப்பட்டால் வந்த வழியில் திரும்பி,வேறு பாதையில் போய்விடுவாள். 

 

அவளும் ஒதுங்கிப் போய் விடுதால், இவனும் கண்டுக் கொள்ளாமல் போய்விடுவான். இவனுக்கு தான் பின்னால் சுற்ற நூற்றுக்கணக்கான பெண்கள் இருக்கும் போது தன்னை வெறுக்கும் ஒருத்தியைப் பற்றி என்ன கவலை.

 

இன்றைக்கும் அப்படித் தான் மகிழ்விழி நடந்து வந்துக் கொண்டிருந்தாள். எதிர்திசையில் பூந்தமிழ்செல்வன் நடந்தது வந்து கொண்டிருந்தான். இதை எதிர்ப்பார்க்காதே மலர்விழி அவனை நெருங்கி வந்துவிட்டாள். பின்னர் அவசரம் அவசரமாகத் திரும்பிப் போனாள்.

 

அதைப் பார்த்த தமிழுக்கு ‘இவள் எப்பப் பாரு நம்மள பார்த்தா திரும்பி போயிடுறா…’ என்ற கோபம் துளிர்க்க,

“ஏய்… இந்தா புள்ள நில்லு…” என்ன சொல்ல வருகிறான் என கேட்பதற்குள், திரும்பி நின்று இடைமறித்து,”புள்ள… கிள்ள… என சொல்ல வேணாம்… மருவாதய பேசுங்க…” எகிறினாள். 

 

குலைக் கும்பிட்டுப் போட்டு,”இந்த மருவாதய போதுமா…” எனக் கேட்டான்.

 

“வித்தாரகள்ளி வெறகு ஒடிக்க போனாலாம்… அது கையோடு வந்து ஒட்டிக்கச்சாம்… நீரு போடற கும்புட பார்த்த அப்படி தானிருக்கு…” நக்கலாக சொன்னாள்.

 

அவன் கண்ணடித்து விட்டு, “இப்படி நா உன்னய பாரத்து கண்ணடிச்சனா…” அவள் கையைப் பிடித்து இழுத்துவிட்டு,”இப்படி கைய பிடிச்சு இழுத்தனா…”

 

அவன் இழுத்துப் பிடித்தக் கையை வெடுக்கென பிடுங்கி் கொண்டு கையைத் தேய்த்துக் கொண்டு,”மத்த பொம்பள புள்ளங்ககிட்ட நடந்துகற மாதிரி எங்கிட்ட நடந்துகிட்ட செருப்பு பிஞ்சிடும் நாபகம் வச்சுக்கோ…” என எச்சரித்தாள்.

 

இதைக் கேட்டவுடன் கோபம் எங்கிருந்து வந்ததோ பளார் ஒரு அறை விட்டான். கணம் நேரம் யோசிக்காமல் இவளும் பதிலுக்கு அறைந்து விட்டு,”நீயி அடிச்சா… அடி வாங்கிட்டு போக நா ஒன்னும் கேனச்சில்ல…” என்று ஒரு விரல் நீட்டிவிட்டு எச்சரித்து விட்டு விறு விறுவென நடந்தாள்.

 

தான் அறைந்ததும் கொஞ்சம் கூட யோசிக்காமல் பதிலுக்கு அறைவாள் என்று எதிர்ப்பார்க்காத தமிழுக்கு அதிர்ச்சி என்றால் மேலும் விரல் நீட்டி பேசியது எல்லாம் அதிர்ச்சியின் உச்சக்கட்டம். கன்னத்தைப் பிடித்துக் கொண்டு இதை யாரும் கவனித்தார்களா என சுற்றும் முற்றும் பார்த்தான்.

 

ஓரியிருவர் இவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதைக் கவனித்தவனுக்கு பெருத்த அவமானமாகிவிட்டது. அவளும் அவனை அடித்து விட்டு வாய்க்குள் முணு முணுத்துக் கொண்டேப் போனாள்.

 

எல்லோரும் பார்க்க தன்னை அடித்துவிட்டாளே என்ற அவமானத்தில் கூனிக்குறுகிப் போய் வீட்டிற்கே திரும்பிப் போனான். வீட்டில் யாரும் கவனிக்கும் முன் தன் அறைக்குள் புகுந்துக் கொண்டான். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான். கன்னம் சிவந்துகிடந்தது. அவள் அறைந்த இடத்தில் இன்னும் எரிச்சல் அடங்கவில்லை.

 

கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே,”நீ இதற்கெல்லாம் ஒருநாள் பதில் சொல்லியே ஆகனும்…” என சூளுரைத்தான்.

 

அவன் வந்தது கூட தெரியாமல் வசந்தா அவன் செல்லுக்கு பண்ணினார். அது அவன் ரூமில் இருந்து அடித்தது.

 

இதைக் கேட்டவுடன்,”வீட்டில் வச்சுட்டு போறதுக்கு இவனுக்கு எல்லாம் எதுக்கு போனு…” 

 

இவன் கோபம் இருப்பது தெரியாமல் பேசிக் கொண்டே போகவும், அதற்குள் போனை எடுத்து முழுவதும் கேட்டுவிட்டான்.

 

“ம்மா… லைன்ல இருக்கனா… இல்லயா… பார்த்து பேசு…” என்று எரிச்சலில் கத்தினான்.

 

வசந்தா அடைத்த காதை குடைந்து கொண்டே,”ஏன்டா… இப்படி கத்தற… காதை அடக்குது…” 

 

யார் மேல் இருக்கும் கோபத்தை யார் மீது காட்டுகிறேன் என்று தன் தவறைப் புரிந்தவனாக… உடனே தணிந்துப் போய்,”சாரிமா… ஏதோ நனைப்புல கோபமாக பேசிட்டே… தப்பா எடுத்துகாதிம்மா…” 

 

“உன்னறையில் இருக்கியா… நீ வயலுக்கு போகலியா… இல்ல… பேச்சு சத்தம் கேட்குது… அதனால் தான் கேட்டேன்…” சொன்னார்.

போனை அணைத்து விட்டு நேரில் வந்து நின்று,”இல்லமா… போகல… மனசே சரியில்ல…” என்று புலம்பினான்.

 

ஒன்றும் பேசாமல் சோபாவில் அமர்ந்துக் கொண்டு தலையை அசைத்து ‘வா’என்னும் விதமாக மடியை தட்டி காண்பித்து,”இங்க…படு” என்றார். 

 

அதே போல் படுத்தவுடன் எதுவும் கேட்காமல் தலையை கோதிக் கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் கோபம் மெல்ல மெல்ல குறைந்து மனம் சாந்தி அடைந்து கண்கள் தானாக சொருகியது. எவ்வளவு நேரம் தூங்கினான்.

 

விழிக்கும் போது மத்தியானம் ஆகிவிட்டது. கண்களை கசக்கி சோம்பல் முறித்தவாறே…”ஓஹோ… இவ்வளவு நேரம் தூங்கிட்டனா…” கடிகாரத்தைப் பார்த்துச் சொன்னான்.

 

தூங்கி எழுந்ததும் மனம் சற்று அமைதியாக இருந்தது. அதை தன் அம்மாகிட்ட,”தூங்கி எழுந்தும் மனசே கொஞ்சம் நிம்மதியா இருக்கு…” சொன்னான்.

 

“எந்த பிரச்சனையும் மறக்க வைக்கிற சக்தி தூக்கத்திற்கு உண்டு அத முதல்ல புரிஞ்சக்கொ கண்ணு… சரி எந்திரிச்சு போயி கைகால் மூஞ்சி கழுவிட்டு வா… நா போயி உன்க்கு சாதம் எடுத்து வைக்கிறே…” தமிழ் எழுந்ததும், வசந்தா எழப் போனார். ஆனால் இவ்வளவு நேரம் மடியில் தலை சாய்ந்து தமிழ் படுத்திருந்தால் கால் மரத்துப் போய் எழுந்ததும் நடையில் ஒரு சின்ன தடுமாற்றம். விழாமல் இருக்க தமிழின் தோள்களைப் பிடித்துக் கொண்டார். 

 

அப்பா இறந்த பிறகு தனக்குள்ள ஒரே சொந்தம் அவன் அம்மா தான். அம்மாவிற்கு ஒன்று என்றால் தனக்கே ஆனது போல் எதோ ஆகிவிட்டது போல தவித்துப் போய்விடுவான். அதே இன்றும் தமிழும் பதறிப் போய்,”ம்மா… என்னாச்சு…” துடித்துப் போனான்.

 

அவன் துடிப்பைப் பார்த்து,”ஏன்இப்படி பதற்ற… எனக்கொன்னும் இல்ல ராசா… கால் மரத்து போயிருந்தால் தடுமாறிட்டே… நீ பயப்படற மாதிரி வேற ஒன்னும் இல்ல…” சொன்னார்.

 

“ஏம்மா… உண்மைய சொல்… நா மூணு மணி நேரம் உன் மடியில படுத்திருந்தால தான் காலு மரத்து போச்சு…”

 

“ச்சே… ச்சே… அப்படி எல்லாம் எதுவுமில்ல சாமி… நீ கண்டதயும் நனைச்சு மனச போட்டு குழப்பிக்காத…” என்று சொல்லி தனக்கு ஒன்றுமில்லை என முடித்துவிட்டார். 

 

“இப்படிய உட்காரும்மா… நானே எடுத்து போட்டு சாப்பிட்டுகறேன்…” சொல்லிவிட்டு கைகால் அலம்ப புழக்கடைக்கு சென்றான். 

 

அவன் திரும்பி வருவதற்குள் வசந்தா மெல்ல எழுந்துப் போய் சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்துக் கொண்டார். 

 

அவன் திரும்பி வந்து பார்க்கையில் தன் அம்மா சாப்பாட்டு மேஜையில் உட்கார்திருப்பதை பார்த்து விட்டு கைகளை துடைத்துக் கொண்டிருந்த துண்டை தூக்கி எறிந்துவிட்டு பதட்டத்துடன்,”ம்மா… நா உன்னய சோபாவில தான் உட்கார்ந்திருக்க சொன்னேன். தட்டு தடுமாறிகிட்டு உன்னய யாரு இங்க வர சொன்னுது…” என்று கேட்டான். 

 

அதற்கு வசந்தா அமைதியாக,”என் கையால சாப்பாட்டு போட்டா… ஒரு பிடி சேர்த்தி திம்ப…” சொன்னார்.

 

அப்படி சொன்ன அன்னையை வாஞ்சையாக அணைத்துக் கொண்டு அன்னை முன் சாப்பாட்டு தட்டை நீட்டினான். வசந்தா கண்கள் நிறைய பாசத்துடன் தட்டை வாங்கி தட்டில் சாதமட்டுமல்ல… அன்பையும் சேர்த்து வழங்கினார். தன் அன்னை கையால் கொடுத்த உணவு என்பதால் வயிறார உண்டு விட்டு எழுந்து கை அலம்பிட்டு வந்தான்.

 

உடனே தன் தாயிடம் சொல்லிக் கொண்டு வயலுக்கு கிளம்பிவிட்டான். கிளம்புவதற்கு முன் தன் தாயை சாப்பிட வைத்து, தூங்கச் சொல்லி அவர் அறையில் கொண்டு போய் விட்டு கிளம்பினான். 

 

மனம் காலையில் அவளை சந்தித்த இடத்தை இப்ப பார்த்தும் பாரமாக இல்லை. அன்னை மடியில் படுத்ததாலோ தான் என்னவோ சற்று ஆசுவாசமாக உணர்ந்தான்.

 

வயலுக்கு போய் பயிருக்கு இயற்கை பூச்சிகொல்லி நல்லா அடிச்சிருங்களா… என்னுன்னு பார்த்து விட்டு உரக்கடைக்கு கிளம்பினான். அதறகாகவே புல்லட் வண்டியை எடுத்து வந்திருந்தான். புல்லட்டில் போகும் போது எவளை மறக்கவேண்டும் என்று நினைத்தானோ… காற்று வாக்கில் அவள் நாபகம் நினைவில் வந்து ஒட்டிக் கொண்டது. அவள் அறைத்த இடம் இப்பவும் வலித்தது. அறைந்த கன்னத்தை தடவிக் கொண்டான். இதற்கெல்லாம் சேர்த்து வைத்து அவளை வாழ்நாள் முழுவதும் பழி வாங்கவேண்டும் என வன்மம் கொண்டான்

 மனதில் அந்த உறுதி எடுத்தவுடன் நிம்மதியாக உணர்ந்தான்.