ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 7

 

7

 

 

ஆரனின் நெருக்கத்தில் பயந்து கதவோரம் சென்று தஞ்சம் கொண்டவளை விடாமல் நெருங்கி நெறித்து நின்றான் ஆரன்.

 

அங்கங்கள் மட்டுமல்ல அதரங்கள் கூட ஒன்றையொன்று ஒட்டி ஒட்டாத நிலை.‌..

 

 

 

அவளது பயந்த விழிகளை பார்த்து அசுரனுக்குள்ளோ கொண்டாட்டம்.. 

 

விரல்களால் அவள் தாடையை மெதுவாக நெருங்க.. தன்னை நெருங்கும் அந்த விரல்களை அவள் மிரட்சியோடு பார்க்க.‌. அவனோ விரல்களால் இறுக்கி அவள் தாடையை தன்னை நோக்கி இழுத்தான்.

 

 

மிரட்சியோடு நோக்கிய‌ மான் விழிகளை அவனின் அசூர விழிகள் கவ்வி விழுங்கிக் கொண்டது. 

 

 

தாடையில் அழுத்தம்‌ கூட கூட.. அவள் கண்களில் இப்பொழுது பய ரேகை.. அதை ரசித்து பார்த்தான் அவன்.

 

 

மெல்ல அவனது பார்வை அவளது பிறை நெற்றியை அளந்து..

 

காண்டீபனின் வில்லென வளைந்து நின்ற புருவங்களை தாண்டி.. மருளும் மான்விழிகளை உள்வாங்கி.. கனிந்த கன்னங்களை கடிக்கும் எண்ணங்கொண்டு.. துளி வைரத்தில் மினுக்கும் மூக்குத்தி அணிந்த மூக்கை சீண்டி.. மீன் குஞ்சு வாயென ஓவென திறந்திருந்த அவளின் இதழ்களில் வந்து நின்றது அவன் அந்த பார்வை.. பொல்லா ரசிக்கும் பார்வை!!

 

 

அதுவும் இவன் தாடை பிடித்த அழுத்தத்தில் இன்னும் இதழ்களை பிளக்க.. அந்த பிளந்த இதழ்களுக்கு இடையே கனக்கச்சிதமாக அவனது முரட்டு இதழ்களை கொண்டு வந்து நிறுத்தி இருந்தான்.

 

 

அப்போது அவனின் பார்வை 

 

மெல்லிய‌ இதழ் கடையோரம் இதுகாறும் அவன் கண்ணில் படாத அந்த சிறிய‌ மச்சமொன்றை கண்டது. சற்றே விரிந்த அவன் விழிகள் அவன் ரசிப்பதை கூறி..

 

அவனின் மையலை ஏற்றி.. அதனை சுவைக்க இம்சித்தது.

 

 

வார்த்தைகள் இல்லை..

 

மௌன பாஷையில் பரிமாறினான் தன் அலைகளை அவளுள்.

 

 

 

அவனின் அந்த பார்வை வீச்சையும் அவனால் அனுப்பப்படும் அந்த அலைகளையும் கடந்திட முடியாமல் கரைந்து துவண்டு கண்களை இறுக மூடினாள் மயூரி. 

 

 

அவனுக்கே உரிய அந்த பிரத்யேக வாசனையோடு கலந்து வந்த சற்றே சிகரெட்டின் நெடி.. கூடவே அவன் பயன்படுத்தும் உயர் ரக பர்ஃப்யூமின் வாசனையும்.. அவள் நாசியில் நுழைந்து சுவாசத்தில் கலக்க.. ஏற்கனவே அந்த வாசத்தினை, அண்மையில்.. வெகு நெருக்கத்தில் நுகர்ந்த உணர்வு மூளையில் நன்றாகவே பதிந்து இருந்தது அவளுக்கு. அவளின் எல்லா கேள்விகளுக்கான மொத்த விடை.. இல்லை இல்லை இருக்காது என்ற தவிப்புக்கெல்லாம் ஆம் என்று அடித்த சொன்ன பதில்..‌

 

 

கண்களை மூடி அந்த கணத்தை கிரகிக்க முடியாமலும்.. அதேசமயம் அவனது ஸ்பரிசத்தை ஸ்பரிசிக்க முடியாமலும் அவள் தள்ளாட..

 

 

 

“ஆர் யூ ஓகே மயூரி?” என்று சற்று தொலைவில் கேட்ட குரலில் அவள் சட்டென விழித்து பார்க்க.. கதவை ஒட்டியபடி அவள் நின்ற நிலையில்தான் இருந்தாள். ஆனால் அவனோ அவள் உள்ளே நுழையும்போது அமர்ந்திருந்த அதே இருக்கையில் அமர்ந்து ஒரு கையால் போனை நோண்டிக் கொண்டே அவளை பார்ப்பது போலவே பார்த்திருந்தான்.

 

 

அவனை அவ்வளவு தூரத்தில் பார்த்தவளுக்கு சற்றுமுன் நடந்த நிகழ்வுகள் கண்ணில் வந்து போனது. இவன் இவ்வளவு நேரம் இங்கேதானே இருந்தான்? எப்போ அங்க போனான்? என்று யோசிக்க.. நாம் ஒரு நொடி தானே கண்ணை மூடினோம். அதற்குள் அந்த இடத்திற்கு அவன் எப்போது சென்றான். அதுவும் இல்லாமல் நிர்மலமாக இருந்தது அவனது முகம் சற்று முன் காட்டிய பாவனைகள் எதுவும் இன்றி..

 

 

 

குழம்பித்தான் போனாள் காரிகை அவள்.. ஒருவேளை கனவு கண்டோமா? நேற்று இரவு கண்ட கனவின் தாக்கமா? என்று பலவாறு அவள் சிந்தித்துக் கொண்டிருக்க.‌.. அவனோ இருந்த இடத்தை விட்டு எழவே இல்லை. மீண்டும் மொபைலில் கண் பதித்து இருந்தாலும் கருத்து எல்லாம் அவள் மீது தான்!!

 

 

 

“ஆர் யூ ஆல்ரைட்? ஏதோ பேசிக்கிட்டே உள்ள வந்தீங்க.. அங்கேயே ஷாக்கடிச்ச மாதிரி நின்னுடிங்க??” என்றவன் குரலில் சாதாரண விசாரிப்பு மட்டுமே..

 

 

 

இவளுக்கு தான் மொத்த உடலும் பதறி கை காலெல்லாம் தளர்ந்துபோய் இருந்தது. “இல்ல நீங்க.. என்கிட்ட.. இங்க வந்து…” என்று குழறிக் குழறி வந்தன அவளது வார்த்தைகள்..

 

 

 

“வாட்???? நான் அங்க வந்தேனா?? வாட் ரப்பிஷ்!! நல்லாதான் இருக்கீங்க??” என்று எழுந்தவன் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான். அவளோ நடுங்கும் கைகளோடு அதை வாங்க முடியாமல் திணறினாள்.

 

 

“ஏன்.. ஏன் இவ்வளோ பயம்? அப்படி என்ன செய்திடுவேன் நான்?” என்றவனின் கைகள் அவள் கையை இழுத்து பிடித்து அதில் தண்ணீர் பாட்டிலை வைத்தது.

 

 

 

“ஃபர்ஸ்ட் தண்ணீர் குடிங்க!!” என்றதும் அப்பவும் அவள் உறைந்த பார்வையோடு அப்படியே சிலை என நிற்க..

 

 

 

“ஹேய்.. தண்ணி குடி!! நான் ஒன்னும் உன்னை கடித்து தின்று விட மாட்டேன்” என்று ச்றறே கோபமான அவனின் குரலில் தன்னிலைக்கு வந்தவள் அவசரமாக தண்ணீரை குடித்து முடிக்க.. அப்பொழுது நிரஞ்சன் அவனது நண்பன் சபரியோடு வரவும் சரியாய் இருந்தது.

 

 

மயூரியை பார்த்த நிரஞ்சன் “வா வா மயூரி.. அர்ஜெண்டா சபரியை கூப்பிட போயிட்டேன்! நீ ஏதோ கேஸ் விஷயமா கேட்டிருந்தல.. வா வந்து உள்ள உட்காரு..” என்று சாதாரணமாக கூறி முன்னே செல்ல.. 

 

 

சபரி அருகே நின்ற ஆரனை தான் பார்த்துக்கொண்டிருந்தான். இவர்தான் நிரஞ்சன் சொன்ன ஆளோ? என்று ஆரனின் தரிசனத்திற்காக அவனையே பார்த்திருந்தான்.

 

 

 

“நிரஞ்சன்!!” என்ற ஆரனின் அழுத்தமான குரலில் தான் “என்ன பாஸ்..” என்று அருகில் வந்தவனிடம் மயூரியை கையை காட்டினான்.

 

 

 

“ஆமாம் உங்க சிஸ்டருக்கு ஏதும் ப்ராப்ளமா?? அன்னைக்கும் அப்படித்தான் ஆச்சு.. இன்னைக்கு என்னை பார்த்ததுமே இப்படி மிரண்டு நிற்கிறாங்க.. கூப்பிட கூப்பிட.. ஏதோ திகில் படம் பாக்குற எஃபெக்ட்ல கண்ணை மூடிக்கிட்டு நிற்குறாங்க.. அந்த புறங்கையை வாயில் வைத்து கத்தாதது ஒன்றுதான் பாக்கி.. நான் தண்ணீ கொடுத்தால் அது கூட வாங்காம அப்படி பார்க்கிறாங்க.. 

 

அவங்க தண்ணி குடிப்பாங்க தானே??” என்ற அவனின் கடைசி வார்த்தைகள் மயூரியை மட்டுமல்ல நிரஞ்சனுக்குமே ஜெர்க்கானது.

 

 

 

“அப்படியெல்லாம் ஒன்னு இல்ல.. ஸ்கூட்டரில் வெயில வந்தது ஒரு‌மாதிரியா இருந்தது. அதுதான் கொஞ்சம் டவுனா ஃபீல் பண்ணுனேன். மத்தப்படி.. ஐ அம் ஓகே!!” என்றவள் நிரஞ்சனை பார்த்து, “நிரஞ்சா.. நான் கிளம்புறேன் அப்புறம் உன் கிட்ட பேசுறேன்” என்று அவள் நழுவ முயல.. “இரு இரு இப்பதானே வெயில வந்தேனு சொன்ன.. கொஞ்ச நேரம் உக்காந்து போகலாம்” என்று அவளை அங்கேயே அமர வைத்தவன், அருகே நின்றிருந்த சபரியை ஆரனிடம் அறிமுகம் செய்து வைத்தான்.

 

 

மூவரும் சற்று நேரம் கம்பெனி லீகல் சம்பந்தப்பட்ட சில பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள்‌. ஆரனோ சபரியிடம் பல கேள்விகளை கேட்க.. வரும்போதே நிரஞ்சன் சொல்லி தான் அழைத்து வந்திருந்தான் சபரியை.. “டேய் இப்ப வந்திருக்கிற இடம் கொஞ்சம் பெரிய இடமா தாண்டா தெரியுது! நீ மட்டும் சொதப்பாமல் எல்லாத்தையும் சரியா செய்தால் நீனும் வாழ்க்கையில் செட்டில்!” என்று கூறியிருக்க.. அதை மனதில் நிறுத்தி.. தனக்கு வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து விட வேண்டுமென்ற நோக்கத்தில் ஆரனின் கேள்விகளுக்கெல்லாம் சட்டென்று பதில் சொல்லாமல் சற்று யோசித்தே தெளிவான பதில்களை உரைத்துக் கொண்டிருந்தான் சபரி.

 

 

இந்த அவசரக்குடுக்கை நிரஞ்சனை விட இவன் பரவாயில்லை என்று மனதில் நினைத்தாலும் அதை முகத்தில் காட்டாமல் தன்னுடைய அபிஷியல் நம்பரை கொடுத்தவன் “நாளைக்கு காலைல 8 மணிக்கு இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க சபரி.. நான் உங்களை எங்க வரணும்னு சொல்றேன்” என்றவன் இருவருக்கும் பொதுவாக தலையசைத்து விட்டு கிளம்பினான் மயூரியை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே..

 

 

 

அதுவரை மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த மயூரி மெல்ல மெல்ல மூச்சை விட்டு தளர்வோடு அமர்ந்தாள் இருக்கையில்..

 

 

 

ஆண்கள் இருவருக்கும் பேச நிறைய இருந்தது. அதுவும் இப்ப வந்து சென்றவனை பற்றிய நிறைய கேள்விகள் சபரியின் மண்டையில் வண்டென குடைந்து கொண்டிருக்க.. ஆனால் அருகில் இருந்த மயூரியை பார்த்து சற்றே தயங்கினான். இது தொழில் தர்மம்.. 

 

 

 

இவர்கள் அவர்களுடைய கிளைண்டை பற்றி பேசும் பொழுது அருகில் நம்பிக்கையானவர்கள் இருந்தாலும்கூட வார்த்தையை விட கவனிக்க வேண்டும்.

 

 

ஏனென்றால் இப்போது நம்பிக்கையானவர்கள் பிற்காலத்தில் நம்பிக்கை துரோகம் செய்யவும் வாய்ப்புகள் ஏராளம் இக்கலியுகத்தில்…

 

 

அதனால் சபரி தயங்கிக் கொண்டு இருக்க.. ஆனால் மண்சட்டியில் விட்ட நண்டென சலசலத்துக் கொண்டே இருந்தான் நிரஞ்சன்.

 

 

“டேய்.. உன் கசின் ஏதோ கேட்டு வந்து இருக்காங்க.. மொதல்ல அவங்க கிட்ட பேசி அனுப்புடா.. பாவம் ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க” என்று நிரஞ்சனின் மடையை மயூரியை நோக்கி மாற்றிவிட்டான் சபரி.

 

 

 

ஆரன் சென்றதும் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பது எதுவும் மயூரியின் காதுகளில் விழுந்தாலும் கருத்தில் ஏதும் பதியவில்லை.

 

 

அவள் நினைவுகளை மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தான் அந்த அசுரன்!

 

 

‘அவன் அருகில் வந்ததும் உண்மை.. தன்னை நெருங்கி நின்றதும் உண்மை.. தன் தாடையை அழுத்தமாக பிடித்து அவன் முகத்தருகே இழுத்தும் உண்மை.. உதடுகள் இரண்டும் உரசும் நிலையில் என்னை வைத்ததும் உண்மை.. ஆனால்.. ஆனால்.. நான் கண் திறந்து பார்க்கும் போது அவன் அருகில் இல்லை. அதைவிட, அப்படி ஒன்று நடக்கவே இல்லாத மாதிரி அமர்ந்திருந்தானே.. ஏன் அப்படி செய்தான்?? எதற்கு அப்படி செய்யவேண்டும்?’ என்று கேள்விக் கணைகள் அர்ஜுனனின் அம்புகளாய் அவளை சரம் தொடுத்து கொண்டிருந்தது.

 

 

 

“மயூரி!!!” என்ற நிரஞ்சனின் அழுத்தமான குரலில் நிமிர்ந்து பார்த்தவள் “என்ன… என்ன கேட்ட?” என்று திரும்பவும் கேட்க..

 

 

 

“நீ சரி இல்லை மயூ.. வெயில்ல வந்தது ஒத்துக்கல்லையா? காலையில சாப்பிட்டியா இல்லையா நீ? இரு நான் போய் ஜூஸ் வாங்கிட்டு வரேன். குடி முதல்ல.. நானே உன்னை கொண்டு வந்து விடுறேன். நீ தனியா எல்லாம் போக வேண்டாம்” என்று நிரஞ்சன் மாமன் மகளின் நலத்தினை பார்த்திட… 

 

அவளோ “இல்ல வேண்டாம் வேண்டாம்.. நீ உன் ப்ரண்ட் கூட பேசிட்டு இரு. நான் நைட்டு கூட உன்கிட்ட கேட்டுக்குறேன். அது ஒன்னும் அவ்வளவு சீக்கிரம் கொடுக்க வேண்டிய கேஸ் இல்ல.. நான் பாத்து போறேன்” என்று எழுந்ததவள், “இப்ப வந்துட்டு போனாரே.. அவர்…” என்று அவள் இழுக்க..

 

 

 

“அன்னைக்கு நாம பார்ட்டில பார்த்தோமே.. அப்புறம் ஹோட்டல்ல கூட பார்த்தோமே.. அதே ஆள்தான் பெயர் வித்யூத்!! என்கிட்ட லீகல் அட்வைசர் வேணும்னு கேட்டு இருந்தார். நான் தான் சபரியை ரெக்மெண்ட் பண்ணேன். அதுக்கு தான் சபரியை கூப்பிட போயிருந்தேன்.. நீ அதுக்குள்ள அவரையும் பயமுறுத்தி.. என்னையும் இப்போ பயமுறுத்துற.. நீ ஓகே தானே?” என்றவனிடம், “ஈஸி நிரஞ்சா.. ஒன்றுமில்லை ஐ அம் ஓகே! நான் கிளம்புறேன்” என்று தனது வெஸ்பாவை உயிர்ப்பித்து சென்றுகொண்டிருந்தவள் பின்னே தான்.. பின்னாளில் அவளின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க சித்தம் கொண்டிருக்கும் அசுரனும் வந்து கொண்டிருந்தான்.

 

 

அருகில் இருந்த சிக்னல் வரை ஒன்றாக பயணித்தவர்கள், அதன்பின் தத்தம் வழியில் அவர்கள் பயணித்தாலும்.. அவர்கள் ஒன்றாக பயணிக்கும் நாள் வெகு அருகில்..

 

 

 

அதன் பின் அன்றைய நாள் வேலைகள் அவனை எடுத்துக் கொண்டாலும்.. அவ்வப்போது அவன் கண்முன்னே அந்த மீன் குஞ்சு போல பிறந்த இதழ்கள் மட்டும் கண்முன்னே வந்து சென்று கொண்டிருந்தது. சிகையை சிலுப்பி அவளின் நினைவுகளை விரட்ட முடிந்தாலும்.. சற்று நேரத்திலேயே சிறகடித்துப் பறந்து அவன் முன்னாலே வந்து நிற்கும் அவள் நினைவுகளை.. அதிலும் அந்த சிறு மச்சத்தை என்னதான் செய்வது??

 

 

“ஓ காட்!! ரொம்ப இம்சை பண்றடி மயூ!” என்று கடிந்து கொண்டவன், ஒரு‌ கட்டத்திற்கு மேல் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு ஜன்னல் வழியே வெறித்து‌க் கொண்டிருந்தான்.

 

 

 

அவள் விழிகளில் தெரிந்த குழப்பமும் அதிர்ச்சியும் அவனுக்கு இன்னும் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. “குழம்பு மயூ பேபி.. நல்லா குழம்பு.. இவன் யார்? எதற்காக செய்கிறான்? என்று தெரியாமல்.. புரியாமல் குழம்பிக் கொண்டே இரு!” என்று வன்மமாக வளைந்தது அவனது உதடுகள்.

 

 

அன்று இரவு வழக்கம்போல தந்தையிடம் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் விஜயேந்திரனும் அவனது கண்களை கவனித்தார்.

 

 

முன்பிருந்த மகிழ்ச்சியோ அதன் பின்பு இருந்த வலியோ எதுவும் இல்லாமல் இன்று நிர்மலமாக இருந்தது அவனது கண்கள். தந்தையை அறிந்தவன் ஆகையால் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் தொழில்துறை தகவல்களையும் கூடவே அவரின் உடல்நலத்தையும் இன்னும் பொதுவான விஷயங்களை மட்டுமே பேசிக் கொண்டிருந்தான். பேசி முடித்துவிட்டு வழக்கமான ஒரு முத்தத்தோடு குட்நைட் உரைத்துவிட்டு அவன் தன் டேப்பை கட் செய்ய.. அந்த பக்கம் விஜயேந்திரனோ.. “பய உஷார் ஆகிட்டான்! அவன் கண்களை நான் படிக்கிறேனு தெரிஞ்சுக்கிட்டான். ஆனால் ஏதோ ஒன்னு அவனை பாதிக்குது.. குழப்புது.. டேய் ஆரு!! உனக்கு அப்பாடா நானு கண்டுபிடிக்கிறேன்!” என்று சூளுரைத்துக் கொண்டார்.

 

 

 

செந்தூராரின் வீட்டில்..

 

 

பெரும்பாலும் இரவு உணவு பெண்கள் மட்டுமே இணைந்து உண்பது. எப்போதாவது ஆண்கள் வந்து இணைந்து கொள்வர். அன்றும் அதுபோல தெய்வானை அம்மாள் எட்டு மணிக்கு தனது சத்துமாவு கஞ்சி குடித்துவிட்டு உறங்க சென்றுவிட.. வேதவள்ளி மோகனாவள்ளி இருவரும் அமரந்திருக்க.. அவர்களுக்கு எதிர்ப்புறம் ஆராதனாவும் மயூரியும் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தார்கள். வத்சலா பதார்த்தங்களை கொண்டு வந்து வைத்த வண்ணம் இருந்தார்.

 

 

 

ரஞ்சனி வழக்கம்போல் இவர்களோடு அமராமல் அம்மாவின் அருகிலேயே…

 

 

 

மயூரின் மனம் உணவில் மட்டுமல்ல அருகில் அமர்ந்து சல சலவென வளவளத்துக் கொண்டிருக்கும் ஆராதனாவின் பேச்சிலும் இல்லை.

 

 

“டி மயூரி.. அந்த பட்டர்ஃப்ளை பென்டன்ட் மேனுஃபாக்சரிங்கில் இருந்து வந்துருச்சுடி.. இரண்டு பீஸ் எடுத்து தனியாக வைத்து விட்டேன்” என்று மெதுவாக அவள் காதில் கிசுகிசுத்தாள்.

 

 

 

இவர்கள் இருவரும் ஒன்றோடு ஒன்று இம்மாதிரி கிசுகிசுத்து பேசினாலோ சிரித்துப் பேசினாலோ.. அது ரஞ்சனிக்கு சற்றும் பொறுக்காது. ‘அப்படி என்ன இவர்களுக்குள் ரகசியம்?’ என்று பொறாமையோடு தான் பார்ப்பாள். அவளால் இவர்களோடு ஒன்றவும் முடியாது. ஒன்றாக இருப்பவர்களைப் பார்த்து சகிக்கவும் முடியாது..

 

 

 

இதில் ஜாடைமாடையாக ஆராதானாவை குத்தி பேசுவாள். ஆனால் மயூரியிடம் அது முடியவே முடியாது. நேரடியாகவோ ஜாடையாகவோ அவளிடம் பேசினால்.. திருப்பி கொடுப்பதோடு சில சமயம் நிமலனுக்கு நேராகவே அதை சொல்லி விடுவாள். நிமலன் முன்னால் தான் தரம் குறைவது ஒருபோதும் ஒப்பு மாட்டாள் ரஞ்சனி. அதனாலேயே இவளிடம் அதிகம் வைத்துக் கொள்வதில்லை.. 

 

 

 

 

“என்ன ஆரா.. மயூ காதை பேசிப் பேசியே ஓட்டை ஆக்கிடுவ போல.. கொஞ்ச நேரம் அவளை சாப்பிட தான் விடேன். அவ மூஞ்சியே சரி இல்ல ரொம்ப டயர்டா இருக்குற மாதிரி இருக்கா” என்று நாக பாம்பின் நஞ்சை அமிர்தமாக்கி பேசினாள் ரஞ்சனி.

 

 

 

அப்போதுதான் ஆராவும் நன்றாக கவனித்தாள். மயூரி சாப்பாட்டை உண்ணாமல் கையால் அளந்து கொண்டே இருப்பதை பார்த்து…

 

 

 

“என்னாச்சு மயூ.. ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்று அவளை தோளில் கை வைத்து உலுக்க அப்போதுதான் ஆரனிடம் இருந்த அவளது எண்ணம் எல்லாம் வீட்டுக்குள் நுழைந்தது.

 

 

 

“ஒன்னும் இல்லடி.. ஒரு கேஸ் விஷயமா யோசிச்சுக்கிட்டே இருந்தேன். அது இன்னும் டேலியாகவே இல்ல.. இன்னைக்கு ஃபுல்லா அந்த ஒர்க்கு தாண்டி.. ரொம்ப டயர்டாக இருக்கு” என்று கூறியவளை பார்த்து, “அப்படி எல்லாம் ரொம்ப உன்னை கஷ்டப்படுத்தி கிட்டு வேலை பார்க்காத மயூமா.. வேலை எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம்ம உடம்பும் முக்கியம். நீ இதுக்கு மேல இதை சாப்பிடமாட்ட.. வை!” என்ற வேதவள்ளி “அண்ணி நல்லா திக்கா ஒரு டம்ளர் பால் காய்ச்சி அதில் கொஞ்சம் நட்ஸையும் கட் பண்ணி போட்டு மயூவுக்கு குடுங்க.. 

 

புள்ள முகமே சரியில்லை” என்று ரஞ்சனி ஆரம்பித்ததை அழகாக வேதவள்ளி முடித்துவைக்க…

 

 

 

இடையில் அப்படி ஒருவள் பேசியதே அங்கே யாருக்குமே ஞாபகமில்லை. மயூரியின் அன்னையும் “ஆமா அண்ணி.. நீங்கள் சொல்வது சரிதான். நான் இப்பவே போய் பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன்” என்று தன் செல்ல மகளின் ஆரோக்கியத்திற்காக அவரும் அடுப்படி விரைந்துவிட்டார்.

 

 

 

“எப்படி பால் போட்டாலும் இந்த பெரியம்மாவ வச்சுக்கிட்டு ஒன்னும் முடியல மா.. கடுப்பாகுது! நானே நல்லவிதமா பேசுறதே எப்பவோ ஒரு நாள் நடக்கிற அபூர்வம்.. அதையும் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கெடுத்து விடுகிறார்கள். இந்த மயூரியை என்பக்கம் திருப்பவே முடிய மாட்டேங்குது!” என்று தன் அன்னையிடம் குறைபட்டுக் கொண்டாள் ரஞ்சனி.

 

 

 

“அவளை எதுக்கு உன் பக்கம் திருப்பனும்‌ ரஞ்சி? நீ வளைக்க வேண்டிய ஆளை வளைத்தால் இவர்கள் எல்லாம் தன்னால வாலாட்டி கிட்டு உன் பின்னே வருவார்கள். புரியுதா? தேவையில்லாமல் அவகிட்ட ஏதும் வாயை கொடுத்து நீ வாங்கி கட்டி எல்லாரும் முன்னாலும் தலைகுனியாதே! எங்க வேலை செய்ய வேண்டுமோ.. அங்கு வேலை செய்!!” என்று மகளை அர்த்தமுள்ள பார்வை பார்த்தார் மோகனா.

 

புரிந்தது என்று விதமாய் சிரித்தாள் ரஞ்சனி.

 

 

 

மோகனாவின் எண்ணமும் ரஞ்சனி எண்ணமும் வேதவள்ளிக்கு நன்றாக தெரியும். ஆனாலும் அமைதி காத்தார். இங்கு ஒன்றோடு ஒன்று திருமணம் செய்தால் நிறைய சிக்கல்கள் வரும். எல்லாவற்றுக்கும் முதலாக முதலில் மயூரி திருமணம் முடிந்தால் தான் நிமலன் திருமணத்தை பற்றி யோசிப்பான். ஆனால் மயூரி வயதையொத்த ஆராதனாவும் ரஞ்சனியும் இருக்க அவளுக்கு மட்டும் சட்டென்று பேசி விடவும் முடியாது.

 

 

 

இடியாப்ப சிக்கலாய் குடும்ப சூழல் இருக்க.. இதை எப்படி விடுவிக்க என்று அனைவரையும் அவர்கள் விழி பார்வையிலேயே மனதைப் படித்து அறிந்துகொள்ளும் வேதவள்ளிக்கு வேதனைதான் மிச்சம்.

 

 

 

ஆனால் அனைத்தையும் அவன் ஒருவன் தன் கையில் எடுத்து மாற்றப் போகிறான் என்றோ.. குடும்பத்தையே குலைக்க போகிறான் என்றோ நினைக்கவில்லை அவர்.

 

 

 

மறுநாள் மாலை தனது வெஸ்பாவில் வந்த மயூரியை மறைத்து.. கண்களில் புது களிப்புடன் அவள் முன்னே கிப்ட் பாக்ஸை நீட்டினான் ஆரன்.

 

 

 

அவள் அதை வாங்கலாமா வேண்டாமா என்று யோசிக்கலாம் இல்லை.. இவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று தான் யோசித்தாள். ஆனால் அது முடியாதே!! இவள் வண்டியை நிறுத்தவும் அவள் முன்னே நெருங்கி வந்தவன் வண்டியில் இருந்த சாவியை அப்போதே கைப்பற்றி விட்டான் “உன்னிடம் கொஞ்சம் பேசணும் மயூ!!” என்றவாறு..

 

 

அவள் அதிர்ந்து அவனையே பார்க்க..

 

 

“வர்ரே வாவ்..” என்றவனின் விரல் அவன் கட்டுபாட்டை மீறி கள்ளியவளின் மச்சத்தை வருடியது.

 

 

“அழகான மச்சம்! அம்சமா அமர்ந்திருக்கு!!” என்றவனின் பேச்சில் அதிர்ந்து எழுந்தவளின் வெ

ஸ்பா பிடிமானம் இன்றி கீழே விழு, வண்டியின் ரிவியூ கண்ணாடி நொறுங்கியது.

 

நொறுங்கிய கண்ணாடியையும் அவனையும் திரும்பி திரும்பி பார்த்தாள் விழிகள் விரித்தப் படி…

 

கண்ணாடி உடைவது அபசகுணம் என்று அவளுக்கு சொல்லப்பட்டு இருக்க.. இந்த அபசகுணம் யாருக்கு???